

இலங்கை கிரிக்கெட் அணி அப்போது ஒரு கத்துக்குட்டி. உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் எதிரணிக்குப் புள்ளிகளை வாரி வழங்குவதற்காகவே அந்த அணி சேர்க்கப்பட்டது போலிருக்கும். 1980-களிலும் 1990-களின் தொடக்கத்திலும் அந்த அணியை அப்படித்தான் பகடி செய்வார்கள்.
1992-93. அப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் அறிமுகமாயின. முதல் 15 ஓவர்களில் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் அந்த விதி.
அந்த விதியைப் பயன்படுத்தி, அப்போது தொடக்க ஆட்டக்காரர்கள் வெளுத்துவாங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படித்தான் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும் தொடக்க ஆட்டக்காரராக அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தார்.
அந்தக் காலக்கட்டத்தில் இலங்கை அணியின் பிம்பத்தை எப்படியாவது மாற்ற வேண்டும் எனத் துடித்துக்கொண்டிருந்தார் கேப்டன் அர்ஜுன ரணதுங்க. அணியில் புதிய உத்திகளை நடைமுறைப் படுத்திக்கொண்டிருந்தார்.
1994இல் பாகிஸ்தான் அணி இலங்கையில் பயணம் மேற்கொண்டது. ஒருநாள் போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்பாகத் தொடக்க ஆட்டக்காரர் ரோஷன் மகாநாமாவுக்குக் காயம். அவருக்குப் பதில் யாரைத் தொடக்க ஆட்டக்காரராக இறக்குவது? ரணதுங்கவுக்கு ஒரே குழப்பம்.
திடீர் முடிவு
சட்டென முடிவெடுத்து ஜெயசூர்யாவை அழைத்தார். “நீதான் தொடக்க ஆட்டக்காரராக இறங்கப் போற!” – இது ரணதுங்க. “நானா?” சூர்யாவுக்கு ஆச்சரியம். ஏனெனில் அவர் ஒரு சுழற்பந்துவீச்சாளர். ஏழாம் இடத்தில் பேட்டிங் செய்பவர். பேட்டிங் திறமை சற்று இருந்தாலும், ஆல்ரவுண்டர் கிடையாது.