உடலுக்குத் தெம்பு தந்து மருந்தாகும் குடைவாழை

உடலுக்குத் தெம்பு தந்து மருந்தாகும் குடைவாழை
Updated on
1 min read

நெல்லை மானாவாவரியில் சாகுபடி செய்ய முடியாது, எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டுமென்று தவறாக நம்பப்படுகிறது. பாரம்பரிய நெல் ரகங்களுக்கு இந்தக் கட்டுப்பாடு இல்லை.

தமிழகத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம் வட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் இருந்துள்ளன. இதில் இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரவும், உவர் நிலத்தைத் தாங்கி வளரவும், கடலோரப் பகுதியில் கடல் நீர் உட்புகும் நிலத்தில் சாகுபடி செய்யவும் ஏற்ற பாரம்பரிய நெல் வகைகள் முக்கிய இடம்பிடித்துள்ளன.

அந்தப் பாரம்பரிய நெல் வகைகளைச் சாகுபடி செய்யும் வழக்கம் வேதாரண்யம் உழவர்களிடம் இன்றைக்கும் உள்ளது. எந்தப் பாசன வசதியும் இல்லாமல், மழையை மட்டுமே நம்பி உள்ள மானாவாரி பகுதிகளில் பல பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி செய்யப்பட்டுவருகின்றன.

தமிழகப் பெருமை

இதில் தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் நெல் ரகம் குடைவாழை. விதைத்த பிறகு ஒரு முறை மழை பெய்துவிட்டால் போதும், மூன்று நாட்களில் விதை முளைத்து நிலத்தின் மேல் பச்சைப் போர்வை போற்றியது போல் காட்சியளிக்கும். மிக வேகமாகவும், இயற்கைச் சீற்றங்களைத் தாங்கியும் வளரும் தன்மை கொண்டது இந்த ரகம். இந்த ரகத்துக்குக் கோடையில் ஆடு, மாடு கிடை அமைத்து நிலத்தை வளப்படுத்துவது அவசியம்.

பெயர்க் காரணம்

நூற்றி முப்பது நாள் வயதுடைய இந்த நெல் ரகம், மோட்டா ரகம். சிவப்பு நெல், சிவப்பு அரிசி. அறுவடையின்போது கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்ததுபோல் காட்சியளிப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதனால்தான் இதற்குக் `குடைவாழை’ என்று பெயர்.

தெம்பு தரும் உணவு

உணவு, அனைத்துப் பலகாரங்களைச் செய்வதற்கும் ஏற்ற நெல் ரகம் இது. விவசாயிகளும் தொழிலாளர்களும் இரவு, காலை என இரண்டு வேளைக்கும் சேர்த்துச் சமைத்து இரவில் சாப்பிட்டுவிட்டு, மீதி சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் பழைய சாதம் அல்லது நீராகாரமாக வயலுக்கு எடுத்துச் செல்வார்கள். காலை, மதியத்துக்கு இடையே ஒரே வேளை பகல் உணவாகப் பழைய சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு, கொஞ்சமும் சோர்வு அடையாமல் வேலை செய்யும் தெம்பை இந்த ரகம் கொடுக்கும்.

மருந்தாகும் குடவாழை

நீரிழிவு நோய் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திறன் குடைவாழைக்கு உண்டு. குடலைச் சுத்தப்படுத்துவதிலும், மலச்சிக்கல் இல்லாமல் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் குடவாழை முக்கியப் பங்கு வகிக்கிறது.

நெல் ஜெயராமன் தொடர்புக்கு: 94433 20954

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in