Published : 18 Mar 2018 10:50 AM
Last Updated : 18 Mar 2018 10:50 AM

முகங்கள்: சமவாய்ப்பே எங்கள் தேவை

ம் நாட்டில் லட்சக்கணக்கானோர் முதுகுத் தண்டுவடம், போலியோ போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, நடமாட முடியாமல் இருக்கின்றனர். மிகச் சிலரே சக்கர நாற்காலி, செயற்கைக் கால் போன்றவற்றின் உதவியோடு ஓரளவு சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆனால், வறுமையில் வாடுபவர்களும் போதுமான விழிப்புணர்வு இல்லாதவர்களும் அடிப்படையான சிகிச்சைகளைக்கூடப் பெற முடியாமல் துன்புறுகிறார்கள்.

பல இடங்களில் குடும்பமே இவர்களைச் சுமையாக நினைக்கும் சூழ்நிலையில், தன்னைப் போல முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதுகுத் தண்டாக இருந்து உதவிவருகிறார் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன். நடமாட முடியவில்லை என்றாலும் சகமனிதர்களைப் போல வாழ வேண்டும் என்ற அவர்களது ஆசைகளையும் கனவுகளையும் தன்னால் முடிந்த அளவுக்கு ப்ரீத்தி நிறைவேற்றி வைக்கிறார்.

வாழ்வை மாற்றிய விபத்து

“என் பெற்றோருக்கு நான் எப்போதும் செல்லப்பிள்ளை. படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கினேன். எட்டு வயதிலேயே சீனியர் அணிக்காக கிரிக்கெட் விளையாடினேன். பின்னாளில் தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணிக்குக் கேப்டனாகவும் செயல்பட்டேன்” என்று சொல்லும் ப்ரீத்தி, அமெரிக்காவில் படித்தபோது பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவி என்ற பட்டத்தைப் பெற்றார். அற்புதமான தருணங்களோடு வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது. “அந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து என் வாழ்வை ஒரு நொடியில் தலைகீழாகப் புரட்டிப் போட்டது” என்று சொல்கிறார் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன்.

சாலை விபத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிப்புக்குள்ளாகி ப்ரீத்தியின் கழுத்துக்குக் கீழ் உள்ள அனைத்து உறுப்புகளும் செயலிழந்துபோயின. இதனால் அவர் இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்தார். சாவதே மேல் என்று பலமுறை நினைத்ததாக ப்ரீத்தி சொல்கிறார். அந்தக் காலகட்டத்தில் பெற்றோர்தான் அவரை அக்கறையுடன் கவனித்துக்கொண்டனர். நம்பிக்கை வார்த்தைகளின் மூலம் ஊக்கமூட்டிய தந்தை இறந்துவிட, அந்தச் சோகத்திலிருந்து மீள்வதற்குள் அவருடைய அம்மாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. ‘உன்னை இதற்கு மேல் யார் பார்த்துக்கொள்வார்கள்? உன் எதிர்காலம் என்னவாகும்?’ போன்ற கேள்விகளைச் சுற்றமும் உறவும் எழுப்பின.

தோள் கொடுத்த தோழி

மனதளவில் நொறுங்கிப்போன ப்ரீத்தி, சாய்வதற்குத் தோள் கிடைக்குமா என ஏங்கித் தேடியிருக்கிறார். முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் இல்லை என்பது ப்ரீத்திக்கு அப்போதுதான் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்தவர், மற்றவர்கள் சாயும் தோள்களாகத் தானே மாற முடிவெடுத்தார்.

அம்மா அளித்த ஊக்கத்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டுக்காக ‘ஸோல் ப்ரீ ’ (soul free) என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் மாத ஊக்கத்தொகையையும் ப்ரீத்தி வழங்குகிறார். இப்படியான உதவிகளோடு மட்டும் தனது சேவையைச் சுருக்கிக்கொள்ளாமல் அவர்களின் திறமைகளை ஊக்குவித்து தொழிற்பயிற்சியையும் இவரது நிறுவனம் மூலம் வழங்கிவருகிறார்.

முதுகுத் தண்டுவடப் பாதிப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் இவர் ஈடுபட்டுவருகிறார். கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்குத் தனது வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்வதன் மூலம் ஊக்கமளித்துவருகிறார். “எங்களைப் போன்றவர்களுக்கு உங்கள் அனுதாபமும் பச்சாதாபமும் தேவையில்லை. எங்களுக்குச் சமவாய்ப்பும் ஒத்துழைப்பும் தந்தாலே போதும்” என்று தெளிவாகப் பேசுகிறார் ப்ரீத்தி. அவரது சேவைக்காகத் தமிழக அரசு கடந்த ஆண்டு கல்பனா சாவ்லா விருது வழங்கிக் கவுரவப்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x