Last Updated : 04 Feb, 2017 11:39 AM

 

Published : 04 Feb 2017 11:39 AM
Last Updated : 04 Feb 2017 11:39 AM

என்ன சொல்கிறது பட்ஜெட்?

ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போதும் ரியல் எஸ்டேட் துறையினர் இந்த பட்ஜெட்டிலாவது தங்களது நிலை மேம்பாடு அடைய உதவிடும் அம்சங்கள் இருந்துவிடாதா என எதிர்பார்ப்பது வழக்கம். இந்த ஆண்டும் அப்படியொரு பலமான எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் ரியல் எஸ்டேட் துறை 2016-ம் ஆண்டில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி காணவில்லை. கடந்த நவம்பரிலும் டிசம்பரிலும் அத்துறை பலமான அடிவாங்கியது. ஆகவே. அதிலிருந்து மீள்வதற்கு ஆதரவான பட்ஜெட்டை அத்துறை எதிர்பார்த்துக் காத்துக்கிடந்ததில் தவறொன்றுமில்லை. ரியல் எஸ்டேட் துறையினர் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிப்ரவரி ஒன்று அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அது ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்பார்ப்பு முழுவதையும் பூர்த்திசெய்யவில்லை என்றபோதும் இதிலும் சில சாதகமான அம்சங்கள் இருப்பதாகவே அந்தத் துறையினர் கருதுகிறார்கள்.

இந்த பட்ஜெட்டில் சலுகை விலை வீடுகள் திட்டத்துக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. உள் கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதால் சலுகை விலை வீடுகள் அத்தியாவசியத் தேவையின்கீழ் வர வாய்ப்பிருக்கிறது.இது ரியல் எஸ்டேட் துறையிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் கட்டுமான நிறுவனங்களுக்கு சில சலுகைகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இது போக கிராமப்புறப் பகுதியில் வீடற்றவர்களுக்காக 2019-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என்ற அறிவிப்பையும் இந்த பட்ஜெட் வெளியிட்டிருக்கிறது. இந்தியர்கள் அனைவருக்கும் 2022-ம் ஆண்டுக்குள் சொந்த வீடு என்ற இலக்கை நோக்கி நடைபோடும் மத்திய அரசின் திட்டத்துக்கு இந்த அறிவிப்பு தூண்டுகோலாகச் செயல்படும் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையினர்.

அதே போல், ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கான தனிநபர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நிதியுதவியைத் தேசிய வீட்டு வசதி வங்கி வரும் நிதியாண்டில் மேற்கொள்ள இருக்கிறது என்பதையும் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார். இதனால் வீட்டு வசதிக் கடனுக்கான நிதியை வழங்கிய சிறு நிறுவனங்கள் அனுகூலமடையும் என்றும் அதனால் கட்டுமானத் தொழில் ஏற்றம் பெறும் என்றும் ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திலிருந்து ஐந்து லட்சத்துக்குள் பெறுபவர்களது வரி ஐந்து சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த வரியானது முதலில் பத்து சதவீதமாக இருந்தவந்தது, இனி இந்த வரியானது வெறும் ஐந்து சதவீதமாகவே இருக்கும் என்கிறது இந்த ஆண்டின் பட்ஜெட். இது போக பிற பிரிவுகளில் அடங்கும் வரிசெலுத்துவோரும் ஆண்டுக்கும்12,5000 ரூபாய் சேமிக்க முடியும் என்கிறது நிதிநிலை அறிக்கை.

போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பை மேற்கொள்வதற்காக ரூ. 2.41 லட்சம் கோடி ரூபாய் நிதி இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுவும் ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் தரும் வகையிலான அறிவிப்பாகவே அத்துறையினரால் பார்க்கப்படுகிறது. இந்திரா அவாஸ் யோஜனா என்னும் திட்டம் கிராமப் புற ஏழைகளுக்கு வீட்டு வசதியைப் பெற்றுத்தருவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் மேலும் 600 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதனால் கிராமப்புற வீடுகளை உருவாக்கும் கட்டுமான நிறுவனங்கள் பயனடையக்கூடும். இது தவிர கட்டுநர்களுக்கும் சில வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சலுகை அறிவிப்புகள் எல்லாம் ரியல் எஸ்டேட் துறைக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தரவல்லவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இவற்றால் மட்டும் ரியல் எஸ்டேட் துறை கடந்த காலச் சரிவிலிருந்து மீண்டுவிடுமா என்று கேட்டால், அந்தக் கேள்விக்கான தெளிவான பதில் ரியல் எஸ்டேட் துறையினரிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பெரிய லாபம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை கிடைக்கும் சிறிய சிறிய அனுகூலங்களைப் பெற்றாவது கரையேறிவிட வேண்டும் என்பதே ரியல் எஸ்டேட் துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x