Last Updated : 19 Nov, 2017 11:45 AM

 

Published : 19 Nov 2017 11:45 AM
Last Updated : 19 Nov 2017 11:45 AM

புதிய ராகங்கள்: நெஞ்சுக்குள் ஒலிக்கும் குரல்

எங்க போன ராசா…’ பாடல், தவிக்கும் மனதோடு கடற்கரை மணலில் நடக்கும் அனுபவம் என்றால், ‘நான் நீ நாம் ஆகவே’ பாடல் காதலின் ரகசியம் பேசும்.

ஒரு பாடலுக்கு எப்படித் தயாராவீர்கள்?

“பாட்டின் வரிகளில் பாடலுக்கான சூழல் தெரியும். திரையில் நடிப்பவர்களுக்கு இணையாக நம் குரலும் நடிக்க வேண்டும்”

- ‘பளிச்’சென்று பதில் வருகிறது சக்திஸ்ரீ கோபாலனிடமிருந்து.

திரைப்படப் பின்னணிப் பாடகியான இவர் பாப், கர்னாடக இசை, ஜாஸ், ராக்ப்ளூஸ் ஆகிய பாணிகளையும் அறிந்தவர். ‘ஆஃப் தி ரிகார்ட்’ எனும் பெயரில் சுதந்திரமான இசை நிகழ்ச்சி செய்யும் குழுவை நடத்திவந்தவர். எஸ்.எஸ். மியூசிக் நடத்திய குரல் தேடலில் தேர்வானவர். சென்னை லைவ் பேண்ட் நிகழ்ச்சிகளிலும் தனிக் கவனம் கிடைத்தது. லியான் ஜேம்ஸ், டோபி, தபஸ் ஆகியோருடன் இணைந்து ‘பைஜாமா கான்ஸ்பரஸி’ என்னும் சுதந்திர இசைக் குழுவில் ஆங்கில ஜாஸ் பாடல்களைப் பல நிகழ்ச்சிகளில் பாடியவர். தமிழிலும் இந்தியிலும் பாடல்களை எழுதுகிறார் சக்திஸ்ரீ. அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டிடக் கலை படிக்க வந்தவரை இசையும் பின்தொடர்ந்தது.

பதற்றத்தில் நடந்த தவறு

சக்திஸ்ரீ கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே அவரது யூடியூப் பாடல்களைக் கேட்டு இசையமைப்பாளர் குருபிரசாத், கன்னடப் படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார். இதற்கான ஒலிப்பதிவு ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் நடந்தது. அப்போது குருபிரசாத், ஆங்கிலத்தில் சில பாடல் வரிகளை எழுதிப் பாட முடியுமா என்று சக்தியிடம் கேட்டிருக்கிறார். அந்த வரிகளை எழுதி, பாடிப் பயிற்சி செய்துகொண்டிருந்த சக்தியைப் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோ மேனேஜரிடம் சக்தியின் தொலைபேசி எண்ணைக் கேட்கச் சொல்லியிருக்கிறார்.

“மேனேஜர் கேட்டபோது பதற்றத்தில் தவறான எண்ணைக் கொடுத்துவிட்டேன். அதன் பிறகு குருபிரசாத்திடமே தொலைபேசி எண்ணைக் கேட்டுவாங்கி ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் பாடல்களுக்குப் பின்னணிக் குரல் கொடுப்பதற்கு (backing vocalist) வாய்ப்பு கொடுத்தனர்” என்கிறார் சக்தி.

இந்தி ‘கஜினி’ படத்தில் பேக்கிங் வோக்கல் பாடுவதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாய்ப்பு கொடுத்தார். தமிழில் ‘தநா-07-அல 4777’ என்ற படத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்யப்பட்டார். ‘சொர்க்கம் மதுவிலே’ என்ற முதல் பாடலே டூயட்டாக அமைந்தது. ரஹ்மான் இசையில் தமிழில் இவர் பாடிய முதல் பாடல் ‘கடல்’படத்தில் வரும் ‘நெஞ்சுக்குள்ளே...’. இந்தப் பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது கிடைத்தது. அது தொடங்கி வரிசையாகப் பின்னணி பாடுவதற்கான வாய்ப்புகள் வரத் தொடங்கின.

ஜாஸ் சுப்ரபாதம்

“பல நேரம் 90-களில் வெளிவந்த ஏ.ஆர்.ரஹ்மான் கேட்கப் பிடிக்கும். ஜாஸ் பாடல்களும் பிடிக்கும். ஆறாவது ஏழாவது படித்தபோதே இந்தப் பழக்கம் தொடங்கிவி்ட்டது. ஜாஸ்தான் எனக்கு சுப்ரபாதமே” என்கிறார் சக்தி.

“இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவருக்குமே ஒரு தனித்தன்மை இருக்கிறது. அது அவர்களின் இசையிலும் வெளிப்படும். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஒரு மேஜிக் இருக்கும். ‘இந்தப் பாட்டை உன் பாடலாக ஆக்கிவிடு’ என்பார். அதிலிருந்து எதை எடுக்கிறார் என்பதுதான் அவரது மேஜிக். அனிருத்திடம் இருக்கும் எனர்ஜி அவரது குழுவில் உள்ள எல்லோருக்கும் பரவிவிடும். ஷான் ரோல்டன் இசையில் நிபுணத்துவம் இருக்கும் அதே நேரத்தில் ஒரு ஹ்யூமர் கிளப்புக்குப் போய்வந்ததுபோல் புத்துணர்வு கிடைக்கும். சந்தோஷ் நாராயணனின் சவுண்ட்-ஸ்கேப்பிங் ரொம்ப வித்தியாசமா இருக்கும்” என்கிறார்.

ஜூக் பாக்ஸ் போல ‘நேற்று இல்லாத மாற்றம்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற பாடல்களைப் பாடிக்கொண்டே இருப்பாராம் சக்தி. பழைய பாடல்களில் ஜாஸ் இசையின் கூறுகளோடு ஒலிக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய ‘வர வேண்டும் ஒரு பொழுது’, ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ போன்ற பாடல்களின் வரிகளை ஹஸ்கி வாய்ஸில் பாடி அசத்துகிறார். ‘ரெட்ரோ’ நிகழ்ச்சிகளை நடத்துவோர் சக்திஸ்ரீயை அணுகலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x