அழுக்குச் சிந்தனையை கழுவி ஊற்றிய மகள்! | என் பாதையில்

அழுக்குச் சிந்தனையை கழுவி ஊற்றிய மகள்! | என் பாதையில்
Updated on
1 min read

தன்னை முற்போக்காளனாகக் கருதிக்கொள்கிற ஆண்களில் நானும் ஒருவன். ஒரே மகள் பொறியியல் பட்டதாரி. பெங்களூருவில் வேலையில் இருந்தவளுக்கு சென்னையில் வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் அதன் நிமித்தமாக இரவுப் பயணம். ரயில் நிலையத்தில் காத்திருந்தோம்.

“நாலு நாளா பயங்கர வலிம்மா.கிளம்பற நேரத்துல பீரியட் ஆயிருச்சுன்னா என்ன பண்றதுன்னு ஒரே பயமா இருந்துச்சு. நல்ல வேளை நேத்தே ஆயிருச்சு” என்று மனைவியிடம் சொல்லியபடியே என்னைப் பார்த்து, “இப்படி தாங்கப்பா பெங்களூர்ல முதல் நாள் ஹெச்ஆர் கூடப் பேசிக்கிட்டு இருக்கும் போதே பீரியட் ஆயிருச்சு. பல்லைக் கடிச்சுக்கிட்டு சமாளிச்சிட்டேன்” என்றாள்.

நான் உடனே, “கொஞ்சம் மெதுவாகப் பேசு. பக்கத்துல ஆம்பளைங்களா இருக்காங்க” என்றதும் சட்டெனச் சுருங்கிய மகளின் முகம் மெல்லச் சிவந்து, “ஆம்பளைங்க இருந்தா என்னங்கப்பா? எச்சில் துப்புற மாதிரி, மூக்கு சிந்துற மாதிரி பீரியடும் சாதாரண விஷயம். இதுல கூச்சப்படுறதுக்கு என்ன இருக்கு? இதுக்கே இப்படிச் சொல்றீங்களே, பெங்களூர்ல கூட வேலை செய்யற அண்ணனுங்ககிட்ட தான், ‘அண்ணா பீரியட் ஆயிருச்சு. கொஞ்சம் நாப்கின் வாங்கிட்டு வர்றீங்களா’ன்னு கேட்பேன். அவங்களும் வாங்கி வந்து தந்துருக்காங்க...

பீரியட்ஸ் பத்தி பேசறது உங்களுக்கு அசிங்கமா இருந்துச்சுன்னா, இனிமே அதைப் பத்தி உங்ககிட்ட பேச மாட்டேன்” என்றாள். மாதவிடாய் குறித்த எனது அழுக்குப் புரிதலை மாற்றும் வகையில் அமைந்தது அந்த இரவு நேரப் பயணம்.

- சு. புஷ்பராஜ், கோயமுத்தூர்.

அழுக்குச் சிந்தனையை கழுவி ஊற்றிய மகள்! | என் பாதையில்
சமையலறையில் இருந்து சட்டமன்றம் நோக்கி... | அரசியல் அறிவோம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in