Last Updated : 25 Feb, 2017 11:01 AM

 

Published : 25 Feb 2017 11:01 AM
Last Updated : 25 Feb 2017 11:01 AM

சந்தேகம் சரியா 24: தொற்றுநோயால் புற்றுநோய் வருமா?

டைபாய்டு, மலேரியா போன்ற தொற்றுநோய் களால் ஆரோக்கியம் கெடுவது உண்மை. இவற்றால் புற்று நோயும் வரும் என்று ஒரு நண்பர் கூறுகிறார். இது எந்த அளவுக்கு உண்மை?

உங்கள் நண்பர் சொல்வதில் பாதி உண்மை. பாதி உண்மையில்லை. எப்படி?

டைபாய்டு, மலேரியா என்பவை தொற்றுநோய்கள் தான். இது உண்மை. ஆனால், இவற்றால் புற்றுநோய் ஏற்படுவதில்லை. அதேநேரம் சில தொற்றுநோய்கள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை. உங்கள் நண்பர் இந்தக் கருத்தைச் சொல்வதற்காகத் தவறான உதாரணங்களைச் சொல்லியிருக்கலாம். எந்தத் தொற்றுநோய்கள் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன என்பதைப் பார்ப்போம்.

1இரைப்பைப் புண் ஏற்படப் பல காரணங்கள் இருக்கின்றன. ‘ஹெலிகோபாக்டர் பைலோரி' (Helicobacter pylori) எனும் கிருமி காரணமாக இரைப்பைப் புண் ஏற்படுவதுதான், தற்காலத்தில் அதிகம். அசுத்தமான குடிநீரில் இவை வசிக்கும். அதைக் குடிப்பவர்களுக்கு இந்தப் பாக்டீரியா தொற்றிக்கொள்ளும். இது பல வருடங் களுக்கு இரைப்பையில் வாழும். இதற்குச் சிகிச்சை எடுக்கத் தவறினால், நாளடைவில் இது இரைப்பைப் புற்றுநோயைத் தூண்டும். மற்றவர்களைவிட இந்தக் கிருமித்தொற்று இருப்பவர்களுக்கு, இரைப்பையில் புற்றுநோய் வருவதற்கு ஆறு மடங்கு வாய்ப்பு அதிகம்.

அடிக்கடி இரைப்பைப் புண் தொல்லை கொடுத்தால், ஒருமுறை ‘எண்டோஸ்கோப்பி’ பரிசோதனை செய்து, 'ஹெலிகோபாக்டர் பைலோரி' கிருமி இருக்கிறதா என்பதை உறுதி செய்து, சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்தப் புற்றுநோயைத் தடுத்துவிடலாம்.

2ஹெப்படைடிஸ்-பி மற்றும் சி வைரஸ்கள் கல்லீரலைத் தாக்கும்போது முதலில் மஞ்சள் காமாலை ஏற்படும். இந்த நோய்க் கிருமி ரத்தம், தாய்ப்பால், விந்து, பெண் பிறப்புறுப்புத் திரவங்களில் வெளி யேறி அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கர்ப்பிணிக்கு / தாய்க்கு இந்த நோய் இருந்தால் குழந்தைக்கும் அது தொற்றுகிறது. பாலுறவு மூலம் இது மற்றவர்களுக்குப் பரவும்.

இந்த நோயாளிகள் முன்னெச்சரிக்கை பரிசோதனை செய்யாமல் ரத்ததானம் செய்யும்போது, அந்த ரத்தத்தைப் பெற்றுக்கொண்டவருக்கும் இந்த நோய் வருகிறது. இவர்களுக்குப் போடப்பட்ட ஊசிக்குழலையும் ஊசியையும் சரியாகத் தொற்றுநீக்கம் செய்யாமல், அடுத்தவருக்கு ஊசி போடப்பட்டால், புதிய நபருக்கும் இந்த நோய் ஏற்படுகிறது. இது நாட்பட்ட கல்லீரல் அழற்சி நோயாக மாறி, பின்னர் புற்றுநோயாக உருவெடுக்கும். ஹெப்படைடிஸ் - பி மஞ்சள் காமாலைக்குத் தடுப்பூசி உள்ளது. குழந்தைப் பருவத்தில் இதைப் போட்டுக்கொள்ளாமல் இருந்தால், வளர்ந்த பிறகும் போட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் இந்தப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

3‘மனித பாப்பிலோமா வைரஸ் கிருமிகள்’ (Human Papilloma Virus - HPV) பெண்களின் கருப்பை வாயைத் தாக்கும்போது, அங்கே புற்றுநோய் ஏற்படுகிறது. திருமணமான எல்லாப் பெண்களும் ‘பாப் ஸ்மியர்' (Pap smear) பரிசோதனையைக் கட்டாயம் செய்துகொள்ள வேண்டும். 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு ஆண்டு இடைவெளியில் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. 65 வயதுவரை இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள முடியும். மாதவிலக்கு முடிந்து 7 முதல் 14 நாட்களுக்குள் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ளலாம். இதன் மூலம் இந்தப் புற்றுநோய் ஏற்படுவதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுத்துவிடலாம்.

இதற்கும் தடுப்பூசி இருக்கிறது. ‘ஹெச்.பி.வி. பை வேலன்ட் தடுப்பூசி'யைப் பெண்கள் 10 வயது முடிந்ததும் முதல் தவணைத் தடுப் பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஒரு மாதம் கழித்து இரண்டாவது தவணை, ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது தவணையைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

4‘ஹெச்.ஐ.வி.’ (HIV) தொற்று காரணமாக எய்ட்ஸ் நோய் ஏற்படுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த நோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் மிகவும் குறைந்து போவதால் தோல், நிணநீர் கணுக்கள் (Lymph nodes), கல்லீரல், கருப்பை வாய் ஆகிய இடங்களில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இவர்கள் மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் இருந்து, இந்த வைரஸ் கிருமிகளுக்கு எதிரான மருந்துகளை முறையாக எடுத்துக் கொண்டால், இந்தப் புற்றுநோய்கள் ஏற்படுவதைத் தடுத்துவிடலாம்.

(அடுத்த வாரம்: ஹைஹீல்ஸ் செருப்பால் குதிகால் வலி வருமா?)
கட் டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x