Last Updated : 06 May, 2017 10:27 AM

 

Published : 06 May 2017 10:27 AM
Last Updated : 06 May 2017 10:27 AM

சந்தேகம் சரியா 34: பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா?

பன்றிக் கறியைச் சாப்பிட்டால் மூல நோய் (Piles) குணமாகிறது என்று பிரபல எழுத்தாளர் ஒருவர் பத்திரிகையில் எழுதியதைப் படித்தேன். இது உண்மையா?

உண்மையில்லை. பன்றிக் கறியைச் சாப்பிடுவதால் மூல நோய் குணமாகிறது என்று சொல்வதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. அடிக்கடி பன்றிக் கறியைச் சாப்பிட்டால் உடலில் கொழுப்பு வேண்டுமானால் அதிகரிக்கலாம்; மூல நோய் குணமாக வழியில்லை.

பன்றிக் கறியில் என்ன உள்ளது?

100 கிராம் பன்றிக் கறியில் 26 கிராம் புரதமும் 18 கிராம் கொழுப்பும் உள்ளன. வைட்டமின் பி12, பி6, இரும்பு, துத்தநாகம், செலினியம், நியாசின் போன்ற வைட்டமின்களும் தாதுச் சத்துகளும் நிறைந்துள்ளன. இது 217 கலோரி சக்தியைத் தருகிறது. மூல நோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து அவசியம். ஆனால், இதில் நார்ச் சத்தும் கார்போஹைட்ரேட்டும் துளியும் இல்லை. இதில் உள்ள புரதமும் கொழுப்பும் உடல் மெலிந்துள்ளவர்களுக்கும் முதியவர்களுக்கும் தசை வளர்ச்சியை ஊக்கப்படுத்த உதவும்; ரத்தச் சோகை உள்ளவர்களுக்கு ரத்த உற்பத்திக்கு உதவும். மற்றபடி மூல நோயைக் குணப்படுத்துவதற்கான சாத்தியம் இல்லவே இல்லை.

எது மூல நோய்?

சாதாரணமாக, உடலில் அசுத்த ரத்தம் கொண்டு செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் (Veins) குறிப்பிட்ட இடைவெளிகளில் வால்வுகள் உள்ளன. சிரைக் குழாய்களில் ரத்தம் தேவையில்லாமல் தேங்கி நிற்பதை இந்த வால்வுகள் தடுக்கின்றன. ஆனால், நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயிலிருந்து மலக்குடலுக்குச் செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்த வால்வுகள் இயற்கையிலேயே இல்லை. இதனால் புவியீர்ப்பு விசை காரணமாகச் சாதாரணமாகவே அங்கே அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் இந்த அழுத்தம் கொஞ்சம் அதிகமானால்கூட, அவற்றில் ரத்தம் தேங்கிச் சிறிய பலூன் மாதிரி வீங்கிவிடும். இப்படியான ரத்தக் குழாய் வீக்கத்தைத்தான் ‘மூலநோய்’ என்கிறோம்.

என்ன காரணம்?

இந்த வீக்கம் ஏற்படுவ தற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில், நாட்பட்ட மலச்சிக்கல் முக்கியமான காரணம். மலச்சிக்கலின்போது கழிவை வெளியேற்றுவதற்கு முக்க வேண்டி இருப்பதால், ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயை உண்டாக்கும். ஆண்களிடம் காணப்படும் சிறுநீர்க் குழாய் அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் ஆகியவற்றாலும் மூலநோய் உண்டாகிறது. வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடல் புற்றுநோய் போன்றவையும் மூலநோயை ஏற்படுத்தும்.

கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், ஆசனவாய் சிரைக் குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாகச் சில பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் மட்டும் மூலநோய் வருகிறது. சிலருக்குப் பரம்பரையாகவே இந்த ரத்தக் குழாய்கள் மிகவும் மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். உடல் பருமனாக இருப்பவர்கள், சுமை தூக்குபவர்கள், காலில் சிரை வீக்கம் (Varicose veins) உள்ளவர்கள், டிரைவர் போன்று உட்கார்ந்தே வேலை செய்பவர்கள், கண்டக்டர் போன்று அதிக நேரம் நின்றுகொண்டே இருப்பவர்கள் மூலத்தை எதிர்கொள்வோர் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார்கள்.

மூல நோய் வகைகள்

மூலநோயில் வெளி மூலம், உள் மூலம் என இரண்டு வகை உண்டு. ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாகப் புதைந்திருப்பது 'உள் மூலம்'; வெளிப்புறத்தில் தோன்றுவது 'வெளி மூலம்'. இரண்டாவதாகச் சொன்னதைக் கையால் தொட்டுப் பார்த்தே தெரிந்துகொள்ள முடியும். ஆனால் உள் மூலம் அப்படியில்லை. இது ஏற்பட்டால் என்ன நடக்கும்?

மலம் கழிக்கும்போது லேசாக ரத்தம் சொட்டுவது அல்லது மலத்தோடு வரிவரியாக ரத்தம் வெளிப்படுவது இதன் ஆரம்ப அறிகுறி. சில வாரங்களில் அல்லது மாதங்களில், அந்த நபருக்கு மலம் கழித்த பிறகு, ஆசனவாயில் லேசான வீக்கம் தெரியும். ஆசனவாயில் வீக்கமுற்ற ரத்தக் குழாய்கள் சதையோடு வெளியே தள்ளப்படுவதால் இந்த வீக்கம் தோன்றுகிறது. மலம் கழித்த பிறகு, இதை உள்ளே தள்ளிவிட்டால், மறைந்துவிடும். சிலருக்கு இந்த வீக்கம் பெரிதாகி நிலைத்துவிடும். அப்போது வீக்கத்தில் புண் உண்டாகி, அரிப்பும் வலியும் தினமும் தொல்லை தரும். இதனால் மலம் கழிக்கக் கஷ்டப்பட வேண்டியிருக்கும். முள்ளின் மீது உட்கார்ந்திருப்பதைப் போன்ற அவதி என்று சொல்வது இதற்குப் பொருந்தும்.

சிகிச்சை என்ன?

மூலத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சைக்கு வந்துவிட்டால் மருந்து, மாத்திரை, களிம்பு மூலமே சரி செய்துவிடலாம். முக்கியமாக, மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொண்டால், மூலநோயும் டாட்டா சொல்லிவிடும். அடுத்த கட்டப் பாதிப்பு இருந்தால் மட்டுமே பேண்டிங் (Banding), அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, லேசர் சிகிச்சை, ஸ்டேப்ளர் சிகிச்சை போன்ற சிகிச்சைகளை யோசிக்க வேண்டும். ஆனால், எந்தக் கட்டத்திலும் பன்றிக் கறி சாப்பிடுவதால் மூல நோய் குணமாகாது.

(அடுத்த வாரம்: வயிற்றில் வலி என்றாலே அல்சர்தானா?)
கட் டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x