Last Updated : 09 May, 2015 10:47 AM

 

Published : 09 May 2015 10:47 AM
Last Updated : 09 May 2015 10:47 AM

அரண்மனைகளை உருவாக்கியவர்

எட்வார்டு ப்ளோர் இங்கிலாந்து நாட்டில் டெர்பி நகரத்தில் 1787-ம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தை வழக்கறிஞர், அரும்பொருள்கள் சேகரிப்பாளர். அவர் தந்தை இங்கிலாந்தின் புகழ் பெற்றவராக இருந்தார். மகனும் அவரைப் பின்பற்றி அரும்பொருள்கள் துறையிலேயே இயங்கினார். பிறகு தேவாலய அரும்பொருள்களையும் கட்டிட அரும்பொருள்களையும் ஓவியமாகத் தீட்டியுள்ளார். இதை அவரே History of Rutland என்ற தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அவருக்குக் கட்டிடங்கள் குறித்து எப்படி ஆர்வம் வந்தது என்பதை வரலாற்றாசிரியர்கள் பலரும் பலவிதமாகக் கருத்தைச் சொல்கிறார்கள். சார்லஸ் லாக் ஈஸ்ட்லேக் தன்னுடைய புத்தகத்தில் எட்வார்டு புடைப்புச் சிற்பியாக அவர் பயிற்சி எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறார். வெஸ்ட்மின்ஸ்டர் அபேயின் நில அளவையாளராக நியமிக்கப்பட்டார். பிறகு பீட்டர்ஸ்பெர்க்கில் கிறித்தவாலயப் பணிகளில் ஈடுபட்டார். கட்டிடப் பணியாக அவர் மேற்கொண்ட முதல் பணி இது. பிறகு லாம்பெத் அரண்மனையைப் புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்ட்டார். அருங்காட்சியத்தில் பழங்கால எழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்க தீ எதிர்ப்புக் கட்டிடம் கட்டினார். இந்தக் கட்டிப் பணி அவருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்தது.

எட்வார்டின் இந்தத் திறமையால் அற்புதமான பணி அவரைத் தேடி வந்தது. உலகப் புகழ்பெற்ற பக்கிங்காம் அரண்மனையைக் கட்டும் வாய்ப்பை இங்கிலாந்து மகாராணி விக்டோரியா அவருக்கு அளித்தார். இங்கிலாந்தின் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளரான ஜான் நோஷ்தான் அரண்மனையின் வரை திட்டத்தை உருவாக்கியது. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு அந்தப் பணிகளை நிறைவேற்றியவர் எட்வார்ட். பிறகு இங்கிலாந்தின் அரசு ஆஸ்தான கட்டுமானராக எட்வார்ட் விளங்கினார். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி அரசு இல்லம் அவர் இங்கிலாந்து அரசுக்காகக் கட்டிய கட்டிடங்களுள் முக்கியமானது. இது மட்டுமல்லாது ரஷ்ய இளவரசர் மிகைல் செமயனோவிச் வாரன்ஸோவுக்காக உக்ரைனில் வாரன்ஸோ மாளிகையைக் கட்டிக்கொடுத்துள்ளார். இவர் இங்கிலாந்து அரச சமூகத்தின் அங்கத்தினராகவும் கவுரவிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x