

பாய்மரப் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு அண்மையில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. பார்ப்பதற்கு மிகவும் சவாலானதாகவும் சுவாரசியமானதாகவும் இருக்கும் இந்தப் பாய்மரப் படகுப் போட்டியில் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றவர், தமிழகத்தைச் சேர்ந்த விஷ்ணு சரவணன்.
சாதனைகளைத் தொடர்ந்து…
டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றதன் மூலம், ஒலிம்பிக் பாய்மரப் படகுப் போட்டிக்குத் தகுதிபெற்ற இளம் இந்தியர் என்கிற சாதனையைப் படைத்தவர் விஷ்ணு. அதைத் தொடர்ந்து 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்று, அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார். மேலும், 2023இல் தான் பங்கேற்ற முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியிலேயே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர். தற்போது ஜப்பானில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ள இவர், பாய்மரப் படகுப் போட்டியில் பதக்கம் வெல்லும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.
பதக்க இலக்கு
ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணங்களில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும், பாய்மரப் படகுப் போட்டி காமகோரி கடல் பகுதியில் நடைபெறுகிறது. அந்தப் பகுதிக்குச் சென்றுவிட்ட விஷ்ணு, அங்கிருந்தபடியே சுவாரசியமான தகவல்களை ‘இந்து தமிழ் திசை’யுடன் பகிர்ந்துகொண்டார்.