Last Updated : 11 Apr, 2015 12:25 PM

 

Published : 11 Apr 2015 12:25 PM
Last Updated : 11 Apr 2015 12:25 PM

மிதக்கும் வீடு

மார்காட் கிரஸோஜவிக் எனும் பெண் கட்டிடக் கலை நிபுணரின் புதிய வடிவமைப்பு, கட்டிடக் கலை உலகில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியுள்ளது. லண்டனைச் சேர்ந்த மார்காட் கடலுக்கு மத்தியில் பிரம்மாண்டமான ஒரு வீட்டை எழுப்பும் திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

அதற்கு “நீர்மின் சக்தி அலை வீடு” எனப் பெயர் சூட்டியுள்ளார். ராட்சத கடல் கிளிஞ்சல் போன்ற தோற்றம் கொண்ட இந்தக் கட்டிடம் கடல் மேல் மிதந்தபடி கடல் அலையிலிருந்து மின்சாரம் தயாரித்து அவ்வீட்டுக்குத் தேவையான மினசாரத்தை வழங்கும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மகத்துவத்தை முன்னிறுத்தும் வகையில் ஒரு மின்சாரப் பவளப் பாறை நிலையம் மற்றும் ஒரு நீர்மின் சக்தி பொருத்தப்பட்ட சிறைச்சாலையை இதற்கு முன்பே மார்காட் வடிவமைத்திருக்கிறார்.

தற்போது அவர் திட்டமிட்டிருக்கும் இந்த நீர்மின் சக்தி அலை வீடு இரண்டு அடுக்குகளைக் கொண்டிருக்கும். ஒன்று உட்புறத்திலும், மற்றொன்று வெளிப்புறத்திலும் இருக்கும். கான்கிரீட் கொண்டு கட்டப்படும் வெளிப்புறக் கட்டிடம் நிலையாக வீற்றிருக்கும். அதுதான் குடியிருக்கும் பகுதி. அப்பகுதிக்குத் தேவையான மின்சாரம் சூரிய ஆற்றலின் மூலம் உற்பத்தி செய்யப்படும்.

உட்புற அடுக்கு அலுமினியம் கொண்டு கட்டப்படும். இது சுழலும் தன்மை கொண்டதாக இருக்கும். ஆழ்கடல் அலையின் நகர்வுக்கு ஏற்ப இப்பகுதி அசையும். இவற்றுடன் இரண்டு காற்றால் இயங்கும் இயந்திரங்கள் (turbine) பொருத்தப்படும். அவற்றில் ஒன்று அலைகளுக்கு எதிர்வினையாற்றும்.

அதாவது அலையில் உண்டாகும் காற்றை அமிழ்த்தி அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும். மற்றொன்று காந்தம் மற்றும் தாமிரம் கம்பிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அதுவும் மின்சாரம் உற்பத்தி செய்யும்.

இப்படி ஒரு வீட்டை வடிவமைக்கும் எண்ணம் எப்படித் தோன்றியது எனக் கேட்டதற்கு, “சர்ஃபர் என அழைக்கப்படும் கடலில் உலாவருபவர்களுக்கு ஒரு சொகுசு கடல் வீடு கட்ட வேண்டும் என வடிவமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டார்கள். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேலும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் எனும் ஆவல் எப்போதுமே எனக்கு உண்டு.

ஆகையால், கடல் நீர் மேல் நடனமாடும் சர்ஃபர்கள் ரசிக்கும்படியாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும். அதே சமயம் நீர்மின் சக்தியைத் திறம்படப் பயன்படுத்தும் விதத்திலும் அது வடிவமைக்கப்பட வேண்டும் என நினைத்தேன்” என்கிறார் மார்காட். நீர் பரப்பில் நூதனமான கட்டுமானங்களை வடிவமைக்கும் மார்காட் பாராட்டுக்குரியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x