

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. உலகக் கால்பந்து ரசிகர்கள் உதைத் திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த உலகக் கோப்பையில் பல அணி வீரர்கள், ‘பிங்க் ஷூ’ அணிந்து விளையாடுகின்றனர். இதன் பின்னணியில் சுவாரசியமான கதைகள் உண்டு!
கறுப்பு முதல் பிங்க் வரை
முதல் உலகக் கோப்பை நடைபெற்ற 1930லிருந்து 1960களின் இறுதிவரை கறுப்பு ஷூக்களையே வீரர்கள் முதன்மையாகப் பயன்படுத்தினார்கள். 1970களில் வெள்ளை, வெளிர் நிறத்திலான ஷூக்கள் அறிமுகமாயின.
1990களில் கால்பந்து ஷூக்களின் புரட்சிக் காலம். 1998 உலகக் கோப்பையில் பிரேசில் வீரர் ரொனால்டோ நசாரியோ வெள்ளி நிறத்தில் நீல நிறக் கோடுகள் வரையப்பட்ட ஷூவை அணிந்து விளையாடினார்.
அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ‘ஃபேஷன் ஸ்டேட்மெண்ட்’ ஆனது. அதைத் தொடர்ந்து புத்தாயிரத்தில் ஆரஞ்சு, பச்சை, நியான் போன்ற நிறங்களில் ஷூக்கள் பிரபலமாகின.
உலகக் கோப்பைத் தொடர்களில் பெரும்பாலும் வீரர்கள் பயன்படுத்தும் ஷூக்களை ‘ஸ்பான்சர்கள்’ வழங்குவதுதான் வழக்கம். அதனால், உலகின் முன்னணி வீரர்கள் பயன்படுத்தும் ஷூக்கள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும். புதுமையான டிசைன்களில் ‘பளிச்’ வண்ண ஷூக்களைத் தயாரிப்பதில் பிரபல நிறுவனங்கள் மத்தியில் போட்டியும் நிலவும்.