

இனிப்பு, காரம், உப்பு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ருசி பார்த்த பிறகே இறைவனுக்கு நைவேத்தியம் செய்வேன் என்று நான் சொன்னது பலரை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. இது குறித்துச் சிலர் என்னிடம் ஒரு விவாதமே நடத்தினார்கள். அதீத பக்தி கொண்டவர்களை ஆங்கிலத்தில், ‘God fearing person’ என்று சொல்கிறோம். இதுவே தவறான பதப்பிரயோகம் என்று நான் நினைக்கிறேன். கடவுளைக் கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும்? நாம் ஏன் ‘God loving person’ ஆக இருக்கக் கூடாது?
எனக்குக் கடவுள் மேல் அதீத அன்பும் மரியாதையும் இருக்கின்றன. என் அப்பா, அம்மா, குருநாதர் மேல் எப்படிக் கையெடுத்துக் கும்பிடுகிற அளவுக்கு மரியாதையும் அளவு கடந்த பாசமும் நேசமும் இருக்குமோ, அப்படித்தான் கடவுள் மீதும் இருக்கிறது. இதுபோன்ற சிந்தனைகள் தோன்றக் காரணம் என் சிறு வயதில் நடைபெற்ற ஒரு சம்பவம்தான். அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம். அன்றைக்கு கிருஷ்ணர் பிறந்தநாளான கோகுலாஷ்டமி. வீடு முழுக்க விருந்தினர்கள். என் அப்பாவின் நண்பர் ஆர்.வி.மாமா, குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவரும் அவர் மனைவியும் அன்றைக்கு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், சீடை, வெண்ணெய் என்று பலவிதமான படையல்.