Published : 17 May 2022 02:28 PM
Last Updated : 17 May 2022 02:28 PM

நடிகையும் மாடலுமான திருநங்கை மரணம்: கேரளத்தில் தொடரும் சோகம்

கொச்சியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் கேரள நடிகையும் மாடலுமாகிய செரீன் செலியின் மாத்யூவை இறந்த நிலையில் கண்டுபிடித்துள்ளனர். ஆலப்புழையைச் சேர்ந்த இவர், பல நாட்களாக இந்தக் குடியிருப்பில்தான் இருந்துவருகிறார். இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் திருநங்கையர் பலரும் வசித்துவருகின்றனர். நேற்று முதல் செரீன் காணாதது கொண்டு வீட்டைத் திறந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரது உடலை மீட்டுள்ளனர்.

வீடியோ அழைப்பு செய்தபடி அவர் தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது. ஆனால், யாருக்கு அழைத்தார் என்ற விபரம் வெளியிடப்பட்டவில்லை. மேலும் அங்குப் பயன்படுத்தப்பட்ட மாத்திரைத் தாள்கள் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. அவர் நேற்றே இறந்திருக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தான் மனக் கஷ்டத்தில் இருப்பதாக அவர் சமூக வலைத்தளத்தில் ஏற்கெனவே எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் இவரது இணையருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்தது எனச் சகத் திருநங்கையர் தெரிவித்திருக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு மாடலும் நடிகையுமான சஹானா கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டில் இதேபோல் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் தற்கொலைசெய்து கொண்டார் எனக் கணவர் தரப்பில் சொல்லப்பட்டாலும் போலீஸ் அதைச் சந்தேகத்துக்கு உரிய மரணமாகவே விசாரித்து வருகிறது.

அதற்குச் சில வாரங்கள் முன்பு மாடலும் விலாக்கருமான ரிஃபா மெஹ்னு துபாயில் மரணமடைந்தார். அவரது உடல் இந்தியா கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பிறகு அவரது பெற்றோர் சாவில் சந்தேகம் இருப்பதாகச் சொல்லி விசாரணை கோரினர். அதன்படி உடல் தோண்டியெடுக்கப்பட்டு விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்த வழக்கில் அவரது கணவர் மெஹ்னுவுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அவரைப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு மாத இடைவெளிக்குள் மாடல் ஒருவர் கேரளத்தில் தற்கொலை என்ற பெயரில் இறப்பது இது மூன்றாவது முறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x