Last Updated : 18 Jun, 2016 11:43 AM

 

Published : 18 Jun 2016 11:43 AM
Last Updated : 18 Jun 2016 11:43 AM

கதவுகள் பலவிதம்

ஒரு வீட்டில் சட்டெனக் கண்ணைப் பறிப்பவை எவை எனக் கேட்டால் சட்டென்று சொல்லிவிடுவோம் கதவுகள் என. கதவுகள் வீட்டின் பாதுகாப்புக்கானவை மட்டுமல்ல அவை வீட்டுக்குக் கம்பீரத்தையும் அழகையும் அளிக்கவல்லவை. அதிலும் வீட்டின் முகப்புக் கதவைத் தரமான மரத்தில், அழகான வேலைப்பாடுகளுடன் செய்து வீட்டில் பொருத்துவதே நம் வழக்கம்.

வீட்டுக்கான சமூக அந்தஸ்தை அந்த வீட்டின் முகப்புக் கதவே சொல்லிவிடும். எல்லா அறைகளிலும் நாம் ஒரே மாதியான கதவுகளைப் பொருத்துவதில்லை. முகப்புக் கதவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கழிப்பறைக் கதவுக்குக் கொடுக்க மாட்டோம். சில கதவுகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக அமைக்கப்படும். சில கதவுகளின் நோக்கம் பாதுகாப்பாக இருக்காது. ஆகவே எந்தப் பயன்பாட்டுக்காகக் கதவு தேவையோ அதைப் பொறுத்தே கதவுகளைத் தேர்ந்தெடுக்கிறோம்.

கதவின் மூலப் பொருளை அடிப்படையாகக் கொண்டு பலவகையான கதவுகளை உருவாக்குகிறார்கள். மரக் கதவு, கண்ணாடிக் கதவு, பிளைவுட் கதவு, சிமெண்ட் கதவு, இரும்புக் கதவு, பிவிசி கதவு எனப் பலவகைக் கதவுகள் உள்ளன. இவையெல்லா வற்றையும்விட பாரம்பரியமான கதவுகள் என்றால் அவை மரக் கதவுகளே. அதனால்தான் இன்னும் வீட்டின் முகப்புக் கதவை மரத் தாலேயே உருவாக்குகிறோம்.

வீட்டின் நிலைக்கதவைப் பொறுத்துவதே தனிச் சடங்காக இன்னும் அனுசரிக்கப்படுகிறது. வீட்டின் பிற அறைகளில் நவீனமாகக் கிடைக்கும் பல கதவுகளைப் பொருத்துகிறோம். வீட்டின் முகப்பில் மரக்கதவை ஒட்டியே மற்றுமொரு கதவைப் பாதுகாப்புக்காக பொருத்துகிறோம். இது பெரும்பாலும் இரும்புக் கதவாக அமைகிறது. இப்போது இதற்காக சில்வர் முலாம் பூசப்பட்ட கதவுகளும் சந்தையில் கிடைக்கின்றன.

மரக் கதவு

மரக் கதவுகளைப் பொறுத்தவரை அவை கட்டுமானம் நடைபெறும் இடத்துக்கருகிலேயே கிடைக்கும் மரங்களைக் கொண்டு உள்ளூர் தச்சர்களைக் கொண்டே உருவாக்கப்படுகின்றன. மரக் கதவுகளில் பல அழகிய வேலைப்பாடுகளை ஏற்படுத்த முடியும். இவை கண்ணுக்கழகிய தோற்றத்தைத் தரும். அழகற்ற வெறும் சட்டம் போல கதவுகளை நாம் பயன்படுத்துவதில்லை. அதில் சிறு சிறு அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்ட கதவுகளையே நாம் விரும்புகிறோம்.

இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதில் மரக் கதவுகளின் பங்களிப்பு அதிகப்படியானது. தேக்கு, வேம்பு, அயனி, கருங்காலி உள்ளிட்ட பல மரங்களைப் பயன்படுத்தி மரக் கதவுகள் உருவாக்கப்படுகின்றன. பட்ஜெட்டைப் பொறுத்து மரம் மாறுபடும். காசுக்கேற்ற கதவைக் கச்சிதமாக உருவாக்கிக்கொள்ளலாம். மரக் கதவுகளைப் பொறுத்தவரை அவை சில இடங்களில் ஒரே கதவாகவும் சில இடங்களில் இரு கதவுகளாகவும் பொருத்தப்படுகின்றன. பயன்பாட்டைப் பொறுத்து ஒரு கதவோ இரு கதவுகளோ எவை வேண்டுமோ அவை தீர்மானிக்கப்படுகின்றன. பொதுவாக வீட்டின் உள்ளறைகளுக்கு மட்டுமே இரண்டு கதவுகளை அமைக்கிறார்கள்.

மென்மையான கதவு (Flush Door)

பொதுவாகவே ஃப்ளஷ் டோர் எனப்படும் கதவுகள் அலுவலகங்களிலும் பெரிய வீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகைக் கதவுகள் அதிக எடையுடன் அமைக்கப்படுவதில்லை. எனவே முழுவதும் மரத்தைப் பயன்படுத்துவதை முடிந்தவரையில் தவிர்த்துவிடுகிறார்கள். மரச் சட்டம் மட்டுமே பயன்படுத்தி, அந்தச் சட்டத்தில் பிளைவுட், காட்போர்டு போன்றவற்றாலன பலகைகளை இட்டு நிரப்பிக் கதவுகளை உருவாக்குகிறார்கள்.

பெரும்பாலும் இந்தக் கதவுகளை வீட்டின் உள்ளறைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். பொருளாதாரரீதியில் பயன்மிக்கதாகவும், தோற்றப் பொலிவு கொண்டதாகவும் நீடித்து உழைப்பதாகவும் இந்தக் கதவுகள் அமைந்திருக்கின்றன. குளியலறை போன்ற நீர் புழங்கும் இடங்களில் அலுமினியத்திலான கதவுகளையும் பயன்படுத்துவார்கள்.

கண்ணாடிக் கதவு

வீட்டின் உள்ளே இருந்து வெளியே பார்க்க உதவும் வகையிலான இடங்களில் கண்ணாடிக் கதவுகளை அமைத்து மகிழ்கிறார்கள். தோட்டம் போன்ற கண்ணுக்குக் குளிர்ச்சியான இடங்களைப் பார்த்து மகிழ இவை உதவுகின்றன. பெரும்பாலும் வீட்டின் பின் பகுதியில் மாத்திரமே கண்ணாடிக் கதவுகளை பயன்படுத்துகிறார்கள். வீட்டின் முகப்பில் கண்ணாடிக் கதவுகளைப் பொருத்தினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

ஆனால் வீட்டின் பாதுகாப்பைக் கருதிச் செயல்படும்போது வீட்டின் முன் பக்கத்தில் கண்ணாடிக் கதவைப் பயன்படுத்துவது சரியான பரிந்துரையாக இருக்காது. கண்ணாடிக் கதவுகளை கவனத்துடன் கையாள வேண்டும். மேலும் இவற்றின் விலையும் அதிகம். பராமரிப்பும் இவற்றுக்கு அதிகமாகத் தேவை. இதையெல்லாம் கருத்தில் கொண்டே கண்ணாடிக் கதவு தேவையா இல்லையா என்பதை முடிவுசெய்துகொள்ளலாம்.

இரும்புக் கதவு

மெதுவாக வீட்டின் நுழைவு வாயிலில் அமைக்கப்படும் கதவுகள் அதாவது வீட்டின் கேட்டாக அமைக்கப்படும் கதவுகள் இரும்புக் கதவுகளே. நீண்ட நாட்களாகவே இரும்புக் கதவுகள் பயன்பாட்டில் இருந்துவந்திருக்கின்றன. வீடுகளில் நுழைவு வாயிலுக்குப் பயன்படுவது போல் வீட்டின் முகப்பிலும் தோட்டத்துக்குச் செல்லும் வெளிப் பகுதியிலும் பாதுகாப்பு காரணத்துக்காக இரும்புக் கதவைப் பயன்படுத்துகிறார்கள்.

எப்போதும் மெயின் கதவை மூடிவைக்காமல் இந்த இரும்புக் கதவை மட்டும் திறந்துவைத்திருக்கும்போது, பாதுகாப்புக்குப் பாதுகாப்பும் கிடைக்கும். வீட்டில் காற்றும் உலவ வசதி இருக்கும்.

பாலி வினைல் குளோரைடு எனப்படும் பிவிஸ் கதவுகளும் வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவை பல்வேறு வண்ணத்திலும் டிசைனிலும் கிடைக்கின்றன. எடை குறைவு, நீடித்த உழைப்பு, துருப்பிடிக்காத தன்மை போன்றவை இந்த பிவிஸி கதவுகளின் நன்மைகள். மரக் கதவுகளை ஒப்பிடும்போது இவற்றின் விலை குறைவு, எனவே பொருளாதாரரீதியாக இவை அனுகூலமானவை.

இவை தவிர ஃபைபர் கிளாஸ், மூங்கில். அலுமினியம் போன்ற பொருள்களாலான கதவுகளையும் தேவைக்கேற்பப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மூங்கில் கதவுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. ஃபைபர் கிளாஸ் மூலம் உருவாக்கப்படும் கதவுகள் பார்வைக்கு அழகிய தோற்றத்தைத் தரும்.

ரெடிமேடாகவும் கிடைக்கும். இத்தகைய கதவுகள் வீட்டுக்கு வெவ்வேறு விதமான அழகிய தோற்றத்தைத் தருகின்றன. எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான கதவுகளைப் பயன்படுத்துவதைவிட வெவ்வேறு கதவுகளைப் பயன்படுத்துவது வீட்டின் அழகிய தோற்றத்துக்கு உதவக் கூடியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x