Last Updated : 12 Nov, 2014 12:26 PM

 

Published : 12 Nov 2014 12:26 PM
Last Updated : 12 Nov 2014 12:26 PM

நேரு கொண்டாடிய பிறந்த நாள்

நாளைக்கு மறுநாள் குழந்தைங்க தினம். இந்த தினம் ஏன் கொண்டாடுறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமில்லையா? 1889-ம் வருஷம் நவம்பரு 14-ம் தேதி பிறந்த ஜவஹர்லால் நேருவோட பிறந்த நாளைத்தான் குழந்தைங்க தினமா கொண்டாடுறோம், இல்லையா? இவருக்குப் பிறந்தநாளை ஆடம்பரமா கொண்டாடுவது பிடிக்கவே பிடிக்காது. பிறந்த நாள் கொண்டாடுறதையும் அவ்வளவாக விரும்பினவரு இல்ல.

நேருவுக்குக் குழந்தைகள்னா ரொம்ப இஷ்டம். ஒருமுறை அவுரு சட்டையில் ஒரு குழந்தை ரோஜாப்பூ வைச்சது. அப்போ இருந்துதான் சட்டையில் ரோஜாப்பூ வைக்கிற பழக்கம் நேருவுக்கு வந்துச்சுன்னுகூட சொல்லுவாங்க. உங்கள போன்ற குட்டிப் பசங்கள கொண்டாடிய நேரு, நாட்டோட பிரதமரா இருந்தப்ப 1954-ம் வருஷத்துல ஒரு வேண்டுகோள் வைச்சாரு. அந்த வேண்டுகோள் என்னான்னு கேட்குறீங்களா?

“என் பிறந்த நாளுக்காக யாரும் ஆர்ப்பாட்டம் பண்ணாதீங்க. என் பிறந்த நாளைக் குழந்தைங்க தினமா கொண்டாடுங்க. இன்றைய குழந்தைங்கதான் நாளைய தலைவர்கள். அவுங்க நலனுக்காகப் பாடுபடுங்க. அவுங்களைப் பேணுங்க. அவுங்கள விஞ்ஞானிகளா, மேதைகளா, தலைவர்களா உருவாக்குங்க. அதுதான் நம்ம நாட்டுக்குத் தேவை”ன்னு சொன்னாரு.

நேரு இப்படிச் சொன்னதுக்குப் பிறகுதான் 1955-ம் ஆண்டுலேர்ந்து அவரோட பிறந்த நாளைக் குழந்தைங்க தினமாகக் கொண்டாட ஆரம்பிச்சாங்க. வயதான பிறகு பிறந்த நாள் கொண்டாடுறத வெறுத்த நேரு, சின்ன வயசுல பிறந்த நாள் கொண்டாடுறதுன்னா ரொம்ப இஷ்டம். வருஷத்துக்கு ஒரு முறைதான் பிறந்த நாள் வருமான்னு அவுங்க அப்பாக்கிட்ட கேட்பாரு. அதுக்கு ஒரு காரணம் இருந்துச்சு.

நேரு சின்ன பையனா இருந்தப்ப அலகாபாத்துல ஒவ்வொரு வருஷமும் அவுங்க அப்பா மோதிலால் நேரு பிறந்த நாள உற்சாகமா கொண்டாடுவாரு. பிறந்த நாள் அன்னைக்குக் காலையிலேயே நேருவைத் தராசு தட்டுல உட்கார வைப்பாரு. இன்னொரு தட்டுல எடைக் கல்லுக்குப் பதிலா கோதுமை, அரிசி மூட்டைகள வைப்பாரு. எடைக்கு எடை போட்டத்துக்கு அப்புறமா அரிசி, கோதுமைய அங்க இருக்குற ஏழை மக்களுக்குக் கொடுத்திடுவாரு. இதுமட்டுமில்ல, இனிப்பு, சட்டைத் துணிகளையும் வேடிக்கை பார்க்கும் ஏழை மக்களுக்குக் கொடுப்பாரு. இதைப் பார்த்து நேரு சந்தோஷப்படுவார்.

பிறந்த நாள் அன்னைக்கு நேரு இளவரசர் மாதிரி சட்டை போட்டுகிட்டு வரதைப் பார்த்து ஏழை மக்கள் ஆச்சரியமா பார்ப்பார்கள். அந்தக் கூட்டத்துல ஏழை சிறுவர், சிறுமியர்கள் பரட்டை தலையோட, கிழிஞ்சி போன சட்டைகளைப் போட்டுக்கிட்டு நிற்கிறதைப் பார்த்தால், நேரு உடனே உணவு, சட்டைய எடுத்துக்கிட்டு போய் அவுங்களுக்கு கொடுப்பாரு. இப்படிக் கொடுக்குறது நேருவுக்கு ரொம்ப பிடிக்கும். இந்த மகிழ்ச்சிக்காகவே, “ வருஷத்துக்கு ஒரு தடவைதான் பிறந்த நாள் வருமா? அடிக்கடி கொண்டாட முடியாதாப்பா”ன்னு அப்பாவியாகக் கேட்பாராம் நேரு.

இல்லாதவங்களுக்கு கொடுத்த உதவுறது நல்ல பழக்கமில்லையா? நேரு குட்டிப் பையனா இருந்தப்ப செஞ்சது மாதிரி, நீங்களும் இல்லாதவங்களுக்கு கொடுத்து உதவலாமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x