Last Updated : 23 Jun, 2019 09:18 AM

 

Published : 23 Jun 2019 09:18 AM
Last Updated : 23 Jun 2019 09:18 AM

இனி எல்லாம் நலமே 11: குழந்தைப்பேற்றைப் பாதிக்கும் தொற்று

ஒரு பெண்ணுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கடந்தும் குழந்தைப்பேறு இல்லை என்று என்னிடம் வந்தார்கள். எல்லாப் பரிசோதனைகளையும் முடித்து, லேப்ராஸ்கோபி செய்துபார்த்த போதுதான் இரண்டு பக்கச் சினைக் குழல்களும் ஒட்டுமொத்தமாகப் பாதிப்படைந்திருந்தது தெரிந்தது.

ஏன் இப்படி இரண்டு பக்கச் சினைக் குழல்களும் பாதிப்படைந்தன என்று முதலில் புரியவில்லை. பிறகு தோண்டித் துருவி கேட்டபோதுதான் காரணம் தெரிந்தது. அந்தப் பெண்ணுக்குப் பள்ளிப் பருவத்திலேயே அடிக்கடி சிறுநீர்த்தடத் தொற்றுப் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

அதனால், அடிக்கடி வயிற்று வலியாலும் அவதிப்பட்டிருக்கிறார். முதலில் பிரச்சினை வந்தபோது வெளியே சொல்லவில்லை. பிரச்சினை அதிகமாகி மருத்துவரிடம் சென்றபோதெல்லாம் தற்காலிகமாக ஏதோ செய்திருக்கிறார்கள்.

அதிகமாகத் தண்ணீர் குடிக்கும்படி பெரியவர்கள் ஆலோசனை சொல்லியிருக்கின்றனர். வெள்ளைப்படுதல் அதிகமாக இருப்பது பற்றியோ, அது நிறம் மாறி இருந்தது பற்றியோ அவள் வெட்கப்பட்டுக்கொண்டு யாரிடமும் சொல்லவில்லை.

திருமணத்துக்குப் பிறகு அதே பிரச்சினை தொடர்ந்தபோது ஏதோ சிகிச்சை எடுத்திருக்கிறார். ஆனால், அதற்குள் பிரச்சினை முற்றிவிட்டது. கிருமித் தொற்று, சினைக் குழல்கள்வரை பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

சினைப்பையுடன் சேர்ந்து ஒரு கட்டிபோல் உருவாகிவிட்டது. வேறு வழியில்லாமல் கட்டியை எடுத்தது மட்டுமல்லாமல், சினைக் குழல்களையும் எடுக்க வேண்டியதாகிவிட்டது. செயற்கைக் கருத்தரிப்பு மூலம்தான் குழந்தை பிறக்கவைக்க முடிந்தது. 25 வயதுப் பெண்ணுக்கு இப்படிச் செய்ய நேர்ந்ததற்கான காரணம் கிருமித்தொற்று பற்றியும் அது சினைக் குழல்களையும் பாதிக்கும் என்பது பற்றியும் விழிப்புணர்வு  இல்லாததுதான்.

சினைக் குழலில் வளர்ந்த கரு

மூன்றரை மாதக் கர்ப்பத்துடன் ஒரு பெண் என்னிடம் வந்தார். “வயிற்றில் ஒரு பக்கமாக வலிக்கிறது. மாதவிடாய் தள்ளிப்போய்விட்டது. கர்ப்பம்தான்னு நினைக்கிறேன். ஆனால், கொஞ்ச நாள் ஆகட்டும்; அப்புறம் ஸ்கேன் பண்ணலாம்.

இப்பவே எதுக்குப் பண்ணணும்னு பெரியவங்க சொல்லிட்டாங்க” என்றாள். ஸ்கேன் செய்து பார்த்ததில் சினைக் குழல்களில் கரு வளர்வது தெரிந்தது. அதை லேப்ராஸ்கோப்பி மூலம் கலைத்துவிட்டோம். சினைக்குழல்களைக் காப்பாற்ற முடிந்தது.

ஆனால் வேறொரு பெண், கர்ப்பகாலத்தில் லேசாக உதிரம் வருகிறது என்று வந்தார். அவரை ஸ்கேன் அறைக்கு அனுப்பி ஸ்கேன் எடுக்கச் சொன்னேன். சிறிது நேரத்தில் மருத்துவமனை பணியாளர் பதறியபடி வந்து என்னை அழைத்தார்.

ஸ்கேனில் நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கருக்குழாயில் வளர்ந்திருந்த கரு வெடித்துச் சிதறியது. கருக்குழாயையும் சேர்த்தே அகற்ற வேண்டியதாகப் போயிற்று. 

சினைப்பையில் முட்டை உருவாகி, கருப்பபைக்கு வருவது எல்லோருக்கும் தெரியும்.  ஆனால், கரு உருவாகும் நிகழ்வு சினைப்பை, கருப்பை இரண்டிலுமே நடக்காது. சினைக் குழல்களில்தான் கரு உருவாகும். சினைக் குழல்களில் தொற்றுப் பிரச்சினை ஏற்படுவது ஒரு நாள் நிகழ்வல்ல.

வளரிளம் பருவத்தில் உள்ள பெண்கள், பிறப்புறுப்பு சுத்தம் பற்றி அக்கறை கொள்ளாவிட்டால் அது பின்னாளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிக நேரம் சிறுநீரை அடக்கிவைப்பது, சிறுநீர், மலம் கழித்த பிறகு சரியாகக் கழுவாமல் விடுவது, வியர்வையை உறிஞ்சாத உள்ளாடைகளை அணிவது போன்றவற்றால் பிறப்புறுப்பில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படும்.

சுகாதாரமற்ற கழிப்பறைகளைப் பயன்படுத்துவதாலும் கிருமித்தொற்று ஏற்படும். இப்படி ஏற்படுகிற சிறுநீர்த்தடத் தொற்றுக்குச் சரியாகச் சிகிச்சை அளிக்காதபோது கிருமித் தொற்று மேலே ஏறி சினைக் குழல்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எங்கே கரு உருவாகும்?

கருப்பையின் இருபுறங்களிலும் சினைப்பைகள் உள்ளன. இந்தச் சினைப்பையும் கருப்பையும் சினைக் குழல்களால் இணைக்கப்பட்டுள்ளன. சினைப் பையில் முதிர்ச்சி அடைந்த முட்டையைச் சினைக் குழல்களில் உள்ள கை போன்ற அமைப்பு இழுத்து, குழலினுள் அனுப்புகிறது.

சினைக் குழலில் இருக்கும் பெண்ணின் முட்டை, ஆணின் விந்தணுவைச் சினைக் குழல்களில்தான் சந்திக்கிறது. அங்குதான் கருவும் உருவாகிறது. பிறகு கருப்பைக்குள் வந்து குழந்தை வளர்வதற்குத் தயாராக உள்ள படுக்கையில் பதிகிறது. எனவே, சினைக் குழல்களில் பிரச்சினை இருந்தால் கருவுறுவதில் சிக்கல் ஏற்படும்.

சினைக் குழல்களின் ஒரு பகுதி கருப்பையில் போய் முடியும். இது திறந்த நிலையில் இருக்கும். சினைக் குழல்களின் மறுபகுதி சினைப்பை அருகில் அகலமாகக் கை விரல் போன்ற திசுக்களுடன் வெளியே வரும் முட்டையை உறிஞ்சி இழுக்கும் தன்மையோடு இருக்கும்.

அப்படி உறிஞ்சப்பட்ட முட்டை, விந்தணுவுடன் சேர்ந்து கரு உருவாகும்போது அந்தக் கருவைச் சினைக் குழாய்களில் உள்ள மெல்லிய மயிரிழைகள் போன்ற அமைப்பு, தள்ளித் தள்ளி கருப்பைக்குள் அனுப்புகிறது. உருவான கரு இப்படிக் கருப்பையைப் போய்ச் சேராமல் சில நேரம் சினைக் குழல்களிலேயே தங்கி வளர ஆரம்பிக்கும்.

சிறு தொற்றும் ஆபத்து

இதை ஸ்கேன் மூலம்தான் கண்டறிய இயலும். கருவுற்றவுடன் ஸ்கேன் செய்யச் சொல்வது இதற்குத்தான்.  கரு, சினைக் குழல்களிலேயே தங்கிவிட்டதா சரியாகக் கருப்பைக்குள் போய்ச் சேர்ந்துவிட்டதா என்பதை ஸ்கேன் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

கருப்பை, சினைப்பை, சினைக் குழல்கள், இடுப்பெலும்பின் உட்பகுதி போன்ற இடங்களில் நோய்த்தொற்று ஏற்படும்போது அதை, ‘இடுப்பு அழற்சி’ (Pelvic Inflammation Disease) என்கிறோம். அடிவயிறு வலித்தல், பிறப்புறுப்பில் திரவக்கசிவு, காய்ச்சல், எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுதல், சீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி இப்படி எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

சிறு வயதில் அடிக்கடி சிறுநீர்த்தடத் தொற்று ஏற்பட்டிருந்தால், அதற்குச் சரிவர சிகிச்சை எடுக்காமல் விட்டிருந்தால் சினைக் குழல்களில் பிரச்சினை ஏற்படலாம். காசநோயாலும் சிலரின் சினைக் குழல்கள் பாதிப்படையலாம்.

திருமணமான புதிதில் பிரச்சினை வரக் கூடாது என்றால் பிறப்புறுப்பு சுகாதாரம் முக்கியம். கருவுற்ற பெண்கள் கர்ப்பக் காலத்தின் ஆரம்ப கட்டத்திலேயே ஸ்கேன் செய்து பார்ப்பது நல்லது. பிரச்சினையை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாகத் தீர்க்கலாம். குழந்தைப்பேற்றையொட்டி சினைக் குழல்களில் ஏற்படும் பிரச்சினைகளைப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

5jpgrightசினைப் பையில் முதிர்ச்சி அடைந்த முட்டையைச் சினைக் குழல்களில் உள்ள கை போன்ற அமைப்பு இழுத்து, குழலினுள் அனுப்புகிறது. சினைக் குழலில் இருக்கும் பெண்ணின் முட்டை, ஆணின் விந்தணுவைச் சினைக் குழல்களில்தான் சந்திக்கிறது. அங்குதான் கருவும் உருவாகிறது.

 

(நலம் நாடுவோம்)

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.

தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x