

மகரந்தபுரத்தின் மன்னர் புலேந்திரன் வேட்டைக்குப் புறப்பட்டார். நீண்ட பயணத்தில் மன்னருக்குத் தாகம் வந்தது. தண்ணீர் கேட்டார். அமைச்சர் திசைக்கு ஒரு காவலரை அனுப்பி தண்ணீர் எடுத்துவரச் சொன்னார்.
நீண்ட நேரம் ஆகியும் காவலர்கள் வரவில்லை. அதனால் அமைச்சரே தண்ணீர் தேடிச் சென்றார். ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது தூரத்தில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். “அமைச்சரே, அவரிடம் சென்று தண்ணீர் இருக்கும் இடத்தை அறிந்து வாருங்கள்” என்றார் மன்னர். சென்ற வேகத்தில் திரும்பி வந்தார் அமைச்சர்.
“மன்னா, அவர் பார்வையற்றவர். அவரால் நமக்கு உதவ முடியாது.” “பார்வையற்றவருக்குத் தெரிந்திருக்காது என்று நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்? இதோ அவரிடம் நானே கேட்கிறேன். தம்பி, தண்ணீர் இங்கு எங்கே கிடைக்கும்?” பார்வையற்றவர் நான்கு திசையிலும் மூக்கால் வாசனையை முகர்ந்தார். மெல்லிய ஓசைகளை உற்றுக் கவனித்தார்.
“மன்னா, இடது பக்கம் திரும்பி இரண்டு நிமிடங்கள் நடந்தால் வலது பக்கம் ஒரு பாதைத் தெரியும். அதற்குள் மூன்று நிமிடங்கள் சென்றால் ஒரு தடாகத்தில் சுவையான நீர் கிடைக்கும்” என்றார். “ஆஹா! நன்றி தம்பி. பார்வை இல்லாமல் எப்படித் தண்ணீர் இருக்கும் இடத்தைச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் மன்னர்.
“நான் இந்தப் பக்கம் ஏற்கெனவே வந்திருக்கிறேன். தடாகத்திலிருந்து சில்லென்ற காற்று வருகிறது. எனக்குக் கேட்கும் சக்தி அதிகம். நீரின் சலசலப்பு கேட்டது. அதனால்தான் உங்களுக்கு என்னால் சரியாக அடையாளம் சொல்ல முடிந்தது.” “ஓ, உங்கள் பெயர் என்ன தம்பி? எங்கே வசிக்கிறீர்கள்?” “நெடுமாறன். நான் தாங்கள் ஆட்சி செய்யும் நாட்டில்தான் வசிக்கிறேன். குயில்தோப்பு கிராமம்.”
“ஓ, அமைச்சரே இவருக்குச் சாப்பிட ஏதாவது கொடுங்கள்” என்று சொல்லிவிட்டு மன்னர் தடாகத்தை நோக்கி நடந்தார். தடாகத்தின் தண்ணீர் சுவையாக இருந்தது. “அமைச்சரே, நம்மால் இந்தத் தடாகத்தைக் கண்டறிய முடியவில்லை. ஆனால், நெடுமாறன் எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறார்! அறிவாளியாக இருக்கிறார்” என்றார் மன்னர்.
“ஆமாம் மன்னா.” சில மாதங்களுக்குப் பிறகு சில முத்து வியாபாரிகள் மன்னரிடம் முத்து விற்பனை செய்ய வந்தார்கள். “மன்னா, இவை மூன்றும் அரிய வகை முத்துகள். தங்களுக்காகவே கொண்டு வந்திருக்கிறோம். இதைப் பரிசோதித்துவிட்டு, வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார் ஒரு முத்து வியாபாரி.
மன்னர் அரசவையில் இருந்த வல்லுநர்களிடம் கொடுத்தார். அவர்கள் நல்ல முத்துகள் என்று சொன்னார்கள். ஆனாலும் மன்னருக்கு ஏனோ திருப்தி இல்லை. “அமைச்சரே, குயில்தோப்புக்கு ஆள் அனுப்பி நெடுமாறனை அழைத்து வரச் சொல்லுங்கள்.” “மன்னா, அவர் அறிவாளியாக இருந்தாலும் முத்தை எப்படிப் பரிசோதிக்க முடியும்?” “அதையும் பார்த்துவிடலாம்.”
அன்று மாலை நெடுமாறன் அழைத்துவரப்பட்டார். மன்னர் முத்துகளை அவரிடம் கொடுத்து, பரிசோதிக்கச் சொன்னார். முத்துகளை வாங்கிப் பார்த்த நெடுமாறன், மூன்றே நிமிடங்களில் ஒரு முத்து சரியில்லை என்று சொல்லி விட்டார்! “எப்படிக் கண்டறிந்தீர்கள் நெடுமாறன்?” என்று மன்னர் வியப்புடன் கேட்டார்.
“முத்துகளை என் உள்ளங்கையில் வைத்துச் சுற்றினேன். இரண்டு முத்துகள் நன்றாகச் சுற்றின. இந்த முத்து மட்டும் சற்று வளைந்து நெளிந்து சுற்றியது. அதனால் அது விரிசல் விட்ட முத்தாக இருக்கக் கூடும் என்று நினைத்தேன். யாராவது மீண்டும் பரிசோதியுங்கள்” என்றார் நெடுமாறன்.
மன்னரே முத்துகளை வாங்கிப் பரிசோதித்தார். ஒரு முத்து விரிசல் விட்டிருந்தது. “இந்த முறையும் என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள்! என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள் கேட்போம்.” “ஐயோ, மன்னா அதெல்லாம் எனக்குத் தெரியாது” என்று பதறினார் நெடுமாறன்.
“நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். நான் கோபப்படவே மாட்டேன். ஆனால், உண்மையை மட்டும் சொல்ல வேண்டும்” என்றார் மன்னர். “மன்னா, தாங்கள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.”
“ஆ... என்ன துணிச்சல் உங்களுக்கு? என் பரம்பரை பற்றித் தங்களுக்கு என்ன தெரியும்?” “மன்னா, கோபப்பட மாட்டேன் என்று உறுதி அளித்ததால் சொன்னேன். தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள். நான் வருகிறேன்” என்று நெடுமாறன் புறப்பட்டார்.
மன்னருக்கு மனமே சரியில்லை. தன் தாயிடம் சென்று நடந்ததைக் கூறினார். “புலேந்திரா, நெடுமாறன் சொன்னது உண்மைதான். நான் பெற்றெடுத்த மகனுக்குப் பார்க்கும் திறன் இல்லை என்பதை அறிந்த சிலர், எனக்கும் உன் அப்பாவுக்கும் தெரியாமல் ஒரு குழந்தையை மாற்றிவிட்டார்கள். இந்த விஷயம் எனக்கே சில ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியவந்தது” என்றார்.
“ஐயோ, நெடுமாறன்தான் தாங்கள் பெற்ற மகனா?” “இருக்கலாம்.” மீண்டும் நெடுமாறன் அழைத்துவரப் பட்டார். “நான் ஓர் ஏழையின் மகன் என்பதை எப்படிக் கண்டறிந்தீர்கள் நெடுமாறன்?” “நான் தடாகத்துக்கு வழி சொன்னபோது, பிற மன்னர்கள் தங்களிடம் இருக்கும் பொற்காசுகளையோ முத்துமாலையையோ கொடுத்திருப்பார்கள்.
நீங்கள் பசிக்குச் சோறு கொடுக்கச் சொன்னீர்கள். தாங்கள் யார் என்பதைத் தாங்களே கேட்டாலும் உண்மையைச் சொன்னதற்கு மற்ற மன்னர்கள் என்னைச் சிறையில் தள்ளியிருப்பார்கள்.
நீங்களோ என்னை ஒன்றுமே சொல்லவில்லை. ஒரு சாதாரண மனிதரிடமும் மரியாதையாகப் பேசுகிறீர்கள். எளிய மனிதர்களால்தான் இவ்வளவு நல்ல குணத்தோடு இருக்க முடியும் என்று நினைத்தேன் மன்னா.”
“உங்களுக்குத் தெரியாத ஒன்றைச் சொல்கிறேன். நீங்கள்தான் இந்த நாட்டின் மன்னர். பார்க்கும் திறன் இல்லாததால் உங்களைச் சிலர் மாற்றிவிட்டனர். இனி நீங்கள்தான் நாட்டை ஆள வேண்டும்.”
“எனக்கு நாடு ஆளும் ஆசையோ அரண்மனையில் வசிக்கும் ஆசையோ இல்லை மன்னா. எனக்கு எளிய வாழ்க்கைதான் பிடித்திருக்கிறது. நீங்களே நாட்டை ஆள வேண்டும்.
உங்கள் கருணையையும் அன்பையும் இன்னும் அதிகமாக ஏழைகளிடம் காட்ட வேண்டும் என்பதைத் தவிர எனக்கு வேறு எந்தக் கோரிக்கையும் இல்லை மன்னா. நான் வருகிறேன்” என்று புறப்பட்டார் நெடுமாறன். மீண்டும் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார் மன்னர் புலேந்திரன்.
- ஜி.சுரேஷ்