Last Updated : 10 Mar, 2018 12:20 PM

 

Published : 10 Mar 2018 12:20 PM
Last Updated : 10 Mar 2018 12:20 PM

அடுக்குமாடி வீடு, மனை எதை வாங்கலாம்?

மு

ன்பெல்லாம் வீடு கட்ட வேண்டும் என்றால் நிலம் வாங்கி, அடித்தளமிட்டுக் கட்ட வேண்டும். ஆனால், உலகமயமாக்கலுக்குப் பிறகு சென்னை, கோவை மாதிரியான பெரு நகரங்களுக்கு மக்கள் பிழைப்பு தேடி வருவது, அதிகரித்தது. ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் அளவுக்கு அதிகமான மக்கள் வசிக்க வேண்டிய சூழல் வந்தது. அப்போது முன்புபோல் தனி வீடு என்பது மக்களின் இருப்பிடத் தேவையைப் பூர்த்தியாக்கவில்லை. அதனால்தான் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பிரபலமாக இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு (Apartment) என்னும் முறை இங்கே வந்தது. இந்த முறை மீசோ-அமெரிக்க நாகரிகத்திலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த முறையின் மூலம் சிறிய பரப்புக்குள் பல குடும்பங்களுக்கான வீட்டுத் தேவையை நிறைவேற்ற முடிந்தது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுத் திட்டத்தின் வெற்றி, இந்திய அளவில் ரியல் எஸ்டேட் துறையின் அபரிதமான வளர்ச்சிக்கும் காரணம் ஆனது. இதனால் சென்னை நகருக்குள் வீடு வாங்க முடியாத நடுத்தர மக்களின் வீடு வாங்கும் கனவும் நனவானது. ஆனால், இப்போது மீண்டும் தனி வீடு என்னும் முறை நடுத்தரமக்களிடையே லேசாகத் தழைத்தோங்கியிருக்கிறது.

சென்னைப் புறநகராக இருந்தாலும் பரவாயில்லை எனத் தனி வீடு கட்டிக்கொள்ளலாம் என நினைக்கின்றனர். இதன் எதிரொலியாகத்தான் சமீப காலத்தில் முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் பல மனை விற்பனையிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளன. வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ‘அடுக்குமாடி வீடா, மனை வாங்கித் தனி வீடு கட்டலாமா’ என்ற குழப்பம் முன்பைவிட இப்போது அதிகரித்துள்ளது.

இந்த இரண்டு வகையான முதலீட்டுக்கான விலையும் நீங்கள் வாங்கப் போகும் இடத்தைப் பொறுத்ததுதான். சென்னை நகருக்குள் மனை வாங்குவது சாத்தியமில்லாதது. சென்னையின் மையத்தில் அடுக்குமாடி வீட்டின் விலையும் கோடிகளைத் தாண்டிவிட்டது. அதனால் நடுத்தர மக்கள் பெரும்பாலானோரின் தேர்வு புறநகர்தான்.

மனை, தனி வீடு - சாதகங்கள், பாதகங்கள்

புறநகரிலும் வீட்டு மனை விலை, அடுக்குமாடி வீட்டின் விலையைவிடக் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், அதேபோல் வீட்டு மனை வாங்கும் வாய்ப்பும் அடுக்குமாடி வீடுகளின் விற்பனை வாய்ப்பைவிடக் குறைவுதான். பெரும்பாலான ரியல் ஸ்டேட் நிறுவனங்களும் அடுக்குமாடி வீடு விற்பனையில்தான் கவனம் செலுத்துகின்றன. சமீப காலத்தில்தான் சில முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் மனை விற்பனையில் கால் பதித்துள்ளன.

ஆனால், அது குறைந்த அளவே. வீட்டு மனையை உங்கள் சேமிப்பில் வாங்கி, பிறகு வீட்டுக் கட்டுமானக் கடன் விண்ணப்பித்துக் கட்டிக்கொள்ளலாம். ஆனால், கட்டுமானப் பணிகளைத் தனியே கவனிக்க வேண்டியிருக்கும். கட்டுமானத்துக்கு ஒப்புதல் வாங்குவதிலிருந்து பல விதமான அரசுத் துறை சான்றிதழ்களும் வாங்க வேண்டிய பொறுப்பு நம்முடையதாக இருக்கும். அதேநேரம் நாம் விரும்பியபடி வீட்டை வடிவமைக்க முடியும்.

தனி வீட்டில் அதன் பாதுகாப்புக்கான முழுப் பொறுப்பும் உங்களுடையதாக இருக்கும். பராமரிப்புச் செலவும் தனியாகத்தான் மேற்கொள்ள வேண்டும். அதே நேரம் அடுக்குமாடி வீட்டைவிட சுதந்திரமான வாழ்க்கை கிடைக்கும்.

அடுக்குமாடி வீடு - சாதகங்கள், பாதகங்கள்

அதுபோல அடுக்குமாடி வீடு வாங்குவதற்கான தொகை, வீட்டு மனை வாங்குவதற்கான தொகையைக் காட்டிலும் அதிகமானதாகத்தான் இருக்கும். ஆனால், அடுக்குமாடி வீடுகள்தாம் சந்தையில் அதிகம் இருக்கின்றன. அதனால் உங்களுக்குப் பிடித்த வீட்டைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அடுக்குமாடிக் குடியிருப்பு, பல வீடுகள் சேர்ந்து இருப்பதால் அடுக்குமாடிக் குடியிருப்பின் பாதுகாப்புக்கான செலவைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

உதாரணமாக, சிசிடிவி கேமரா பொருத்துவது, காவலாளி நியமிப்பது போன்ற செலவுகளை எல்லோரும் பகிர்ந்துகொள்ள முடியும். அடுக்குமாடிக் குடியிருப்பின் பராமரிப்புச் செலவையும் மற்ற வீட்டு உரிமையாளர்களுடன் பகிர்ந்துகொள்வதால் அதைப் பற்றித் தனியே கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. அதுபோல் கட்டுமானம் தொடர்பான ஒவ்வொரு வேலைக்கும் அலைய வேண்டிய தேவை இல்லை.

அது எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்பை உருவாக்கும் நிறுவனங்களின் பொறுப்பாக இருக்கும். அதே நேரம் தனி வீட்டைக் காட்டிலும் அடுக்குமாடிக் குடியிருப்பில் சுதந்திரம் குறைவாக இருக்கும். வீட்டில் சிறிய மாற்றம் செய்ய விரும்பினாலும் அடுத்த வீட்டுக்காரர்களின் அனுமதிபெற வேண்டியிருக்கும்.

மறுவிற்பனைக்கு எது சிறந்தது?

அடுக்குமாடி வீட்டை எளிதாக விற்க முடியும். ஏனெனில், உடனடியாகக் குடியேறும் நிலையிலுள்ள வீட்டை வாங்கத்தான் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அடுக்குமாடிக் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் இருக்கும். மேலும், அதிகமானோர் இருப்பதால் பாதுகாப்பும் இருக்கிறது. ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்துள்ள நிலத்தின் உரிமை, பிரிக்கப்படாத மனையின் அளவு (யூ.டி.எஸ்.) என அழைக்கப்படுகிறது.

இந்த யூ.டி.எஸ். என்பது தனி வீட்டுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவே. அதனால் மனை வாங்கி வீடு கட்டினால் அதன் மறுவிற்பனை, அடுக்குமாடி வீட்டைவிட மிக அதிகமாக இருக்கும். ஆனால், மனை விலை மதிப்புதான் அதிகரிக்குமே தவிர வீட்டுக் கட்டுமானத்தின் மதிப்பு சரிந்துகொண்டுதான் வரும். வீட்டைத் தொடர்ந்து பராமரித்து வந்தால் ஓரளவு விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

எதை வாங்கலாம்?

மனையோ அடுக்குமாடி வீடோ எது வாங்கினாலும் முதலில் பட்ஜெட்டைத் தீர்மானித்துக்கொள்ளலாம். அடுத்தது எந்த நோக்கத்துக்காக வாங்குகிறோம் என்பதையும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

உங்களிடம் குறைவான தொகை இருக்கிறது, எதிர்காலப் பலனுக்காக முதலீடுசெய்கிறீர்கள் என்றால் வீட்டு மனை சிறந்த தேர்வாக இருக்கும். அதிலும் முறையான அனுமதி உள்ள, வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பகுதியில் வாங்க வேண்டும். மலிவாகக் கிடைக்கிறது என அனுமதியில்லாத, வளர்ச்சிக்கு வாய்ப்பற்ற பகுதியில் வாங்கினால் நமது முதலீடு, எதிர்காலத்தில் கைகொடுக்க வாய்ப்பில்லாமல் போகும்.

உங்கள் சொந்த பயன்பாட்டுக்கு வீடு வாங்க நினைக்கிறீர்கள் என்றால் அடுக்குமாடிக் குடியிருப்புதான் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனென்றால், வீட்டு மனை வாங்கி, வீடு கட்டுவது என்பது அதிக செலவு பிடிக்கும் காரியம். மேலும், வீடு கட்டும்போது அதற்கான கட்டுமானத் திட்ட ஒப்புதல் எனப் பல வேலைகளுக்குத் தனி ஆளாக அலைய வேண்டியிருக்கும்.

உங்களிடம் சேமிப்புத் தொகை இருக்கிறது, மாதாமாதம் சிறு வருமானம் பெற விரும்புகிறீர்கள் என்றால் அடுக்குமாடிக் குடியிருப்பு சிறந்த முதலீடாக இருக்கும். வாடகை மூலம் உங்களுக்கு வருமான உத்தரவாதம் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x