Last Updated : 14 May, 2017 01:16 PM

 

Published : 14 May 2017 01:16 PM
Last Updated : 14 May 2017 01:16 PM

வானவில் பெண்கள்: நாடு மாறினால் வீடு மாறும்!

சுவிட்சர்லாந்தின் ஜுரிச் பல்கலைக்கழகத்தில் நெட்-வொர்க் ஒருங்கிணைப்பாளராகவும் மொழிபெயர்ப் பாளராகவும் இருப்பவர் திருநங்கை தனுஜா தனபாலசிங்கம்.

சுவிட்சர்லாந்தின் பெர்ன் கலாச்சார மையத்தில் இந்து மதத்தில் மாற்றுப் பாலினர், தன் பாலின ஈர்ப்புள்ளவர்கள் குறித்து உரை நிகழ்த்தியிருக்கிறார் தனுஜா. இவர் ஜெர்மனியின், கலோனில் ரூபிகான் தன்னார்வ அமைப்பில் இணைந்து, தெற்காசிய மாற்றுப் பாலினத்தவரின் பிரச்சினைகளுக்கு உதவும் பணியைச் செய்துவருகிறார். கனடா தமிழ்ச் சங்கத்தின் அழைப்பை ஏற்று மேற்கத்திய நாடுகளில் தமிழ்த் திருநங்கைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்.

ஐரோப்பிய நாடுகளில் செயல்படும் ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்டு, ஐரோப்பாவிலிருக்கும் தெற்காசியாவைச் சேர்ந்த மாற்றுப் பாலினத்தவர் குறித்துப் பேசியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த ‘பார்ன் டூ வின்’ அமைப்பின் சிகரம் தொட்ட சாதனையாளர் விருதைப் பெறுவதற்கும், கூவாகம் திருவிழாவில் பங்கேற்பதற்கும் தமிழகம் வந்திருந்த தனுஜாவிடம் உரையாடியதிலிருந்து:

ஜெர்மன் போன்ற நாடுகளில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சினைகள் இருக்கின்றன?

இந்தியா போன்ற நாடுகளில் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படுவதும் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் புறக்கணிப்பும் நடக்கும். இவற்றால் உளவியல் ரீதியான அழுத்தங்களும் இருக்கும். ஆனால் ஐரோப்பிய நாடுகளின் நிலை வேறு. அந்த நாட்டின் குடிமகன்களாக இருக்கும் மாற்றுப் பாலினத்தவருக்கு 1980களிலேயே விழிப்புணர்வு கிடைத்துவிட்டது. ஆனால் தெற்காசியாவிலிருந்து குடியேறியவர்கள் இந்த விஷயத்தில் 20 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்தியா, இலங்கை பரவாயில்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மாற்றுப் பாலினத்தவர் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. இந்த நாடுகளிலெல்லாம் மாற்றுப் பாலினத்தவர்களை கவுரவக் கொலை செய்வது சாதாரண நிகழ்வாக இருக்கிறது. இந்தப் பின்னணியிலிருந்து, ஐரோப்பாவில் குடியேறிய பெற்றோர்களுக்கும் தங்களின் பிள்ளைகள் மாற்றுப் பாலினமாக அறியப்படும் போது, அதை எதிர்கொள்வதில் தடுமாற்றம் இருக்கிறது. அவர்களுக்கு மாற்றுப் பாலினம் குறித்த விழிப்புணர்வை அளித்து அவர்களைக் குடும்பத்திலிருந்து தனிமைப்படுத்துவதைத் தடுக்கும் பணியைச் செய்துவருகிறோம்.

மற்றபடி அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், மாற்றுப் பாலினத்தவரை அரசு அங்கே அங்கீகரித்திருக்கிறது. திருநங்கை என்றால் பாலியல் தொழில்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் அங்கில்லை. திருநங்கை என்பதற்காக ஒரு நிறுவனத்தில் அவர்களுக்குப் பணி மறுக்கப்பட்டால், அந்த நாட்டில் சட்டப்படி அது தண்டனைக்குரிய குற்றம். ஆனால் பணியும் கைநிறையச் சம்பளமும் மட்டுமே சந்தோஷத்தைக் கொடுத்துவிடாது. தனிமையின் வெறுமையில் போதையின் பிடியில் இருந்து மாற்றுப் பாலினத்தவரை மீட்பதுதான் எங்களின் முக்கியப் பணி. தெற்காசிய மாற்றுப் பாலினத்தவருக்குக் குடும்பத்தின் அருகாமை அவசியம் என்பதைப் புரியவைக்கிறோம்.

இன வெறிப் பிரச்சினை எந்தளவுக்கு இருக்கிறது?

நிச்சயமாக இருக்கிறது. கறுப்புத் தோல் கொண்ட மாற்றுப் பாலினத்தவருக்கு இரண்டு மடங்கு இனவெறிக் கொடுமை இருக்கிறது. ஆனால் சட்டத்தின் வழியாகத்தான் இதற்குத் தீர்வு காண வேண்டும். சகித்துக் கொண்டுதான் வாழ வேண்டும்.

ஐரோப்பாவில் ஒரு திருநங்கை குறைந்த தலைமுடியுடன் தெருவில் நடந்தால் நிச்சயம் அவர்களின் மீது ஆண்களின் தாக்குதல் நடக்கும். அதனால் முழுமையாக மாறும்வரை ஆண் உடையிலேயே இருக்க வலியுறுத்துகிறோம். என்னதான் முன்னேறிய நாடாக இருந்தாலும் அங்கும் இதற்கான விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஆனால் முழுமையாக மாறிவிட்ட திருநங்கைக்கு அங்கு பெரிய மரியாதை இருக்கிறது.

உங்களின் தற்போதைய பணி என்ன?

சுவிட்சர்லாந்தின் எத்னாலஜி பல்கலைக்கழகத்தில் பாலியல் குறித்த ஆய்வுகளுக்கு, திருநங்கை குறித்த வாழ்க்கை முறை, நூல்கள் பற்றிய புரிதல்களை ஆய்வாளர்களுக்கு ஏற்படுத்தும் பணியில் இருக்கிறேன். இந்த அடிப்படையில்தான் திருநங்கை ரேவதி ஆறுமுகம் அம்மாவை, அவர்களின் A Truth about Me நூலை அவர்களைக் கொண்டே படிக்கவைத்து, அவரோடு அங்கிருக்கும் மாணவர்களை உரையாட வைத்தேன்.

இங்கிருக்கும் ஜமாத் முறை, அம்மா, பெண் உறவு முறை குறித்து?

தமிழகத் திருaநங்கை ஜமாத் மிகப் பெரியது. ஐரோப்பாவிலேயே தமிழ் திருநங்கைகள் 30 பேர் இருப்பார்கள். திருநங்கைகளை வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலில் தள்ளும் முறை அங்கு இல்லை. அங்கிருக்கும் பல பகுதிகளைச் சேர்ந்த ஜமாத்தும் திருநங்கைகளின் படிப்பு, வேலை வாய்ப்பையே முன்னிறுத்துகின்றன.

377-வது சட்டப் பிரிவை நீக்க வேண்டும் என்னும் மாற்றுப் பாலினத்தவரின் கோரிக்கை அங்கு எப்படிப் பார்க்கப் படுகிறது?

இது பிரிட்டிஷாரால் ஏற்படுத்தப்பட்ட சட்டம். ஆனால் அவர்கள் நாட்டிலேயே 1960-களில் இந்தச் சட்டத்தை எடுத்துவிட்டனர். மாற்றுப் பாலினத்தவருக்குச் சட்டப்படி அங்கீகாரம் கிடைப்பதை இந்தச் சட்டம்

தடுக்கிறது. ஜெர்மனியில் அந்தச் சட்டமே இல்லை. ஆனால் என் அம்மா செய்திகளின் வழியாக அறிந்து பயந்தார். திருநங்கை என்ற பெயர் மலேசியாவில் நிறையப் பேருக்குப் பெரிய மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டப்படி அங்கீகாரம் கிடைக்கும் போது, நாடு மாறுகிறது என்று அர்த்தம். அவர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படும். கல்வி, வேலை வாய்ப்புகளில் தடைகள் நீங்கும். நாடு மாறினால், வீடு மாறும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x