Last Updated : 08 May, 2016 02:33 PM

 

Published : 08 May 2016 02:33 PM
Last Updated : 08 May 2016 02:33 PM

போகிற போக்கில்: விற்பனையில் சாதிக்கும் பள்ளி மாணவி!

தனிமை விரும்பியான ஒரு பதின்பருவச் சிறுமிக்கு உலகளாவிய நட்பு வட்டத்தையும், புதிய வாழ்க்கைச் சூழலையும் உருவாக்கித் தந்துள்ளது க்வில்லிங் எனப்படும் காகிதக் கலை.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, பெரியார் நகரைச் சேர்ந்த அன்புகாமராஜ், சுந்தரி தம்பதியரின் இளைய மகள் அபிருதா. தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு முடித்துவிட்டுப் பத்தாம் வகுப்பு செல்ல இருக்கிறார். அப்பாவும் அக்காவும் வெளியூரில் பணிபுரிவதாலும், அக்கம் பக்கம் தன் வயதுச் சிறுமிகள் இல்லாததாலும் அபிருதாவுக்கு தனிமைச் சூழல்.

இயல்பிலேயே தனிமை விரும்பியான அபிருதாவை நினைத்து குடும்பத்தினருக்குக் கவலை. அக்கா சுதாவுக்குக் கூடுதல் கவலை. இந்த நேரத்தில்தான் க்வில்லிங் காகித வடிவமைப்புக் கலை குறித்த ஆர்வம் அபிருதாவுக்குள் அரும்பியது. இதையறிந்த சுதா, தனது லேப்டாப் மூலம் யுடியூபில் க்வில்லிங் கலை வடிவமைப்பு குறித்த விடியோக்களைப் பதிவிறக்கித் தந்துள்ளார்.

இதைப் பார்த்தே தனது கலைத் திறனை வளர்த்துக்கொண்ட அபிருதாவுக்கு, இப்போது நிற்க நேரமில்லை. படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தோடுகள், ஜிமிக்கி, கார்ட்டூன், மனித, கடவுள் உருவங்களைப் படைப்பதில் பிஸியாக இருக்கிறார். கூடவே, அக்காவின் முகநூல் நண்பர்கள் மூலம் புதிய நட்பு வட்டத்தையும், அவர்கள் மூலம் உலகளாவிய விற்பனை வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

குடும்பத்தினர், அவர் சகஜமாகப் பேசுவதில்லை எனக் கவலை கொண்டிருக்க, க்வில்லிங் கலை குறித்துக் கேட்டதுமே அருவி போலக் கொட்டத் தொடங்கிவிடுகிறார் அபிருதா.

“எனக்குச் சின்ன வயதிலேயே வரைவதில் அதிக ஆர்வம் இருந்தது. பிஸ்கட் டப்பா, சாக்லேட் பேப்பர், வேஸ்ட் பொருட்களை வைத்து எனது பொம்மைக்கு வீடு, ட்ரெஸ்களை விதவிதமா உருவாக்குவேன். அக்கா நன்றாக ஓவியம் வரைவார். அவரைப் பார்த்து ஓவியம் வரையக் கற்றுக்கொண்டேன். போன வருஷம் என் ஃபிரெண்ட் க்வில்லிங் செய்வதைப் பார்த்தேன். எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது. அம்மாவும் அக்காவும் அதற்கான பொருட்களை வாங்கித் தந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக நானே கற்றுக்கொண்டேன்” என்று சொல்கிறார் அபிருதா

டிரெண்டி க்வில்ஸ்

இவருக்காக முகநூல் பக்கத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் அக்கா சுதா. ‘டிரெண்டி க்வில்ஸ்’ என்ற அந்தப் பக்கத்தில் அபிருதா செய்கிற கலைப் பொருட்களின் படங்களைப் பதிவிட, பாராட்டு குவிந்தது.

“முதல் ஆர்டரை, ஆந்திராவின் கோதாவரியைச் சேர்ந்த ஒரு அக்கா தந்தார்கள். நான் செய்து அனுப்ப, அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. தொடர்ந்து நிறைய ஆர்டர்கள் வரத் தொடங்கின. இப்போது லண்டன், ஜெர்மனி, ஹாங்காங்கில் உள்ள தஞ்சாவூர், மைசூரைச் சேர்ந்தவர்களும் க்வில்லிங் டிசைன்களை கேட்டு வாங்கி வருகின்றனர்” என்று புன்னகைக்கிறார் அபிருதா.

இவர் செய்கிற வேலைப்பாடுகளில் மணமகன் - மணமகள் பொம்மைக்கு வரவேற்பு அதிகம். திருமணத்தில் கலந்துகொள்கிறவர்களுக்குத் தாம்பூலத்துடன் இந்தப் பொம்மைகளைத் தருவதால் ஆர்டர் நிறைய கிடைக்கிறதாம்.

“என்னைப் பார்த்து என்னோட ஃபிரெண்ட்ஸும் க்வில்லிங் செய்கின்றனர். வகுப்பில் ஓய்வு நேரங்களில், கிடைக்கிற தாளை வெட்டி, விதவிதமாகச் செய்து விடுவோம். வீட்டுக்கு வந்தவுடன், முதலில் ஆர்டர்களை முடித்து விட்டு, பள்ளிப் பாடங்களையும் முடித்து விடுவேன்” என்று பொறுப்புடன் சொல்கிறார் அபிருதா.

படங்கள்: ஜான் விக்டர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x