Last Updated : 16 Jul, 2014 10:00 AM

 

Published : 16 Jul 2014 10:00 AM
Last Updated : 16 Jul 2014 10:00 AM

வண்ணத்துப்பூச்சியும் எறும்பும்

கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்க இருந்த நேரம். எல்லாப் பூச்சிகளும் உணவு சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. மழைக்காலம் வந்துவிட்டால் உணவுக் கிடைப்பது கஷ்டம் இல்லையா? அதனால் ஓடியாடி உணவு சேகரித்துக்கொண்டிருந்தன. ஒருநாள் பீனா என்ற எறும்பு உணவு தேடி அலைந்து கொண்டிருந்தது.

“நிறைய உணவை சேகரிக்கணும். அப்போதான் எறும்புக் காலனியில் உள்ள சக எறும்புகளால் மழைக் காலத்தை கவலையில்லாமல் கடக்க முடியும்” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டபடி பீனா எறும்பு உணவுச் சேகரித்தது.

ஏற்கெனவே, பீனா நிறைய உணவுப் பண்டங்களைத் திரட்டி வைத்திருந்தது. ஆனால், எறும்புக் காலனியின் குட்டி நண்பர்களுக்கு இனிப்பு பிடிக்கும் என்பதால் இனிப்பைத் தேடி அலைந்து கொண்டிருந்தது. மரங்கள், புதர்கள் என எதையும் விட்டுவைக்காமல் பீனா தேடிக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று பணியாரத்தின் வாசனை பீனாவின் மூக்கைத் துளைத்தது.

“ஆஹா... பணியாரத்தின் வாசனை மூக்கைத் துளைக்கிறதே. வாசனை எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லையே” என முணுமுணுத்தப்படி தேடத் தொடங்கியது.

அப்போது ஒரு மரத்துக்கு கீழே பணியாரத்தின் பெரியத் துண்டு ஒன்று விழுந்து கிடந்ததை பீனா பார்த்தது. அந்தப் பணியாரத்துக்கு அருகே சென்றது. அப்போது ஒரு சிறிய செடியின் இலையில் ஏதோ ஒன்று தொங்கிக்கொண்டிருப்பதை அது பார்த்தது. அருகில் சென்றால், ஒரு சிறிய பூச்சி வாலுடன் இருந்தது. அந்தப் பூச்சி பஞ்சுக்குள் சிக்கி கிடப்பதுபோல் காட்சியளித்தது.

பீனாவுக்கு அது என்ன பூச்சி என்று தெரியவில்லை. அது பார்த்துக்கொண்டிருந்தது வண்ணத்துப்பூச்சியின் புழு பருவம். அது புரியாமல், புழுவுக்காக பீனா அனுதாபப்பட்டது.

“அய்யோ, பாவம்! உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு. என்னைப் பாரு, நான் எங்கே வேணுன்னாலும் போவேன். செடி, கொடி, மரம் எல்லாத்திலும் சுலபமா ஏற முடியும்” என்று அதன் மீது பரிதாபம் காட்டி, தற்பெருமையாகப் பேசியது.

அதோடு விடவில்லை, “உன்னைப் பார்! நீ ஒரு கூட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்கிற. உன்னால் வாலைக்கூட ஆட்ட முடியல” என்று பேசியபடியே பணியாரத்தை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து நகர்ந்தது.

சில மாதங்கள் கடந்தன. மழைக்காலம் முடிந்திருந்தது.

மீண்டும் இனிப்புத் தீனிகளைத் தேடி பீனா எறும்பு அதே இடத்துக்கு வந்தது. அப்போது வெயில் ரொம்ப அதிகமா இருந்துச்சு. பீனாவுக்கு வெயில்ல நடக்க முடியல. சோர்வா இருந்ததால, ஒரு மரத்தடியில் அப்படியே படுத்தது. அப்போது திடீரென மேகம் மூடியது. காற்று இதமாக வீசியது. அவ்வளவு நேரம் சோர்வாக இருந்த பீனாவின் முகம் மலர்ந்தது.

அந்த இதமான காற்றுக்கு இடையே இதுவரை பார்த்திராத அழகில் ஒரு வண்ணத்துப் பூச்சி பறந்து செல்வதை பீனா பார்த்தது. அந்த வண்ணத்துப் பூச்சி கருநீலநிறத்தில் இளஞ்சிவப்பு, மஞ்சள் வண்ணப் புள்ளிகளுடன் மிக அழகாக இருந்தது.

உடனே வண்ணத்துப் பூச்சியைப் பார்த்து பீனா பேச்சுக் கொடுத்தது. “ஒரு பூச்சியால இப்படி சுதந்திரமா பறக்க முடியுதுன்னா, அது இயற்கை தந்த பரிசுதான், இல்லையா?” என்று வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தது பீனா கேட்டது.

உடனே அந்த அழகிய வண்ணத்துப் பூச்சி தன் இறக்கைகளை இன்னும் வேகமாக அடித்தபடி, “என்னைப் பார்! யார் என்று தெரிகிறதா”? என்று பீனாவிடம் கேட்டது.

“இப்போதுதானே உன்னைப் பாக்குறேன். உன் அழகையும், நீ அழகாகப் பறந்து போறதையும் இப்பத்தானே பாக்குறேன்” என்றது பீனா.

இந்த பதிலை கேட்டதும் பீனாவைப் பார்த்து சிரித்த வண்ணத்துப்பூச்சி, “அன்று ஒருநாள் இதே இடத்தில் என்னைப் பார்த்து பரிதாபப்பட்டாயே, ஞாபகம் இருக்கிறதா? கூண்டுக்குள் சிக்கி கிடந்ததைப் போல கிடந்தனே, அதே பூச்சிதான் நான். என்னால் ஓட முடியுமா? மரம் ஏற முடியுமா என்றெல்லாம் கேட்டாயே, இப்போது முடிந்தால் என்னைப் பிடி பார்க்கலாம்” என்று கூறிச் சிட்டாகப் பறந்துச் சென்றது வண்ணத்துப் பூச்சி. வண்ணத்துப் பூச்சி பறப்பதை அண்ணாந்து பார்த்தபடி பீனா எறும்பு பெருமூச்சு விட்டது.

பார்வையால் பார்த்து எதையும் எடை போடக் கூடாது என்று பீனா எறும்பு மனசுக்குள் நினைத்துக்கொண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x