Last Updated : 19 Mar, 2016 11:58 AM

 

Published : 19 Mar 2016 11:58 AM
Last Updated : 19 Mar 2016 11:58 AM

பரிசோதனை ரகசியங்கள் - 23: சிறப்பு எக்ஸ்-ரே பரிசோதனைகள் செய்யப்படுவது ஏன்?

எக்ஸ் கதிர்களை மட்டும் தனியாகப் பயன்படுத்தி நெஞ்சில் உள்ள உறுப்புகளைப் பார்க்க முடிகிறது. ஆனால், இதேபோல் இக்கதிர்களை மட்டும் தனியாகப் பயன்படுத்தி உடலின் உள்ளுறுப்புகள் பலவற்றைப் பார்க்க முடியாத நிலைமை நீண்ட காலம் நீடித்தது. இந்தக் குறையைப் போக்க ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டது. எக்ஸ்-ரே எடுப்பதற்கு முன்பு, எக்ஸ் கதிர்களை உறிஞ்சும் தன்மை கொண்ட ஒரு வேதிப்பொருளை உடலுக்குள் செலுத்தினால், அது பயணிக்கிற உடலுறுப்பை எக்ஸ்-ரே எடுக்க முடியும். இவ்வகையில் எடுக்கப்படுகிற எக்ஸ்-ரேகளுக்கு ’சிறப்பு எக்ஸ்-ரே பரிசோதனைகள்’ (Specia# X-rays) என்று பெயர்.

என்டோஸ்கோப்பி, அல்ட்ரா சவுண்ட், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவை வருவதற்கு முன்னால், இரைப்பை நல மருத்துவர்களுக்கும் சிறுநீரகச் சிறப்பு மருத்துவர்களுக்கும் பெரிதும் கைகொடுத்தவை இந்தப் பரிசோதனைகளே! இப்போது இவற்றின் மகத்துவம் குறைந்துவிட்டது.

பேரியம் விழுங்கல் பரிசோதனை (Barium Swallow)

# உணவை விழுங்குவதில் சிரமம் உள்ளவர்களுக்குச் செய்யப்படும் பரிசோதனை இது.

# பேரியம் சல்ஃபேட் மாவைத் தண்ணீரில் அல்லது ஒரு மென்பானத்தில் கரைத்துக் கொடுத்துப் பயனாளியை முதலில் வாயில் வைத்துக்கொள்ளச் சொல்வார்கள். பிறகு அதை விழுங்கச் சொல்வார்கள்.

# அவ்வாறு அவர் விழுங்கும்போது நெஞ்சை எக்ஸ்-ரே படம் எடுப்பார்கள். இந்தப் பரிசோதனைக்கு ’பேரியம் விழுங்கல் பரிசோதனை’ என்று பெயர்.

# இதில் தொண்டையிலும் உணவுக் குழாயிலும் ஏற்படுகிற புண், அடைப்பு மற்றும் புற்றுநோய் போன்றவை தெரியும்.

# நெஞ்செரிச்சலுக்குக் காரணம் புரியும்.

பேரியம் உண்ணும் பரிசோதனை (Barium Mea# X-rays)

# பேரியம் சல்ஃபேட் மாவைத் தண்ணீரில் அல்லது ஒரு மென்பானத்தில் கரைத்து பயனாளியைக் குடிக்கச் செய்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் எக்ஸ்-ரே படம் எடுத்துப் பரிசோதிக்கும் முறை இது.

# பொதுவாக, இந்த மாவைக் குடித்த பிறகு முறையே 10 நிமிடங்கள், 30 நிமிடங்கள், ஒன்றரை மணி நேரம், மூன்று மணி நேரம் கழித்து எக்ஸ்-ரே எடுக்கப்படும்.

# அப்போது பேரியம் சல்ஃபேட் ஒட்டிக்கொண்டுள்ள இரைப்பை மற்றும் குடல் பகுதிகள் எக்ஸ்-ரே படத்தில் தெரியும்.

# உணவு செரிமானப் பாதையில் ஏற்படுகிற உணவுக்குழாய் பிரச்சினையில் தொடங்கி இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய், முன்சிறுகுடல் புற்றுநோய், குடல் அடைப்பு, குடல் கட்டிகள், குடல் புற்றுநோய், குடல் காசநோய்வரை பலதரப்பட்ட நோய்களை இதில் அறியமுடியும்.

# இப்போது, இதற்குப் பதிலாக ‘இரைப்பை என்டோஸ்கோப்பி’ பரிசோதனை செய்யப்படுகிறது.

பேரியம் எனிமா பரிசோதனை (Barium Enema)

# பேரியம் சல்ஃபேட் மாவைத் தண்ணீரில் கரைத்து ஆசனவாய் வழியாக எனிமா கொடுத்து, குறிப்பிட்ட இடைவெளிகளில் எக்ஸ்-ரே எடுத்துப் பரிசோதிக்கும் முறை இது.

# பொதுவாக, அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் இந்தப் பரிசோதனை முடிந்துவிடும்.

# ஆசனவாய், குதம், பெருங்குடல் ஆகிய இடங்களில் ஏற்படுகிற பிரச்சினைகளை இந்தப் பரிசோதனையில் தெரிந்துகொள்ளலாம்.

# முக்கியமாக, இந்த இடங்களில் ஏற்படுகிற குடல் எரிச்சல் நோய், கட்டிகள் மற்றும் புற்றுநோயை இதில் அடையாளம் காணலாம்.

# நீடிக்கிற மலச்சிக்கல், மலத்தில் ரத்தம் போவது, அடிவயிற்றில் அடிக்கடி வலி ஏற்படுவது, நீடித்த வயிற்றுப்போக்கு, காரணம் தெரியாமல் உடல் எடை குறைவது போன்ற தொல்லைகள் உள்ளவர்களுக்கு இது மேற்கொள்ளப்படுகிறது.

# எனிமா கொடுக்கப்பட்ட பேரியம் கரைசல் மலத்துடன் வெளியில் வந்துவிடும்.

# ’கொலனோஸ்கோப்பி’ பரிசோதனை வந்த பிறகு, இதன் மகத்துவம் குறைந்துவிட்டது.

முன்னேற்பாடு என்ன?

# மேற்சொன்ன மூன்று பரிசோதனைகளும் வெறும் வயிற்றில் செய்யப்பட வேண்டும்.

# முதல் நாள் இரவில் எட்டு மணிக்கு இரவு சாப்பாட்டை முடித்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு எதையும் சாப்பிடக்கூடாது.

# பேதிக்கு மாத்திரை சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

# காலையில் மலம் கழித்த பிறகு பரிசோதனைக்கு வர வேண்டும்.

# காலையில் சாப்பிட வேண்டிய வழக்கமான மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

ஐ.வி.பி. எக்ஸ்-ரே (Intra Venous Pyelogram IVP)

# பயனாளியின் ரத்தக்குழாய் வழியாக ஒரு சாயத்தை உடலுக்குள் அனுப்பி, அது சிறுநீரகம் வழியாகப் பயணிக்கும்போது குறிப்பிட்ட இடைவெளிகளில் வயிற்றை எக்ஸ்-ரே எடுத்துப் பரிசோதிக்கும் முறை.

# வழக்கத்தில் இந்தச் சாயத்தைச் செலுத்துவதற்கு முன்னால் ஒரு எக்ஸ்-ரே எடுக்கப்படும். அதற்குப் பிறகு 5 நிமிடங்கள், 15 நிமிடங்கள், ஒரு மணி நேரம், மூன்று மணி நேரம் என்ற இடைவெளிகளில் வயிற்றை எக்ஸ்-ரே எடுக்கிறார்கள்.

# அப்போது இந்தச் சாயம் செல்கிற இடங்களில் இருக்கிற நோய்கள் தெரியும்.

# சிறுநீரகம், சிறுநீர் வெளியேறும் பாதை, சிறுநீர்ப்பை, சிறுநீர் வடிகுழாய் ஆகிய பகுதிகளில் ஏற்படும் கற்கள், கட்டிகள், அமைப்புக் குறைபாடுகள், சிறுநீர் அடைப்பு, புற்றுநோய் போன்ற பலவற்றை இதில் அறியமுடியும்.

முன்னேற்பாடு என்ன?

# இந்தப் பரிசோதனை வெறும் வயிற்றில் செய்யப்பட வேண்டும்.

# முதல் நாள் இரவில் எட்டு மணிக்கு இரவு சாப்பாட்டை முடித்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு தண்ணீர்கூட குடிக்கக் கூடாது.

# பேதிக்கு மாத்திரை சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

# குடலில் உள்ள வாயுவை உறிஞ்சும் மாத்திரைகளையும் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

# காலையில் மலம் கழித்த பிறகு பரிசோதனைக்கு வர வேண்டும்.

முக்கியக் குறிப்பு

இந்தப் பரிசோதனைகளில் வேதிப் பொருட்களைப் பயன்படுத்துவதால், பயனாளிக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஏற்கெனவே ஏதாவது ஒரு பொருளுக்கு அல்லது மருந்துக்கு ஒவ்வாமையைக் கொண்டிருப்பவர்கள், பரிசோதனைக்கு முன்னரே மருத்துவரிடம் அதை சொல்லிவிடுவது நல்லது.

# ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எக்ஸ்-ரே

# இது எலும்பின் அடர்த்தியை அதாவது திண்ம அளவை (Bone Minera# Density BMD) அளக்கும் பரிசோதனை.

# நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரை சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

# இதன் மூலம் முதுமையில் ஏற்படும் எலும்பு முறிவைத் தடுக்க முடியும்.

# இது குறித்து ஏற்கெனவே ஒரு கட்டுரையில் விளக்கமாகப் பார்த்திருக்கிறோம்.



பல் எக்ஸ்-ரே (Denta# X-ray)

# பல்லுக்கு என்று பிரத்யேகமாக இருக்கிற எக்ஸ்-ரே பரிசோதனை இது.

# பல்லில் உண்டாகிற சொத்தை, பல் வேரில் சீழ் பிடித்தல், பல் நகர்தல், பல் முறிவு, ஈறு வீக்கம், ஈறில் அடிபடுதல், பல்லில் ஏற்படுகிற நீர்க்கட்டிகள், புற்றுநோய் ஆகியவற்றை அறியலாம்.

# பல்லின் அமைப்புக் கோளாறுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

# பல் வேர் சிகிச்சைக்கு முன்னர் இப்பரிசோதனை தேவைப்படும்.

# செயற்கைப் பற்களைப் பொருத்துவதற்கு முன்னரும் இது தேவைப்படும்.

# குழந்தைகளுக்குப் பல்லின் வளர்ச்சிநிலை சரியாக இருக்கிறதா என்பதைக் கணிக்க இது உதவுகிறது.

# கடைவாய்ப் பல்லின் (Wisdom tooth) பிரச்சினைகளை அறியவும் இது செய்யப்படுகிறது.

சி.டி. ஸ்கேன், ஆஞ்சியோகிராம், பெண்களுக்கான மாமோகிராம் ஆகிய பரிசோதனைகளும் எக்ஸ் கதிர்களைப் பயன்படுத்தி செய்யப்படும் சிறப்புப் பரிசோதனைகள்தான். அவை குறித்து அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.



(அடுத்த முறை: அடிக்கடி எக்ஸ்-ரே எடுக்கலாமா?)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x