

அந்த வீட்டுப் பாட்டி அழகான மஞ்சளும் பழுப்பு நிறமும் கலந்த கோழி ஒன்றை வளர்த்துவந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐந்து முட்டைகளை அடைகாக்க வைத்தார். முட்டைகள் பொரிந்து ஐந்து கோழிக் குஞ்சுகள் வெளியே வந்தன. அதில் தாய்க் கோழியைப் போல பழுப்பு நிறத்தில் இரண்டு குஞ்சுகளும் கறுப்பு நிறத்தில் இரண்டு குஞ்சுகளும் ஒரு வெள்ளைக் குஞ்சும் இருந்தன.
சில நாள்களிலேயே குஞ்சுகள் நடக்கத் தொடங்கி விட்டன. அவை தாய்க்கோழியுடன் சுற்றித் திரிந்தன. பொழுது விடிந்ததும் பஞ்சாரத்தில் அடைத்து வைத்திருக்கும் கோழியையும் குஞ்சுகளையும் பாட்டி வெளியேவிடுவார். அவை மாலைப் பொழுதுவரை தோட்டத்தில் மேயும். பிறகு வீட்டிற்குத் திரும்பி வரும்.
பஞ்சாரத்துக்குள் தாய்க்கோழியை வரச் சொல்வார் பாட்டி. தாய்க்கோழியும் உடனே சென்றுவிடும். குஞ்சுகளும் தாய்க்கோழி பின்னாலேயே சென்று பஞ்சாரத்திற்குள் அடைபடும். வெள்ளைக் கோழிக்குஞ்சுக்கு மட்டும் அப்படி அடைபட்டுக் கிடப்பதில் விருப்பம் இல்லை. அது இரவிலும் சுதந்திரமாகச் சுற்றித்திரிய விரும்பியது.
அன்றும் பாட்டி தாய்க்கோழியைப் பிடித்து பஞ்சாரத்திற்குள் அடைத்தார். கோழிக்குஞ்சுகளும் பஞ்சாரத்திற்குள் அடைந்தன. உடனே வெள்ளைக் கோழிக்குஞ்சு, “அம்மா, பகல் முழுவதும் நாம் சுதந்திரமாகத் தோட்டம் முழுவதும் சுற்றி வருகிறோம்.
மாலை வந்ததும் நீங்கள் ஏன் வீட்டிற்குள் வந்துவிடுகிறீர்கள்? பாட்டி கைநீட்டியதும் ஏன் கூடைக்குள் பதுங்குகிறீர்கள்? இரவு முழுவதும் ஏன் நாம் சிறைக்குள் இருக்க வேண்டும்?” என்று கேட்டது.
“இப்போது சொன்னால் உனக்குப் புரியாது. சற்று வளர்ந்ததும் நீயாகவே தெரிந்து கொள்வாய்” என்றது தாய்க்கோழி. அந்தப் பதில் வெள்ளைக் கோழிக் குஞ்சுக்குத் திருப்தியாக இல்லை.
அது தன் தாயைக் கோழை என்றே நினைத்துக் கொண்டது. ‘இன்று மாலை நான் அம்மா உடன் கூடைக்குள் வரப்போவதில்லை.பாட்டியின் கண்களில் படாதவாறு ஒளிந்துகொண்டால், கூடைக்குள் செல்ல வேண்டியதில்லை. இரவிலும் மகிழ்ச்சியாகச் சுற்றித் திரியலாம்’ என்று திட்டம் போட்டது வெள்ளைக் கோழிக்குஞ்சு.
மறுநாள் காலை முழுவதும் தோட்டத்தில் மேய்ந்த கோழியும் அதன் குஞ்சுகளும் மாலையில் வீட்டிற்குத் திரும்பின. வெள்ளைக் கோழிக்குஞ்சு மட்டும் வீட்டிற்கு வரவில்லை. பாட்டி தாய்க்கோழியை மட்டும் பிடித்து பஞ்சாரத் திற்குள் அடைத்தார்.
தாயை அடைத்துவிட்டால், தாயின் பின்னாலேயே எல்லாக் குஞ்சுகளும் பஞ்சாரத்திற்குள் அடைந்துவிடும் என்பதால் ஒரு குஞ்சு வீட்டிற்குத் திரும்பவில்லை என்பதை அவர் கவனிக்கவில்லை. வெள்ளைக் கோழிக்குஞ்சு தோட்டத்தில் இருந்தது.
‘ஆஹா, இன்று எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறது! இரவு முழுவதும் தோட்டத்தில் சுற்றித் திரியலாம்’ என்று நினைத்து அங்கும் இங்கும் ஓடியது. சற்று நேரத்தில் இருட்டிவிட்டது. அமாவாசை நாள் என்பதால் நிலா வெளிச்சமும் இல்லை. இப்போது கோழிக்குஞ்சுக்கு இருட்டில் எதையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.
அது குத்துமதிப்பாக நடந்து போனது. அப்போது திடீரென்று அதன் இறக்கையை யாரோ பற்றி இழுப்பது போலத் தோன்றியது. சட்டென்று கோழிக்குஞ்சு திரும்பிப் பார்த்தது. ஒரு பாம்பு. பதறிப்போன கோழிக்குஞ்சு சிறகுகளைப் படபடவென அடித்து முன்னோக்கிப் பறந்தது. அது சிறகையடித்த வேகத்தில் பாம்பின் வாயிலிருந்து தப்பிவிட்டது.
கோழிக்குஞ்சு ஒரு செடி மறைவுக்குப் போய், சிறிது நேரம் அமர்ந்திருந்தது. பாம்பு தன்னை விழுங்க வந்ததைக் கோழிக்குஞ்சு மறந்துவிட்டது. மெதுவாக மீண்டும் அங்கும் இங்கும் ஓடி விளையாடத் தொடங்கியது. அப்போது தன்னை நோக்கி யாரோ ஓடிவருவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தது கோழிக்குஞ்சு. பூனை ஒன்று அதை நோக்கிப் பாய்ந்து வந்தது.
‘ஐயோ, இந்தப் பூனை பகல் பொழுதிலேயே நம்மைத் துரத்துமே. இப்போது நமக்குத் துணையாக யாரும் இல்லையே’ என்று நினைத்துப் பயந்து வேகமாக ஓடியது. பூனையும் பின்னால் துரத்திக்கொண்டு வந்தது. அந்த நேரத்தில் எங்கிருந்தோ ஓர் எலி குறுக்காக ஓடிவந்தது. எலியைக் கண்ட பூனை கோழிக்குஞ்சை மறந்துவிட்டு எலியின் பின்னே பாய்ந்து சென்றது.
‘அப்பாடா, எப்படியோ பூனையிடமிருந்து தப்பித்தேன்’ என்று நிம்மதி அடைந்தது கோழிக்குஞ்சு. நடுஇரவிலும் தூங்காமல் இருந்த கோழிக்குஞ்சுக்குப் பசித்தது.
‘சரி, இனி நமக்கு எந்த ஆபத்தும் இல்லை’ என்று நினைத்த கோழிக்குஞ்சு, ஏதாவது உணவு கிடைக்குமா என்று தோட்டத்தில் நடந்தது. அப்போது தென்னை மரத்தின் மீதிருந்து ஏதோ ஒரு விலங்கு மண்ணில் குதித்தது.
அதன் உருவத்தைப் பார்த்ததும் அதுதான் மரநாயாக இருக்கும் என்று கோழிக்குஞ்சுக்குப் புரிந்தது. ‘மரநாய் கோழிகளைப் பிடித்துத் தின்னும்’ என்று பாட்டியம்மா சொல்வதை அது ஏற்கெனவே கேட்டிருந்தது. கோழிக்குஞ்சின் உடல் நடுங்கியது. எதிர்பார்த்தது போலவே மரநாய் கோழிக்குஞ்சின் மீது பாய்ந்தது.
அங்கும் இங்கும் ஓடிய கோழிக்குஞ்சு, இறுதியாக மரத்தின் அடியில் இருந்த சிறிய பொந்துக்குள் ஒளிந்துகொண்டது. துரத்தி வந்த மரநாய் பொந்திற்குள் தலையை நுழைக்கப் பார்த்தது. ஆனால், நுழைக்க முடியவில்லை. கோழிக்குஞ்சு வெகுநேரம் மரப்பொந்துக் குள்ளேயே இருந்தது. மெதுவாகப் பொழுது புலரத் தொடங்கியது. தோட்டத்திற்குள் சூரிய வெளிச்சம் வந்தது.
சற்று நேரத்தில் வெளியே ‘கொக் கொக் கொக்’ என்று சத்தம் கேட்டது. வெள்ளைக் கோழிக்குஞ்சு மரப்பொந்துக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தது. அங்கே அதன் தாய்க்கோழியும் குஞ்சுகளும் வந்து கொண்டிருந்தன. வெள்ளைக் கோழிக்குஞ்சு தாயை நோக்கி ஓடியது. “இரவு முழுவதும் நீ எங்கே இருந்தாய்? உனக்கு ஆபத்து ஏதும் இல்லையே?” என்று தாய்க்கோழி பதற்றத்தோடும் அன்போடும் கேட்டது.
“அம்மா, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நேற்று பாட்டிக்குத் தெரியாமல் ஒளிந்துகொண்டேன். ஆனால், இரவு முழுவதும் ஆபத்துகளில் மாட்டிக்கொண்டேன். நல்லவேளை தப்பித்துவிட்டேன். எது சுதந்திரம் என்பதைப் புரிந்துகொண்டேன்.
இனி இதுபோல தவறு செய்ய மாட்டேன்” என்று இரவில் நடந்தவற்றை, தாயிடம் சொன்னது வெள்ளைக் கோழிக்குஞ்சு. குஞ்சைக் கட்டி அணைத்துக்கொண்டது தாய்க்கோழி.