Published : 20 Jun 2015 12:20 PM
Last Updated : 20 Jun 2015 12:20 PM

கட்டிட அறிவியல்- 5: கட்டுமானக் கம்பிகளின் அவசியம்

சென்ற வாரம் கிரேட்பீம் அடிப் பகுதி தளம் அமைக்கும் முறைகளைப் பார்த்தோம். இப்போது பக்கவாட்டு சென்ட்ரிங்க் முறைகளைப் பற்றிப் பார்க்கலாம். அனைவரும் எளிதாகச் செய்யக்கூடிய முறை இது. கம்பி கட்டிய பிறகு இரு பக்கவாட்டுகளிலும் பிளைவுட் தட்டிகளையோ, இரும்பு தட்டிகளையோ அமைத்து சென்ட்ரிங்க் செய்யலாம்.

இது எளிதான முறையாகும். அதில் தளமாக முழுச் செங்கற்களையோ அல்லது பிளைஆஷ்கற்களையோ அமைத்தால் சரியான நேர் கோட்டில் செல்லும். கான்கிரீட் கொட்டும்போது அடியில் பிதுங்கும் வாய்ப்பு இருக்காது. பீம் கீழே அதிக அகலத்திலும் மேலே குறைந்த அகலத்திலும் ஒழுங்கற்று அமைவது தவிர்க்கப்படும். இதனால் கான்கிரீட் வீணாவது தவிர்க்கப்படும்.

பீமிற்கு சென்ட்ரிங்க் செய்ய அதற்குரிய பிளைவுட் தட்டிகளையோ, இரும்புத் தட்டிகளையோ பயன்படுத்த வேண்டும். அதில் மேற்புறத்தில் தேவையான அகலத்திற்கு இழுத்துக் கட்டத் துளைகள் இருக்கும். இவ்வாறு செய்யும்போது மேற்புறத்தில் பீம் அதிக அகலத்திலும் கீழ்ப் பகுதியில் குறைந்த அகலத்திலும் ஒழுங்கற்று அமைவது தவிர்க்கபடும். இதனால் கான்கிரீட் வீணாவது தவிர்க்கப்படும்.

ஆனால் மேற்கூரைக்கான தட்டிகளைப் பயன்படுத்தும்போது அதில் துளைகள் இருக்காது இழுத்துக் கட்ட முடியாது. கான்கிரீட் பிதுங்கலையோ சிமெண்ட் பால் வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு தட்டி இணைப்புக்கு வெளியேயும் ஒரு துணையாக தட்டியோ, பலகையோ அமைக்க வேண்டும். தட்டிகள் சரியாவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்த வழிமுறையாக முழுச் செங்கற்களையோ அல்லது பிளைஆஷ்கற்களையோ கொண்டு பீம் நீள, அகல, உயரத்துக்குத் தொட்டி கட்டி அதனுள் கம்பி கட்டி கான்கிரீட் இடலாம். இதில் கான்கிரீட்டை உறுதியாக்க நெடு நேரம் தண்ணீர் காட்ட வேண்டிவரும். இதன் மூலம் செங்கல் குளிர்ந்து கான்கிரீட் ஈரப்பதமடைந்து இறுகும். முழு செங்கற்கள் அல்லது பிளை ஆஷ்கற்கள் எனத் தொட்டி கட்டி கான்கிரீட் இடுவது செலவு அதிகம்.

இவ்வாறு செய்யும்போது தொட்டியானது பீம் கான்கிரீட்டைப் பாதுகாக்கும். தொட்டியை மட்டும் இரு புறங்களிலும் சிமெண்ட் பூச்சு வேலை செய்தால் போதும். இதற்கு கரையான் மருந்து, செல்தொற்று மருந்து பூச வேண்டியது அவசியம் இல்லை. ஆனால் கட்டிடம் அமையும் பகுதியில் கரையான் மருந்து, செல்தொற்று மருந்து பூச வேண்டியது கட்டாயம்.

அடுத்ததாக, கம்பி கட்டும் முறையில் கம்பியின் கணம், எண்ணிக்கை, கீழ்ப்பகுதி,மேல் பகுதி மற்றும் பக்கவாட்டில் எத்தனை கம்பிகள் என்பதை நீங்கள் வரைபடம், மதிப்பீடு வாங்கும்போது பொறியாளர் குறித்துக் கொடுத்து இருப்பார் அதில் எதையும் குறைக்க வேண்டாம்.

அல்லது மாறுதல் செய்யும் போது தகுந்த நிபுணருடன் ஆலோசித்துச் செய்ய வேண்டும். தொழிலாளர் பேச்சைக் கேட்டுக் குறைக்க வேண்டாம் அனுபவத்தில் சொல்கிறேன் என்பார்கள். அனுபவம் அடிப்படையில் செய்வது என்பது எல்லா இடத்திலும் ஒன்றாகப் பொருந்தாது. ஒவ்வொறு இடத்திலும் மாறுபடலாம். இங்கு இந்தக் கம்பிகளை வைத்து பீம் கட்டுங்கள் கணக்கீடுகளைச் செய்யாது என்று பரிந்துரைக்கக் கூடாது. அது கட்டமைப்புச் சுமைகளைப் பொறுத்தது.

அதனால்தான் முறையான வழிமுறைகளை, கணக்கீடுகளைச் செய்யாது கட்டிய கட்டிடங்கள் கிராமப்புறங்களிலும் புதிதாக அமைக்கப்பட்ட புறநகர்ப் பகுதியிலும் சரிந்து விழுந்துள்ளதைக் காண முடிகிறது.

முறையான வழிமுறைகளை, கணக்கீடு களைச் செய்து கட்டிய பெரும் அடுக்ககங்கள் நகரங்களில் சரியாமல் இருப்பதை நிலநடுக்கத் தால் பாதிக்கப்படும் நாடுகளில் காணலாம். எனவே கம்பி விஷயத்தில் சமரசம் கூடாது.

கட்டுரையாளர், கட்டிடத் துறைப் பேராசிரியர்.

தொடர்புக்கு: sunbharathidasan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x