Published : 21 Dec 2016 10:47 AM
Last Updated : 21 Dec 2016 10:47 AM

நடு ராத்திரியில் வரும் தாத்தா!

டிசம்பர் மாதம் வந்தாலே குழந்தைகளுக்குக் கிறிஸ்துமஸ் தாத்தா ஞாபகத்துக்கு வந்துவிடுவார். ஒவ்வொரு வருஷமும் இயேசு பிறந்த டிசம்பர் 25-ம் தேதியைக் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இது உங்களுக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், அதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னால் டிசம்பர் 6-ம் தேதி கிறிஸ்துமஸ் தாத்தாவான ‘புனித சாண்டா கிளாஸ்’ பிறந்த நாள் வருவது உங்களுக்குத் தெரியுமா? அந்த நாளை ‘செயிண்ட் சாண்டா டே’என்று உலகம் முழுக்கக் கொண்டாடத் தொடங்கிப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

சரி, யார் இந்தச் சாண்டா கிளாஸ்?

பொசுபொசுவென பருத்திப் பஞ்சு மாதிரிப் பளீரென்ற வெள்ளை தாடி, சிவப்பும் வெள்ளையும் கலந்த அங்கி, தலையில அழகான தொப்பி, பரிசுகள் நிறைந்த ஒரு பெரிய கோணிப் பை, அதோடு ‘ஹோ... ஹோ... ஹோ...’ என்று தொப்பை குலுங்கும் அவரது சிரிப்பு ஆகியவைதான் கிறிஸ்துமஸ் தாத்தாவின் அடையாளங்கள். இவரைப் பார்த்தாலே குழந்தைகள், “ஹய், கிறிஸ்துமஸ் தாத்தா” என்று கத்திக் குரல் எழுப்பிக் குதிப்பார்கள்.

அப்படிக் குழந்தைகள் விரும்பும் தாத்தாவான சாண்டா கிளாஸ் பெங்குயின்கள் வாழும் வட துருவத்தில் வசிப்பதாகவும், எட்டுக் கலைமான்களால் இழுத்துச் செல்லப்படும் பனி சறுக்கு வண்டியை ஓட்டியபடி வானில் பறந்து வருபவர் என்றும் நம்பப்படுகிறது. இவரது வண்டியில சின்னஞ்சிறு கிங்கிணி மணிகள் கட்டப்பட்டிருக்கும். அந்த மணியின் ஓசைக்கு ஏற்ப ‘ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் ஆல் த வே” என்ற குழந்தை பாடல் கேட்கவே இதமாக இருக்கும். இந்தப் பாடல் உருவாகிச் சுமார் 500 வருடங்கள் ஆகிவிட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பல சிறப்புகளுக்குரிய இந்தத் தொப்பைத் தாத்தா வாழ்ந்த நாடு துருக்கி. அந்த நாட்டில் உள்ள மைரா என்ற ஊரில் கி.பி. 4-ம் நூற்றாண்டில் ஒரு பணக்கார வீட்டில் பிறந்தவர். அவர் உண்மையான பெயர் நிக்கோலஸ். இயேசுவின் மீது ரொம்ப அன்பாக அவர் இருந்தார். அவர் வளர்ந்து பெரியவர் ஆனதும் கிறிஸ்தவப் பாதிரியாராக மாறினார். ரொம்ப இரக்கக் குணம் உள்ளவர்.

உங்களைப் போன்ற குழந்தைகள் என்றால் அவருக்கு உயிர். நிக்கோலஸைச் சுற்றி எப்போதும் குழந்தைகள் கூட்டமாக இருப்பார்கள். ஏன் தெரியுமா? குழந்தைகளுக்கு விதவிதமாகத் தீனி, பொம்மைகளை அவர் பரிசாகக் கொடுத்துக்கொண்டே இருப்பார். இதற்காக அவரோட அப்பா, அம்மா விட்டுப்போன சொத்துகளைக்கூட விற்றுச் செலவழித்திருக்கிறார். வீடு வீடாகப் போய்க் குழந்தைகளைப் பார்த்து அவர்களுக்குப் பரிசு கொடுப்பது அவருக்கு ரொம்ப பிடிக்கும். பரிசு கொடுப்பது மட்டுமல்ல, அவர்களுடன் சேர்ந்து ஆடி பாடவும் செய்வார்.

எப்போதும் கிறிஸ்துமஸ் விழாவைக் குழந்தைகளோடுதான் கொண்டாடுவார். அதனால் அவரை எல்லாரும் ‘ஃபாதர் கிறிஸ்துமஸ்’என்று அப்போது அழைத்தார்களாம். அவரோட பிறந்த நாளைச் சிறப்பிக்கும் விதமாக கிறிஸ்துமஸ் தாத்தா போல வேஷம் போடும் பழக்கம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. கிறிஸ்துமஸ் முதல்நாள் ராத்திரி, குழந்தைகள் தூங்கின பிறகு கிறிஸ்துமஸ் தாத்தா வந்து, அவர்களுக்குப் பிடித்த பரிசை வீட்டில் வைத்துவிட்டுப் போவார் என்று இப்போதும் நம்பப்படுகிறது. நீங்களும் கிறிஸ்துமஸ் தாத்தாவை ஒரு தடவை வீட்டுக்குக் கூப்பிட்டுப் பாருங்களேன்.

வந்தது தாத்தாவின் ஓவியம்

1823-ம் வருடம் கிளெ மெண்ட் கிளார்க் மூர் என்பவர் தன் குழந்தைகளுக்காக எழுதிய ஒரு பாடலில் நிக்கோலஸ் பரிசுகளுடன் வந்துசெல்லும் கிறிஸ்துமஸ் இரவை வர்ணித்து எழுதியிருந்தார். இந்தப் பாட்டில் விவரித்து அவர் எழுதியது போலவும் வாஷிங்டன் நகரில் வாழ்ந்து மறைந்த இர்விங் என்பவர் எழுதிய ‘செயிண்ட் நிக்கோலஸ்’ என்ற புத்தகத்தின் அடிப்படையிலும் 1863-ம் ஆண்டு தாமஸ் நஸ்ட் என்ற ஓவியர் சாண்டா கிளாசின் உருவங்களைப் பலவிதமாக வரைந்தார்.

இப்போ நாம் பார்க்கிற சாண்டா கிளாஸ் உருவத்துக்கு இந்த ஓவியங்கள்தான் அடிப்படை. அதுமட்டுமல்ல, சாண்டா கிளாஸ் என்ற பெயரைப் பிரபலப்படுத்தியது அமெரிக்காதான். இப்போது கிறிஸ்துமஸ் தாத்தா என்றாலே சாண்டா கிளாஸ் பெயரும் சேர்ந்தே வந்துவிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x