

இளம் மஞ்சள் நிறத் தேகத்துடன் காட்சி தரும் முலாம் பழங்கள், கிர்ணிப் பழம் என்றும் சில பகுதிகளில் குமட்டிப் பழம் என்றும் அழைக்கப்படுகின்றன. வாட்டும் வெப்பத் தாக்குதல்களிருந்து உடலைப் பாதுகாக்க இயற்கை வழங்கிய கோடைப் பரிசு இது. வறண்ட தோலுடன் காட்சியளித்தாலும் உடலின் வறட்சியை நீக்கும் தன்மையுடையது.
நல்ல அடர்த்தியான மணமும் நீர் நிறைந்த சதைப்பற்றும், உன்னதமான சுவையும் கொண்டது முலாம் பழம். அதிகம் செலவின்றி உண்பவரின் வெப்ப உளைச்சலைக் களைவதோடு பசியையும் தூண்டக்கூடியது.
வரலாற்றில் முலாம்
ஜப்பானில் தயாரிக்கப்படும் பானங்களுக்கு மணம் கொடுக்க முலாம் பழங்களை உபயோகிக்கின்றனர். சீன மருத்துவத்தில் முலாம் பழங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாகச் சீனாவின் ’மிங்’ ராஜ்ஜியத்தில் முலாம் பழங்களுக்குச் சிறப்பான இடம் அளிக்கப்பட்டிருந்ததாம். முலாம் பழத்தைச் சமையலில் பயன்படுத்தும் விதம் குறித்து மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானிய எழுத்தாளர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். ஹனி டியூ, கசாபா, பெர்சிய ரகங்கள் என முலாம் பழத்தின் சுவையையும் தரத்தையும் கொண்டு பல வகைகள் இருக்கின்றன.
முலாமில் பொதிந்திருக்கும் ஊட்டங்கள்
வைட்டமின் – சி, வைட்டமின் – ஏ, ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம், சிறிதளவு நுண்ணூட்டங்களையும் கொண்டிருக்கின்றன. ஏறக்குறைய 90 சதவிகிதம் நீர்ச்சத்தையும் 9 சதவிகிதம் மாவுச் சத்தையும் குறைந்த அளவில் புரதத்தையும் கொழுப்பையும் கொண்டது முலாம் பழம். கேலிக் அமிலம், கேஃபிக் அமிலம், கேடிகின் போன்ற நலம் பயக்கும் பீனாலிக் வேதிப்பொருட்களை முலாம் பழங்கள் நிறையவே கொண்டிருக்கின்றன.
மருத்துவ பலன்கள்
வயிற்றுப் பொருமல், நாட்பட்ட மலக்கட்டை முலாம் பழச்சதைகள் குணப்படுத்துவதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. உடலின் நீரிழப்பைச் சரிசெய்ய முலாம் பழங்கள் ஏற்றவை. பகல் பொழுதில் சாப்பிட, தடைப்பட்ட செரிமானத்தைத் துரிதப்படுத்தும். திறம்பட மூளை செயல்படுவதற்கும் முலாம் பழங்கள் உதவுகின்றன. கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலைத் தடுப்பதற்கும், தாய்மார்களின் பால் சுரப்பை அதிகரிப்பதற்கும் முலாம் பழங்கள் உற்ற துணை.
வேனிற் காலங்களில் உடலை உரமாக்கச் சிறந்த பழம். வெப்பமகற்றிச் செய்கை, சிறுநீர்ப்பெருக்கிச் செய்கை ஆகியன இதன் நிரந்தரச் சொத்துக்கள். சிறுநீர்த் தாரையில் ஏற்படக்கூடிய தொற்றுகளையும் அழிக்கும் வல்லமை இதற்கு உண்டு. கபத்தை அதிகரிக்கும் தன்மையுடையதால் மழைக் காலங்களில் இதன் பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் கட்டுப்படுத்த முலாம் பழச்சாற்றோடு தேன் கலந்து பருகலாம். வெப்பக் கழிச்சலுக்கு, முலாம் பழத்தை மோரில் அடித்துச் சீரகத் தூள் தூவி சாப்பிடலாம். உடலுக்கு வன்மையை அளிக்கும் சித்த மருந்துகளில் இதன் விதைகள் சேர்க்கப்படுகின்றன. இதன் விதைகளுக்கு மலமிளக்கிச் செய்கையோடு சேர்த்துப் புழுக்களை அழிக்கும் வன்மையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முலாம் பழத் தோலை உலர்த்திப் பொடித்துத் தேங்காய் எண்ணெய் கலந்து சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களின் மீது தடவ விரைவில் குணம் கிடைக்கும். இதன் பொடித்த தோலை இயற்கைக் குளியல் பொடி கலவைகளில் கலந்து பயன்படுத்த, தேகம் பளபளப்பாகும். பழச்சதையைப் பாலோடு சேர்த்துக் குழைத்து முகத்தில் பூசிப் பதினைந்து நிமிடங்கள் கழித்து முகம் கழுவ, பளீச் பொலிவு உண்டாகும்.
முலாம் பழச் சதையோடு, சிறிது மிளகு, சீரகம், நிலவாகைப் பொடி கலந்து கொடுக்க, மலக்கட்டிலிருந்து உடனடியாக நிவாரணம் பெறலாம். குறிப்பாய் மூல நோய் குறி குணங்களான ஆசனவாய் எரிச்சல், வலி போன்றவற்றுக்குச் சிறந்த பலன் அளிக்கும். வயிற்றுப் புண் உடையவர்கள் முலாம் பழச் சதைகளை, நுங்கு சதையோடு குழைத்துச் சாப்பிட்டு வர விரைவில் குணம் கிடைக்கும்.
அதிக இரத்த அழுத்தம் உடையவர்கள் சாப்பிட வேண்டிய பழங்களுள் முலாம் பழம் முக்கிய இடம் பிடிக்கிறது. முலாம் பழத்தோடு சீரகம், வெண்தாமரை இதழ்களைச் சேர்த்துத் தினமும் சுவைத்து வர, அதிக இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். கண்களின் ஆரோக்கியத்திற்கும் இதிலுள்ள வைட்டமின் – ஏ துணை நிற்கும்.
மாதவிடாய் நேரங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைக் குறைக்க முலாம் பழச்சாறு அருந்தி வரலாம். உடற்சோர்வு, கெண்டைச் சதை வலி போன்ற குறி குணங்களுக்கு முலாம் பழத்தை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
பழத்தின் விதை முதல் தோல் வரை மருத்துவக் குணங்களை வெளிப்படுத்தவல்லன. இதன் விதைகளுக்கு எதிர்-ஆக்ஸிகரணி செய்கை இருப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுநீரைப் பெருக்கும் மருந்துகளோடு முலாம் பழ விதைகளும் கூட்டுச் சேர்ந்து கொண்டால் விரைவாகப் பலன் கிடைக்கும்.
பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
கைகளால் தூக்கும்போது கனமாக இருப்பதோடு, முகர்ந்து பார்க்கும்போது நாசியைத் துளைக்கும் வாசனையிருந்தால் தரமான பழம் என்று நம்பி வாங்கலாம். உட்பிரயோகமாகத் தோலை நாம் பயன்படுத்தப் போவதில்லை என்றாலும் தண்ணீரால் கழுவிய பிறகே உட்சதையை எடுக்க முற்பட வேண்டும். விரைவில் கெட்டுவிடும் என்பதால், சீக்கிரமாகப் பழத்தை உபயோகிப்பது அவசியம்.
எப்படிச் சாப்பிடலாம்?
பழத்தின் சதையோடு பனைவெல்லம் சேர்த்துக் கடித்துச் சாப்பிட அமிர்தமாய் இனிக்கும். பழச்சாறாகப் பருக எண்ணமிருப்பின், தண்ணீர் சேர்த்து சிறிது பனைவெல்லமோ கற்கண்டோ சேர்த்துக்கொள்ளலாம். சுவை தருகிறது என்பதற்காக வெள்ளை சர்க்கரையைச் சேர்க்க வேண்டாம்.
முலாம் பழ பனிக்கூழ்
முலாம் பழச் சதைகளைப் பெரிது பெரிதாகச் சீவி, சிறிது எலுமிச்சைச் சாறு, நன்னாரிச் சாறு கலந்து மேலே தேன் ஊற்றிக் கொடுக்க, உலகில் உள்ள மற்ற பனிக்கூழ் வகைகள் தோற்றுப் போகும். உடலுக்கு உடனடியாக ஆற்றலைத் தரக்கூடியது.
பழ மருந்து
முலாம் பழங்களோடு தயிர், பாதாம், உலர்ந்த திராட்சை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இதற்கு மேலே உலர்ந்த முலாம் பழ விதைகளைத் தூவிச் சாப்பிடலாம். ஊட்டம் கொடுக்கும் வேனிற் காலச் சிற்றுண்டியாக மட்டுமில்லாமல், செரிமான உபாதைகளை நீக்கும் மருந்தாகவும் செயல்படும்.
முலாம் பழ சல்சா
ஒரு கப் முலாம் பழச் சதைகள், தலா அரை கப் சின்ன வெங்காயம், தக்காளி, நறுக்கிய கொத்துமல்லி இலைகள், ஒரு பல் பூண்டு, மூன்று தேக்கரண்டி மாதுளைச் சாறு ஆகியவற்றை மொத்தமாக ஒரு பாத்திரத்தில் போட்டுப் பிரட்டிக் கொள்ள வேண்டியதுதான். இனிப்பும் புளிப்பும் கலந்த வித்தியாசமான சுவை கொடுக்கும் சல்சா, ஆரோக்கிய விருந்து!
கிரில்ட் முலாம்
இரண்டு ஸ்பூன் மிளகாய்த் தூள் மற்றும் அரை ஸ்பூன் சாதிக்காய் தூளை ஒன்றாகக் கலக்கிக் கொள்ளவும். அதை நீண்ட துண்டுகளாக வெட்டப்பட்ட முலாம் பழங்களின் மீது பூசி, கிரில்ட் ரகத்தில் சுட வைத்துக்கொள்ளவும். முலாம் பழத்தின் இனிப்பும், மிளகாயின் காரமும் சாதிக்காயின் தனித்துவமும் சிறப்பான உணவு அனுபவத்தைக் கொடுக்கும்.
முலாம் பழங்கள், கோடை வெப்பத்துக்கு இயற்கையே பூசும் குளிர்ச்சியான முலாம்!
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com