Last Updated : 02 Apr, 2016 01:09 PM

 

Published : 02 Apr 2016 01:09 PM
Last Updated : 02 Apr 2016 01:09 PM

பரிசோதனை ரகசியங்கள் - 25: மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனைகள்

பெண்களுக்கு ஏற்படுகிற புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இது நகர்ப்புறங்களில் வாழும் பெண்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் உள்ள லட்சம் பெண்களில் 32 பேருக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளது என்றும், இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் சொல்கிறது.

என்ன காரணம்?

இந்த நோய் வருவதற்குப் பரம்பரைதான் முக்கியக் காரணம். குடும்பத்தில் அம்மா, அக்கா, தங்கை மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வந்திருக்குமானால், அந்தக் குடும்பத்தில் பிறந்த மற்றவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தராத பெண்களுக்கும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்திய பெண்களுக்கும் இது வருவதுண்டு.

சிறு வயதிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வதும் இந்த நோய்க்கு வரவேற்பு தருகிறது. கோவிலுக்குச் செல்லும்போதும், வீட்டில் விசேஷ நாட்களின்போதும் மாதவிடாயைத் தள்ளிப்போடுவதற்காகப் பெண்கள் சில ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிடுவார்கள். இளம் வயதில் இதை எடுத்துக்கொண்டாலும் 20 வருடங்கள் கழித்து மார்பகப் புற்றுநோய்க்கு அது வழி அமைத்துவிடுகிறது.

தவறான உணவுப் பழக்கங்கள்

பெண்களுக்கு மார்பக வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபோவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவுக்கு மீறிச் சுரந்துவிட்டால் மார்பக வளர்ச்சியை அதிகப்படுத்திவிடும். இளம் வயதில் இது அழகாக இருக்கலாம். 40 வயதுக்கு மேல் இது ஆபத்தையே தரும். குறிப்பாக, இன்றைய இளம் பெண்கள் விரைவு உணவையும் பாக்கெட் உணவையும் மிகவும் விரும்பி உண்கிறார்கள். இவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பைத் தூண்டுகின்றன. இதன் விளைவால் உடல் பருமன் ஏற்படுகிறது. அதே வேளையில் மார்பகத் திசுக்களும் பெருகுகின்றன. இது இயற்கையை மீறி நிகழ்வதால், மார்பகத்தில் கட்டிகள் உருவாகவும் இது வழி செய்கிறது. அந்தக் கட்டி புற்றுநோயாக மாறுவதற்கும் இடம் தருகிறது.

குழந்தைகள் அதிகம் பெற்றுக்கொண்ட பெண்களுக்கும், குழந்தையே இல்லாத பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருகிற வாய்ப்பு அதிகம். அதேபோல 50 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்பவர்களுக்கும் இந்த நோய் வருகிறது. கணவர் புகைபிடிப்பவராக இருந்தால், அந்தப் புகையைச் சுவாசிக்கிற மனைவியையும் இது தாக்கும் ஆபத்து பல மடங்கு அதிகம்.

அறிகுறிகள்

மார்பகத் தோலின் நிற மாற்றம், தோல் சுருங்குதல், மார்பகக் காம்புகள் உள்நோக்கி இழுத்தல், காம்பிலிருந்து நீர்க்கசிவு, ரத்தக்கசிவு, மார்பகத்தில் கட்டி, வலி, அக்குளில் கட்டி போன்றவை மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள். இவற்றை அலட்சியம் செய்யாமல் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை பெற்றுக்கொண்டால் முழுவதுமாக குணம் கிடைக்கும். ஆனால், இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் இந்த அறிகுறிகளை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, நோயைக் கவனிப்பதில் தாமதப்படுத்தி, நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வருவதால் இந்த நோயால் மரணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகம்.

இத்தனைக்கும் இந்தப் புற்றுநோயைக் கண்டறிவது மிக எளிது. ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு வந்து நின்ற பின்னர், பெண்களே தங்களைச் சுயப் பரிசோதனை செய்துகொள்ளலாம். முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நின்று பார்க்கும்போது மார்புக் காம்பின் அளவிலோ, வடிவத்திலோ மாற்றம் தெரிந்தால், ரத்தக் கசிவு, நீர்க் கசிவு காணப்பட்டால், மார்பைக் கையால் அழுத்திப் பார்க்கும்போது வலி, கட்டி ஏதேனும் தோன்றினால் உடனடியாக மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

என்ன பரிசோதனைகள்?

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க ‘மாமோகிராம்’ (Mammogram) எனும் பரிசோதனை உள்ளது. நாற்பது வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் இந்தப் பரிசோதனையை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். இது ஒரு சிறப்பு எக்ஸ்-ரே பரிசோதனை. எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்திப் படம் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் மார்பகத்தில் நோய் வருவதற்கான அறிகுறிகள் இருப்பதை ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். பின்னர், மார்பகத்தில் தெரிகிற பாதிப்பு புற்றுநோயா, சாதாரணமானதா என்பதை உறுதி செய்ய பயாப்சி பரிசோதனை செய்யப்படுவது உண்டு.

இந்தக் கருவியின் விலை மிக அதிகம். அதனால் இதன் கட்டணமும் அதிகம். இதற்கு மாற்றாக வந்திருக்கிறது ‘தெர்மல் ஸ்கேனிங்’ (Thermal scanning) எனும் புதுத் தொழில்நுட்பம்.

நவீன பரிசோதனை

இந்த ஸ்கேன் கருவி ஒரு கேமராவைப் போன்று செயல்படுகிறது. அகச்சிவப்புக் கதிர்களை (Infra-red rays) பயன்படுத்தி மார்பகத்தை எல்லாக் கோணங்களிலும் இது படம் எடுக்கிறது. உடல் செயல்பாட்டின் அடிப்படையில் மார்பகத்தில் நோய்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் வெப்பம் அதிகரிக்கிறது; ரத்தம் அதிக அளவில் பாய்கிறது. அந்த இடங்களுக்கு ‘முக்கியப் பகுதிகள்’ (Hotspots) என்று பெயர். இந்த இடங்களைத்தான் தெர்மல் ஸ்கேன் படம் எடுத்துக் காண்பிக்கிறது.

மார்பகத்தில் மிகச் சிறிய அளவில் ஏற்படுகிற மாற்றங்களைக்கூட மிகத் துல்லியமாகப் படம் எடுத்துக் காண்பித்துவிடுகிறது. இதில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதியாகிவிட்டால், அடுத்து அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்கிறார்கள். தெர்மல் ஸ்கேன் படமெடுத்த பகுதியில் புற்றுநோய் எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பது இதில் தெரிந்துவிடும். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலிருந்து பயாப்சி பரிசோதனை செய்து, அது எந்த வகைப் புற்றுநோய் என்று தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடங்குகிறார்கள்.

இந்தப் பரிசோதனை மிக எளிமையானது. வலி இல்லாதது. எக்ஸ் கதிர்வீச்சுக்குப் பதிலாக அகச்சிவப்புக் கதிர்கள் இதில் பயன்படுத்தப்படுவதால் பக்கவிளைவுகள் எதுவுமில்லை. செலவும் மிகவும் குறைவு.





கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x