Published : 14 Apr 2018 10:46 AM
Last Updated : 14 Apr 2018 10:46 AM

நலம் தரும் நான்கெழுத்து 30: பயணத்தை அனுபவிப்போம்!

வாழ்க்கை என்பது புல்லின் கூர்நுனியில் விழாமல் சமநிலையில் இருக்கும் பனித் துளியன்றி வேறில்லை

- புத்தர்

வாழ்க்கையில் மிக முக்கியமான வார்த்தை எது எனப் பிரபலங்களை ஓர் இதழில் பேட்டி கண்டிருந்தார்கள். ‘நம்பிக்கை’, ‘ஊக்கம்’, ‘மகிழ்ச்சி’ எனப் பலரும் பல்வேறு விதமாக பதிலளித்திருந்தனர். இதுபோல் என்னைக் கேட்டால் என்ன சொல்வது என எண்ணிப் பார்த்ததன் விளைவுதான் இந்தக் கட்டுரைத் தொடர்.

மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த குரங்கு, பரிணாம வளர்ச்சியில் முன்னோக்கிச் சென்று கவிதையெல்லாம் எழுதும் அளவுக்கு வளர்ந்ததற்கு, மனிதனின் மூளையிலும் மனத்திலும் தோன்றிய அளப்பரிய மாறுதல்களே காரணம். குறிப்பாகக் கடந்த கால அனுபவங்களை ஆராய்ந்து தற்கால நிலையை உணர்ந்து எதிர்காலத்துக்குத் திட்டமிடும் பண்பு. இதுவே அறிவின் சாராம்சம்.

இந்த அறிவின் மூலமாக மனித இனம் தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. வாழ்க்கையை மட்டுமல்ல சூழ்நிலையையும். ஆக, மனித இனம் தன் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் தன்னைத் தானே செதுக்கும் சிற்பியாக உள்ளது.

முக்காலமும் வருந்துவது ஏன்?

எல்லா விஷயங்களையும் போன்றே அறிவே மனித இனத்தின் சாதனைகளுக்கு மட்டுமன்றிச் சோதனைகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கு, பாதை, அடையும் வேகம் என எல்லாவற்றுக்கும் மனித இனமே முழுப் பொறுப்பு. அதுவும் பொருள்மயமான வாழ்க்கையே வழியாகிவிட்ட இக்காலகட்டத்தில் கடந்த காலத் தவறுகளை நினைத்துக் குற்ற உணர்வு அடைவது, நிகழ்கால நிலையை நினைத்து வருந்துவது, எதிர்காலத்தை நினைத்துப் பதற்றப்படுவது என முக்காலத்துக்கும் சேர்த்து மனித இனம் வருந்துகிறது. மன அழுத்தம் கூடுகிறது. மனம் பாதிக்கப்பட்டால் உடலும் பாதிப்படைகிறது.

இந்தப் பயணத்தின் இலக்கு என்ன? அதாவது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதற்கு மதரீதியாக, ஆன்மிகரீதியாக, அறிவியல்பூர்வமாக, தத்துவார்த்தமாக என எப்படிப் பதில் சொன்னாலும் எல்லாவற்றுக்கும் பொதுவானது மகிழ்ச்சியாக இருப்பதுதானே. அதாவது பயணத்தை அனுபவிப்பது. அப்படி மன அழுத்தத்துக்கு ஆளாகாமல், கீழே விழுந்துவிடாமல் பயணிக்க நாம் கைக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயம், சமநிலை.

சமநிலை என்பது மனரீதியான, உடல்ரீதியான, சமூகரீதியான காரணிகளின் சரியான சேர்க்கையே. ஆங்கிலத்தில் ‘பயோ சைக்கோ சோஷியல் மாடல்’ என இதை அழைப்பார்கள். அது சார்ந்த பல அம்சங்களைப் பற்றி இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளில் கண்டோம். அவற்றின் சாரம்சத்தை பார்ப்போம்.

ஓட்டமும் ஓய்வும்

முதலில் நமது இலக்கு என்ன என்பதைப் பார்ப்போம். வீடு, வாகனம், பதவி, அங்கீகாரம் போன்ற பொருள்ரீதியான இலக்குகள் வாழ்வில் முக்கியம். அதைவிட முக்கியம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பது. அவற்றைத் தொலைத்துவிட்டு இலக்கை நோக்கி ஓடுவது கண்ணிரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போன்றதே. இலக்கு நோக்கிய ஓட்டத்துக்கும் ஓய்வுக்கும் இடையே ஒரு சமநிலை தேவை.

அதேபோல் அந்த இலக்கை நோக்கிச் செல்ல முன்கூட்டியே திட்டமிட்டுத் துல்லியத்தை எதிர்பாத்து, அதன்படியே செயல்படுவதும் அவசியம். அதேநேரம் அத்திட்டத்தில் இல்லாதபடி நிகழ்வுகள் நடக்கும்போது குறைகளைச் சமாளித்துப் பயணிப்பது அதைவிட முக்கியம்.

காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும் புதுமையை விரும்பும் பண்பு அவசியம். ஆனால், அது அதீதமாக மாறிக்கொண்டே இருக்கும் பொறுமையின்மையாக மாறிவிடாத சமநிலையும் தேவை. அளவான வேகமும் சோம்பலாகி விடாத பொறுமையும் தேவை.

நம்பிக்கையுடன் அணுகுவோம்

விதிமுறைகளையும் ஒழுங்கையும் பின்பற்றுவதில் கண்டிப்பு அவசியம். ஆனால், அதுவே மழை பெய்யும்போது செடிகளுக்கு நீருற்றுவதுபோல் அர்த்தமற்றதாகாமல் வளைந்து கொடுப்பதும் அவசியம்.

நம்பிக்கையுடன் எதையும் அணுகுவது இன்றியமையாதது. அதேநேரம் எல்லோரையும் அப்படியே நம்பிவிடாமல் எதிர்மறையாக நடந்தால் என்னாவது என சில நேரம் குறைந்தபட்ச சந்தேகிப்பும் தேவைப்படுகிறது.

கோபம் நம்மைக் குப்புறத் தள்ளிக் குழிபறிக்கும் எதிரி என்பதை உணரும் அதேநேரம், தேவையான இடங்களில் ‘ரவுத்திரம் பழ’கவும் தெரிந்திருக்க வேண்டும். மிகையான அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். அதேநேரம், தீயனவற்றைக் கண்டு தீயினும் மேலாக அஞ்சும் பண்பும் வேண்டும்.

வாழ்க்கையின் முக்கியமான சொல்

உடல்ரீதியான சமநிலை எனப் பார்த்தால் உடலைப் பேணுதல் இன்றியமையாதது . அதுவே உடலைப் பற்றிய மிகையான கற்பனையானால் அதுவே தனி நோயாக மாறிவிடுகிறது. உணவு, தூக்கம் என உடல்ரீதியான பல கூறுகள் மிகினும் குறையினும் நோய் செய்யும்.

சமூகத்தைப் பற்றி அக்கறை இன்றி இருப்பது, அளவுக்கு அதிகமாகச் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படுவது என்ற இந்த இரண்டுமே இல்லாத சமநிலை தேவை. அது போன்றே பிறரைக் கண்டிப்பதற்கும் மன்னிப்பதற்கும் இடையேயான சமநிலையும் அவசியம்.

முக்கியமாகப் பல விஷயங்களில் மாற்ற முடிந்ததை எப்படியாவது மாற்ற முயற்சிப்பதும், முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளவும் ‘சமநிலை’ என்னும் மந்திரச் சொல்லே என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் முக்கியமான சொல். அதுவே நலம்தரும் நான்கெழுத்து. ரொம்பவும் சுருக்கமாக இல்லாமலும் நீட்டிக்கொண்டே போகாமலும் சமநிலையோடு இக்கட்டுரைத் தொடரை முடிக்கிறேன்.

(நிறைந்தது)
கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x