Last Updated : 09 Jul, 2016 11:27 AM

 

Published : 09 Jul 2016 11:27 AM
Last Updated : 09 Jul 2016 11:27 AM

வீட்டுக்கடன்: இ.எம்.ஐ.க்கு நீ..ண்ட அவகாசம் ஏன்?

சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றுவது பெரும்பாலும் வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்தான். வங்கிக் கடன் வாங்குவதில் கவனிக்கத்தக்கப் பல விஷயங்கள் இருக்கின்றன. நம் நாட்டில் வங்கிகள் தோன்றி சுமார் 112 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத்தான் வீட்டுக் கடன் கொடுப்பதில் வங்கிகள் தாராளப் போக்கைக் கடைபிடித்துவருகின்றன. வங்கிகள் வழங்கும் கடன் திட்டங்கள் பலவற்றில் இல்லாத சில அம்சங்கள், வீட்டுக் கடன் திட்டத்தில் இருக்கின்றன. அதுதான் , கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தரப்படும் கால அவகாசம். வீட்டுக் கடனுக்கு மட்டுமே ஏன் இவ்வளவு கால அவகாசம் வழங்கப்படுகிறது?

சாதாரணமாக வீட்டுக் கடனை 5 ஆண்டுகளில் இருந்து 25 ஆண்டுகள் வரை செலுத்தக் கால அவகாசம் வழங்கப்படும். சில சமயங்களில் 30 ஆண்டுகள்கூட தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்தக்கூடிய வசதி இருக்கிறது. சொல்லப்போனால் வீட்டுக் கடனுக்கு மட்டும் இப்படி ஒரு சலுகை தரப்படுகிறது. வேறு எந்தக் கடனுக்கும் இந்த அளவுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதில்லை.

வாகனக் கடன் அல்லது தொழிற்சாலைகளுக்குத் தேவையான தளவாடங்கள் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் வாங்கினால், அந்தக் கடனை 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பி அடைத்துவிட வேண்டும். ஏனென்றால், மோட்டார் வாகனமோ, மற்ற வாகனங்களோ, தொழிற்சாலை தளவாடங்களோ சில ஆண்டுகள் பயன்படுத்திவிட்டு அவற்றை விற்றுப் பாருங்களேன். வாங்கிய விலையைவிட மிகவும் குறைந்த விலைக்குத்தான் அவை போகும். ஆனால், வீடு அப்படியில்லை. வீடோ அல்லது அல்லது மனையோ பல ஆண்டுகள் கழித்து விற்றாலும், அவற்றின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருக்குமே தவிர குறைந்திருக்க வாய்ப்பே கிடையாது.

வீட்டுக் கடன்

வாகனக் கடன் அல்லது தொழிற்சாலைகளுக்குத் தேவையான தளவாடங்கள் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் வாங்கினால், அந்தக் கடனை 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பி அடைத்துவிட வேண்டும்.

ஏனென்றால், மோட்டார் வாகனமோ, மற்ற வாகனங்களோ, தொழிற்சாலை தளவாடங்களோ சில ஆண்டுகள் பயன்படுத்திவிட்டு அவற்றை விற்றுப் பாருங்களேன். வாங்கிய விலையைவிட மிகவும் குறைந்த விலைக்குத்தான் அவை போகும். ஆனால், வீடு அப்படியில்லை. வீடோ அல்லது அல்லது மனையோ பல ஆண்டுகள் கழித்து விற்றாலும், அவற்றின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருக்குமே தவிர குறைந்திருக்க வாய்ப்பே கிடையாது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் எங்கு சென்றாலும் வீடு, மனை விஷயங்களில் இதே நிலைதான். மிக அரிதாகச் சில காலகட்டங்களில் அமெரிக்காவிலும் ஜப்பானிலும் வீடுகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆனால், அது விதிவிலக்கு என்று சொல்லலாம். உலகில் உள்ள நிலப்பரப்பு கொஞ்சம்கூட அதிகரிக்கப்போவதில்லை. ஆனால், மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது அல்லவா? அதுபோலவே வீடுகளின் தேவையும் அதிகரித்துக்கொண்டேதான் போகுமே தவிர குறையாது. இப்படி ஒரு வரப்பிரசாதம் வீடு மற்றும் மனைகளுக்கு மட்டுமே உண்டு.

எனவேதான் வீட்டுக் கடனைத் திருப்பி செலுத்த நீண்ட கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதேசமயம், கடனைத் திருப்பிக் கட்டுவதற்கு வங்கிகள் போதிய கால அவகாசம் கொடுத்தாலும், சில நிபந்தனைகளை விதிக்கவும் செய்கின்றன.

மிக முக்கியமாகக் கடன் பெறும் நபர், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் இ.எம்.ஐ.யைச் செலுத்திவிடுவாரா என்பதை வங்கிகள் பார்க்கின்றன. ஒரு வேளை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், இ.எம்.ஐ. செலுத்துவதற்கான வருமானம் குறிப்பிட்ட அந்த நபருக்கு இருக்குமேயானால், அதிகபட்சம் 70 வயது வரைகூடக் கடனை அடைக்கக் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

ஆனால், கடன் பெறும் நபர், 60 வயதைக் கடந்த பிறகும்கூட கடனை அடைப்பதற்கு அவகாசம் கோர முடியும். ஆனால், அதற்கு அவரது வாரிசுகள் இந்தக் கடனுக்கு எழுத்துபூர்வமாக உத்திரவாதம் கொடுக்க வேண்டும் அல்லது ‘கோ-ஃபாலோயர்’ எனப்படும் கடன்தாரருக்கு இணையாகப் பொறுப்பை ஏற்கும் நபர், அதற்கான உத்திரவாதத்தை வங்கிகளுக்கு எழுதிக்கொடுக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையான அளவு நமது வருமானம் இருக்கிறதா என்பதையும் வங்கிகள் பரிசீலித்த பிறகே கடனை வழங்குகின்றன. மாதச் சம்பளத்தில் அல்லது மாத வருமானத்திலிருந்தே உத்தேச வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ., பி.எஃப். உள்ளிட்ட அனைத்து வகைப் பிடித்தங்களும் செய்யப்படும்.

இப்படிச் செய்யப்படும் பிடித்தங்கள் போக சம்பளத்தில் குறைந்தபட்சம் 35 சதவீதத் தொகையையாவது குடும்பச் செலவுகளுக்காக எடுத்துச் செல்கிறோமா என்பதை உறுதி செய்த பிறகே வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. காரணம், இ.எம்.ஐ. கட்டுவதால் அன்றாட குடும்பச் செலவுக்குப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

இப்படிப் பல விஷயங்களை கருத்தில் கொள்வதால்தான் வீட்டுக் கடனுக்கு தவணையைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கொஞ்சம் கூடுதலான வழங்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x