Last Updated : 02 Jan, 2016 11:56 AM

 

Published : 02 Jan 2016 11:56 AM
Last Updated : 02 Jan 2016 11:56 AM

கட்டுமானக் கல்லாகுது இரும்புக் கழிவு!

மண்ணில் செய்யப்பட்ட செங்கல், பழுப்பு நிலக்கரி சாம்லில் இருந்து நிலக்கரியைத்தானே இதுவரை பார்த்திருக்கிறீர்கள். இனி, இரும்பு செங்கல்லையும்கூட நீங்கள் பார்க்கக்கூடும். ஆச்சரியமாக இருக்கிறதா? இரும்பு ஆலைகளில் தூசி போல கொட்டிக்கிடக்கும் கழிவுகளைக் கொண்டு கட்டுமான கற்கள் தயார் செய்யலாம் என ஐரோப்பிய நாடுகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டன. இப்போது அந்தப் பணிகள் வேகம் பிடித்து வருகின்றன.

உலகெங்கும் இரும்பு ஆலைகள் ஏராளம் இருக்கின்றன. இந்த ஆலைகளில் இரும்பு துகள்கள் தூசி போல தேங்கி வருகின்றன. அளவுக்கு அதிகமாகத் தேங்குவதால் இரும்பு தூசிகளும் கழிவுகளும் மலையைப் போல குவிந்து கிடக்கின்றன. இப்படி உற்பத்தியாகும் இரும்புக் கழிவுகள் பெரும்பாலும் இரும்பாலைகளில் அப்படியே விட்டுவிடுவார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இந்த வகைக் கழிவு ஆண்டுக்கு 7 லட்சம் டன்னுக்கும் அதிகமாகச் சேருகிறது. அமெரிக்காவில் இது 1.2 கோடி டன் வரை இருக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பல இரும்பாலைகளில் பெரிய பள்ளங்களைத் தோண்டி இவற்றை அப்படியே போட்டு வைத்துவிடுவார்கள். சேரும் கழிவுகளையும் பள்ளத்தில் கொட்டி வைத்து விடுவார்கள்.

ஆண்டாண்டு காலமாக இந்தக் கழிவுகளை விட்டு வைத்தவர்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு அதைக் கொண்டு செங்கல் போல கற்கள் செய்ய முடியும் என்று கண்டுபிடித்தார்கள். இந்தக் கற்களைக் கட்டுமானப் பணிகளுக்கும் பயன்படுத்தலாம் என்றும் சொல்கிறார்கள். இரும்பு உற்பத்தி ஆலைகளில் உருவாகும் கழிவுகளுக்கு ‘வேல்ஜ் ஸ்லாக்’ என்று பெயர். இது பார்ப்பதற்கு கற்கள் போலவே இருக்கும். ‘வேல்ஜ் ஸ்லாக்’கில் இரும்பு இருப்பதைப் போலவே சுண்ணாம்பும், சிலிகான் ஆக்ஸைடு, மாங்கனீஸ், காரீயம், துத்தநாகம் போன்ற உலோக ஆக்ஸைடுகளும் இந்தக் கழிவுகளில் குப்பையாக கலந்திருக்கும்.

இப்படிக் குவிந்துகிடக்கும் உபயோகமான இந்தப் பொருட்களைக் எப்படிப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது என்று இத்துறைச் சார்ந்த வல்லுநர்கள் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். அப்படி ஆராய்ந்ததில் கிடைத்த ஒரு கண்டுபிடிப்பே இரும்பில் கட்டுமானக் கற்கள் தயாரிப்பது ஆகும். அதுமட்டுமல்ல, கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படும் கற்கள், ஓடுகளைக்கூட இதிலிருந்து தயாரித்து பயன்படுத்த முடியுமாம். பீங்கான் பொருட்களைத் தயாரிக்கவும் இதில் மூலப்பொருள் இருக்கிறதாம். இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கும்போது இரும்புக் குப்பையை விட்டு வைப்பார்களா என்ன?

இரும்பாலைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் கற்களும் ஓடுகளும் வலுவாக இருக்கும் என்பதால் இந்தக் கண்டுபிடிப்புக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிக வரவேற்பும் இருக்கிறதாம். ஆனால், இத்தனை உலோகங்கள், தனிமங்களைக் கொண்டு தயாரிக்கும் கற்களால் சுற்றுசூழலுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் சொல்கிறார்கள். மூலப்பொருட்களில் உள்ள சில நச்சுக்கள் தயாரிப்புப் பொருளிலும் இடம் பெற்றால் விபரீதமாகும் என்ற எச்சரிக்கை மணியும் ஒலிக்க ஆரம்பித்தது.

இரும்புக் கழிவுகளில் உள்ள நச்சுகளின் விகிதம் தர நிர்ணய விதிமுறைக்கு உட்பட்டு இருப்பதாகவும், எனவே அதுச் சுற்றுச்சூழலைப் பாதிக்காது என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் இரும்புக் கழிவிலிருந்து கட்டுமான கற்கள் தயாரிக்கும் பணிகள் சூடுபிடித்துள்ளன. எப்படி இருந்தாலும், இரும்பில் கட்டுமான கற்கள் தயாரிப்பது கட்டுமானத் தொழிலில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.











FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x