

என்னுடைய வீட்டு வேலை அனுபவத்தை தி.மு., தி.பி. (திருமணத்துக்கு முன், பின்) என்று பிரித்துக் கொள்ளலாம். தி.மு.வில் நான் சமையலறை பக்கமே தலைவைத்ததில்லை. வெந்நீர் வைக்கக்கூடத் தெரியாது. தி.பி.யில் தனிக் குடும்பமாக வந்ததால் சமையலறைக்குள் ஒட்டகம் மூக்கை நுழைத்ததுபோல் நுழைந்தேன். அப்புறம் சொல்லவே வேண்டாம், கற்பிக்கப்பட்டது சமையல். கடைகளின் தேநீர், காபி சுவையே பிடிக்காத அளவுக்கு மாறிவிட்டேன்.
சாதா தேநீரில் பழகி இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, பட்டை, புதினா, லெமன் கிராஸ் டீ என வகை வகையாக நாளொரு டீயாகப் பழகி தேநீர் வித்தகனாகவே ஆகிவிட்டேன். அடுத்து ஆம்லெட் போட்டு,தோசை சுட்டு, இட்லி அவிக்கும் நிலைக்கு உயர்ந்தேன். அடுத்த படியாக உலையில் அரிசி போட்டு சோற்றை வடிக்கும் மூன்றாம் படியில் பரவசமானேன். - சேவியர் மெத்தோடியஸ், தூத்துக்குடி.