

சமூகத்தில் நடைபெற்ற விஷயங்களைக் கதையாக வடிப்பது பெரியவர்களுக்கான இலக்கியத்தில் வழக்கம்தான்.
அதேநேரம் இளையோர் படைப்புகள் என வரும்போது தமிழில் அப்படிப்பட்ட படைப்புகள் இப்போதுதான் முளைவிடத் தொடங்கியுள்ளன.
ஓர் ஆற்றைக் காப்பதற்காக நடைபெற்ற போராட்டம் நாடு தழுவிய அளவில் கவனத்தைப் பெற்றது. அந்த ஆறு ஈரோடு மாவட்டத்தில் ஓடும் பவானி.
அந்த ஆற்றில் தனியார் ஆலை ஒன்று கலந்துகொண்டிருந்த ஆபத்தான வேதிக் கழிவுகள், மக்களிடம் மிக மோசமான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தன.
1990களில் அதை எதிர்த்து 'பவானி நதி பாதுகாப்புக் கூட்டமைப்பு' சார்பில் தொடர்ச்சியான போராட்டம், வழக்கு தொடர்தல் போன்றவை நடைபெற்றன.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான அந்தப் போராட்டத்தின் மையமாக இருந்தவர் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் சத்தியசுந்தரி.
மருத்துவர் ஜீவா, பழங்குடிகளுக்காகப் போராடும் வி.பி.குணசேகரன், வழக்கறிஞர் காந்தி உள்ளிட்ட பலரும் இந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தனர்.
தனியார் ஆலைக்கு எதிராக மக்களைத் திரட்டி இடைவிடாது போராடி, அந்தச் சுற்றுச்சூழல் பேரழிவு தொடர்வதை இவர்கள் கூட்டாகத் தடுத்து நிறுத்தினார்கள்.
இதில் மருத்துவர் சத்தியசுந்தரியின் வாழ்க்கை, பவானி ஆற்றைக் காக்க நடத்தப்பட்ட போராட்டம் ஆகியவற்றை மையப்படுத்தி இளையோர் நாவலாக இந்த நூலை எழுதியுள்ளார் ஈரோடு சர்மிளா.
நித்திலா எனும் பள்ளிச் சிறுமியின் வழியே இந்தக் கதை கூறப்பட்டுள்ளது. சிறாருக்கு இதுபோல் சமூகப் பிரச்சினைகளைக் கதையாகக் கூறுவது ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
நேயா
வானி,
ஈரோடு சர்மிளா,
சூழல் அறிவோம்,
தொடர்புக்கு: 88258 57649