Last Updated : 30 Nov, 2016 10:02 AM

 

Published : 30 Nov 2016 10:02 AM
Last Updated : 30 Nov 2016 10:02 AM

தினுசு தினுசா விளையாட்டு: முத்து பறித்தல்!

ஒன்றாய் சேர்ந்து விளையாடும்போது பல நன்மைகளும் உண்டாகின்றன. ஒவ்வொரு விளையாட்டிலும் ஏதாவது ஒரு சிறப்பு அம்சம் இருக்கும். அதைத் தெரிந்துகொண்டு விளையாடும்போது இன்னும் சிறப்பான விளையாட்டாக அது அமையும்.

பலரோடு சேர்ந்து விளையாடும்போது, நமது குழுவிலுள்ள உறுப்பினர்களைப் புரிந்துகொண்டு, அவர்களை ஒருங்கிணைத்து கூட்டாகச் செயல்பட வேண்டும்.

விளையாடும்போது யாராவது தடுமாறிவிட்டாலும், அதற்காக அவர்களைத் திட்டாமல், அடுத்த முறை சிறப்பாகச் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். இப்படியான குழு ஒருங்கிணைப்புப் பணிகளை விளையாட்டின் வழியாக வெகுஇயல்பாகக் கற்றுக்கொள்ளலாம்.

தனிநபர் விளையாட்டில் ஆர்வமும் கவனிப்பும் அவசியம். அது இல்லாமல் விளையாடினால், வெறும் ‘உப்புக்குச் சப்பாணி’ போல வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும்.

நன்கு கவனித்து விளையாட வேண்டிய பல விளையாட்டுகள் உண்டு. அதிலொரு விளையாட்டைத்தான் இப்போது நாம் விளையாடப் போகிறோம்.

‘முத்து பறித்தல்’ அல்லது ‘முத்து செதுக்குதல்’ இதுதான் விளையாட்டின் பெயர்.

இந்த விளையாட்டை ஏழெட்டுப் பேர் வரை சேர்ந்து விளையாடலாம். இந்த விளையாட்டை விளையாட, உங்களிடம் புளியங்கொட்டை (புளிய முத்து), வேப்பங்கொட்டை (வேப்ப முத்து) இவற்றில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.

# விளையாட்டைத் தொடங்கும் முன்பாக, மூன்று நான்கு பேர் நிற்கும் அளவிலான வட்டமொன்றைத் தரையில் வரைந்துகொள்ள வேண்டும்.

# பிறகு, விளையாடும் ஒவ்வொருவரும் கூடி முடிவெடுத்த எண்ணிக்கையில், அவரவர் கையிலுள்ள புளியங்கொட்டைகளை அந்த வட்டத்துக்குள் வைக்க வேண்டும். (புளியமுத்து விளையாட்டு என்றால் புளியங்கொட்டைகளையும், வேப்பமுத்து விளையாட்டு என்றால் வேப்பங்கொட்டைகளையும் மட்டுமே வைக்க வேண்டும். இரண்டும் கலந்து விளையாட முடியாது.)

# எல்லாரும் முத்துக்களை வட்டத்தில் வைத்துவிட்டு, வட்டத்தின் ஏதாவதொரு பக்கவாட்டில் கோடு ஒன்றை வரையுங்கள்.

# எல்லாரும் பதினைந்தடி தொலைவுக்குச் செல்லுங்கள். அவரவர் கையிலுள்ள செதுக்குச் சில்லை (உடைந்த ஓடு அல்லது சப்பையான கல்) அங்கிருந்தபடியே, வட்டத்துக்கு அருகே போட்டிருக்கும் கோட்டை நோக்கி வீசுங்கள்.

# கோட்டுக்கு மிக அருகில் எந்த செதுக்குச் சில் விழுந்ததோ, அவர்தான் முதல் ஆட்டக்காரர். அடுத்தடுத்து சில்லைப் போட்டவர்கள் அந்த வரிசைக்கேற்ப விளையாடலாம்.

# முதல் ஆட்டக்காரர் செதுக்குச் சில் விழுந்த இடத்தில் நின்றபடியே, வட்டத்திலுள்ள புளியங்கொட்டைகளைக் குறி பார்த்து, செதுக்குச் சில்லினால் செதுக்க வேண்டும்.

# அவர் செதுக்கியபோது வட்டத்தை விட்டு வெளியேறிய எல்லாப் புளியங்கொட்டைகளையும் செதுக்கியவரே எடுத்துக்கொண்டு, அவரே விளையாட்டைத் தொடர வேண்டும். அவர் செதுக்கியதில், முத்து எதுவும் வட்டத்தை விட்டு வெளிவராதபோது, அடுத்தவர் விளையாட வேண்டும்.

# செதுக்கும்போது, செதுக்குச் சில் வட்டத்துக்குள் இல்லாமல், வெளியே வந்துவிட வேண்டும். தவறி வட்டத்துக்குள்ளேயே நின்றுவிட்டால், அதற்கு அபராதம் போல இரண்டு, மூன்று புளியங்கொட்டைகளைப் போட்டுவிட்டுதான் சில்லை வெளியே எடுக்க வேண்டும்.

ஆரவாரமும் கொண்டாட்டமுமாக விளையாடப்படும் இந்த விளையாட்டை ஒருமுறை விளையாடிப் பாருங்களேன்.

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x