

மனிதர்கள் எப்போது நகரங்களை உருவாக்கத் தொடங்கினார்களோ, அப்போதே நோய்த் தொற்றுகளும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. மனிதர்கள் வேட்டையாடியபோது ஓர் இடத்தில் தங்கவில்லை. நகர்ந்துகொண்டே இருந்தனர்.
இதனால் அவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. ஆனால் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அவர்கள் குடியிருப்புகள் அமைத்துத் தங்கத் தொடங்கினர். கால்நடைகளை வளர்க்கத் தொடங்கினர்.
மக்கள்தொகை அதிகரித்தது. கழிவுகள் சேரத் தொடங்கின. விளைவு, தொற்றுநோய்களும் அதிகரித்தன. பின் நாகரிகங்கள் தோன்றி வணிகப் போக்குவரத்து அதிகரித்தவுடன் உலகம் எங்கும் தொற்றுநோய்கள் பரவின.
பண்டைய கிரேக்கத்திலும் ரோமிலும் ஏற்பட்ட தொற்றுநோய்கள் அந்தப் பேரரசுகளைப் பலவீனப்படுத்தி, அவற்றின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்தன. 1347இல் ஐரோப்பாவைத் தாக்கிய பிளேக் தொற்று மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பியர்களைக் கொன்றது.
இதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு அப்போதிருந்த நிலப்பிரபுத்துவம் எனும் சமூக அமைப்பு மாறி, சந்தைப் பொருளாதாரம் உருவாக ஒரு காரணமாக அமைந்தது. இப்படியாகப் பல இடங்களில் கிருமிகள் உலக வரலாற்றையே மாற்றி அமைத்துள்ளன.
மனிதர்கள் பரிணமித்தபோதே நுண்ணுயிர்கள் அவர்கள் உடலில் தங்கி நன்மை செய்யத் தொடங்கிவிட்டன. அதே நேரம் சில நுண்ணுயிர்கள் நோய்களை உருவாக்கி மனிதர்களைக் கொல்லவும் செய்தன. ஆனால், அப்போது மனிதர்களுக்கு ஏன் நோய்கள் ஏற்படுகின்றன என்று தெரியவில்லை. அப்போது தொற்று நோய்கள் ஏற்பட்டால் மரணம்தான். மனிதரின் சராசரி வாழ்நாள் என்பதே 30-40 ஆண்டுகள்தான்.
இவ்வாறு நோய்களுக்கு எதிரான மனிதர்களின் போராட்டம் இருந்தபோது, அறிவியலில் நிகழ்ந்த பெரிய திருப்புமுனை ‘கிருமிக் கோட்பாட்டின்’ வருகை. மனிதர்களுக்கு நோய்த் தொற்றுகளை ஏற்படுத்துவது பெரும்பாலும் நுண்ணுயிரிகள்தான் எனும் புரிதலை ஏற்படுத்திய கோட்பாடு அது.
மருத்துவத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி, மனித வாழ்நாளை நீட்டித்ததில் பெரும் பங்குவகித்த கோட்பாடு. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பு காலரா என்பது பெரும்பாலும் வங்காள விரிகுடாவில் கங்கை நதி கடலைச் சந்திக்கும் பகுதியில் அவ்வப்போது பாதிப்பு ஏற்படுத்திய கிருமி.
ஆனால் பிரிட்டிஷ் அரசு வணிகப் பாதைகளை உருவாக்கியவுடன் பிரிட்டிஷ் கப்பல்கள் காலராவை ரஷ்யா, சீனா, ஜப்பான், ஆப்ரிக்கா என உலகெங்கும் கொண்டு சென்றன. குறிப்பாக 1800களில் மிக மோசமான காலரா தொற்றுகள் அடுத்தடுத்து ஐரோப்பாவைத் தாக்கின.
காலரா நீரில் வாழக்கூடிய கிருமி. அசுத்தமான நீரினாலும் மனித கழிவினாலும் பரவக்கூடியது. ஆனால் அப்போது இந்த நோய்த்தொற்று ஏன் ஏற்படுகிறது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அறிஞர்கள் மத்தியில் அழுகிய பொருள்களில் இருந்து வரும் துர்நாற்றம்தான் நோய்களை ஏற்படுத்துகிறது என்கிற எண்ணம் இருந்தது.
ஆனால் நோய்த்தொற்றுக்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என்று சிலர் ஆராய்ந்தனர். ஜான் ஸ்னோ எனும் மருத்துவர், நீர் மூலம் காலரா பரவுவதாகக் கண்டறிந்தார். ஆனாலும் அதற்குக் கிருமிதான் காரணம் என்பது அவருக்குத் தெரியவில்லை.
இதன்பின் வந்த இரு அறிஞர்கள் இதனைக் கண்டறிந்தனர் அதில் ஒருவர் லூயி பஸ்தேர். பிரான்ஸைச் சேர்ந்த வேதியியலாளர். நுண்ணுயிரிகள் சார்ந்த ஆய்வுகளுக்குப் பெயர்பெற்றவர். குறிப்பாக, நொதித்தல் (Fermentation) சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டுவந்தார்.
நொதித்தல் என்பது நுண்ணுயிரிகளின் உதவியுடன் உணவில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகளை உடைத்து அமிலம், வாயுக்கள் போன்றவையாக மாற்றும் வேதியியல் செயல்பாடு. எளிமையாகச் சொன்னால், நாம் பயன்படுத்தும் தயிர், பாலாடைக்கட்டி போன்றவை நொதித்தல் மூலமாகவே கிடைக்கின்றன.
1857ஆம் ஆண்டு திராட்சை மதுவை ஆய்வு செய்த லூயி பஸ்தேர், திராட்சைச் சாறு நொதித்து மதுவாக மாறுவதற்குக் காரணம், திராட்சைத் தோலில் இருக்கும் ஈஸ்ட் எனும் நுண்ணுயிரிதான் என்றார். நாம் திராட்சைத் தோலைச் சுத்திகரித்தால் நொதித்தல் நடைபெறாது என்பதை நிரூபித்துக் காட்டினார்.
அதேபோல் இந்த நொதித்தல் நுண்ணுயிர்கள், நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களைப் போலவே இருப்பதாகவும் கூறினார். அவரது கூற்றின்படி உணவு கெட்டுப்போவதற்குக் காரணம் இந்த நுண்ணுயிரிகள்தான். உணவுப் பொருள்களைச் சூடுபடுத்துவதன் மூலம் இந்த நுண்ணுயிரிகளைக் கொல்ல முடியும் என்பதையும் அவர் நிரூபித்தார். இதுவே Pasteurization என அறியப்படுகிறது.
தடுப்பூசி தயாரிப்பிலும் லூயி பஸ்தேர் ஈடுபட்டார். நோய் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரியின் பலவீனமான மாதிரியை நோயாளியின் உடலுக்குள் செலுத்தும்போது, உடலின் நோய் எதிர்ப்புத்தன்மை அதற்கு ஏற்றவாறு வலுப்படுகிறது. இதன்பின் உண்மையான கிருமி தாக்க நேர்ந்தால் அதனை உடல் வெற்றிகரமாக எதிர்கொள்கிறது என்றார்.
காலரா, ஆந்த்ராக்ஸ், ரேபிஸ் போன்ற நோய்களுக்கு இவர் தடுப்பூசிகளை உருவாக்கிய பின்னர்தான் கிருமிக் கோட்பாடு எல்லா இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. லூயி பஸ்தேரைப் போலவே கிருமிக் கோட்பாடுக்கு வலுசேர்த்த மற்றொருவர் ராபர்ட் கோஹ். ஜெர்மனியைச் சேர்ந்தவர்.
1880களின் இறுதியில் கோஹ்ஹும் அவரது குழுவும் உலகம் முழுவதும் பயணித்து நுண்ணுயிர்களை அடையாளப்படுத்தினர். ஆந்த்ராக்ஸ், டைஃபாய்டு, காசநோய், நிமோனியா, தொழுநோய் ஆகியவற்றை ஏற்படுத்தும் கிருமிகளை அடையாளம் கண்டவர் கோஹ்.
இதைவிட கோஹ்ஹின் மிகப்பெரிய பங்களிப்பு, மனித உடலில் நோய் ஏற்படும்போது எந்தக் கிருமி அதை ஏற்படுத்தியது என்பதை உறுதிசெய்யும் முறை (Robert Koch’s postulates). இந்த முறைதான் படிப்படியாக இன்றைய கிருமி குறித்த ஆய்வுகள் உருவாவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.
இவ்வாறு கோஹ்ஹும் பஸ்தேரும் வேறு சில விஞ்ஞானிகளும் கண்டடைந்த கிருமிக் கோட்பாடு, மனிதர்களை நோய்களில் இருந்து காப்பாற்றும், மனித வாழ்நாளை நீட்டித்த முக்கிய அறிவியல் பங்களிப்புகளில் ஒன்றாக இருக்கிறது.
(திருப்புமுனையைக் காண்போம்)
- கட்டுரையாளர், எழுத்தாளர்; tnmaran25@gmail.com