Last Updated : 02 Dec, 2016 12:18 PM

 

Published : 02 Dec 2016 12:18 PM
Last Updated : 02 Dec 2016 12:18 PM

காச தூர வீசப்பா, கடன‌ட்டையை நீட்டப்பா!

நாடே மாறியதுபோல் இருந்துச்சு வெகுளி வெள்ளைச்சாமிக்கு. ஏதோ ஒரு அரசியல் கூட்டம்னு கூட்டிட்டுப் போய் பிரியாணி குடுத்தாங்க. ஐநூறு ரூபாயும் கொடுத்தாங்க. ரூபாயைப் பையில் வச்சுக்கிட்டு அந்தப் பிரியாணியைச் சாப்பிட்டுட்டுப் படுத்தவன்தான். அப்படியே தூங்கிட்டான். சில நாட்கள் கழித்துத் திடீரென்று முழித்துவிட்டான். பசி வயிற்றைக் கிள்ளியது. முதலில் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது. சட்டைப் பையைப் பார்த்தான். ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு இருந்தது. இருக்கிற பசிக்கு ஐநூறு ரூபாய்க்குமே சாப்பிட்டுவிட வேண்டியதுதான் என்று கிளம்பினான்.

வழியெங்கும் ரேஷன் கடையைப் போல் வங்கிகளின் முன்னும் ஏ.டி.எம். வாசல்களிலும் கூட்டம் நிறைந்திருந்தது. பல ஏ.டி.எம்.கள் மூடிக் கிடந்தன. சில ஏ.டி.எம்.களில் ரூ. 2,000 மட்டுமே கிடைக்கும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. 2,000 ரூபாய் நோட்டு இருப்பது தனக்குத் தெரியாததே என வெள்ளைக்கு ஆச்சரியமாக இருந்தது. ஹோட்டலுக்குச் சென்றவனுக்கு அங்கிருந்த நோட்டீஸ் போர்டைப் பார்த்துப் பயங்கர அதிர்ச்சி. ரூ. 500, 1,000 நோட்டுகளை வாங்க மாட்டோம் என்று அதில் எழுதியிருந்தது.

மைக்கோமாமி கூட்டத்துக்குப் போயி பிரியாணி சாப்பிட்டதும், அவரிடம் கட்டுக் கட்டாக 500, 1000 ரூபாய்களைப் பார்த்த‌தும் வெள்ளைக்கு ஞாபகம் வந்தது. ஆனால், மைக்கோமாமி நோட்டு செல்லாதுன்னு அறிவிச்ச பிரதமர வாயாரப் புகழ்ந்துகொண்டிருந்தார். துண்டை இழுத்து இழுத்துப் பேசியதில் கழுத்துப் பகுதியிலிருந்து அவருக்குக் குருதி வழிந்துகொண்டிருந்தது.

“சரித்திரத்தின் எந்தப் பக்கத்திலும் இத்தகைய துணிச்சலான முடிவை எடுத்த தலைவரை நான் சந்தித்ததில்லை. இந்த முடிவு குடிசைவாசிகளைக் குபேரர்களாக்கும். குப்பைத் தொட்டியில் வசிப்பவர்கள் கோமான்களாக மாறுவார்கள். கறுப்புப் பண முதலைகள் கதிகலங்கிப் போவார்கள். இன்று பிளாட்ஃபார்மில் இருப்பவர்கள் நாளை ப்ளசர் காரிலே போவார்கள்.

சில நாட்களோ சில மாதங்களோ வேண்டுமானால் மக்கள் பட்டினி கிடக்க வேண்டியதிருக்கும். ஆனால், அதைச் சமாளித்து உயிரைக் கையிலே பிடித்து வைத்துக் கொண்டீர்கள் என்றால், அதன் பின்னர் நாட்டின் அத்தனை நதிகளிலும் காய்ச்சிய பாலும் சுத்தமான தேனும் பதநீர்ப் பாயசமும் ஓடும். அதன் இனிப்புச் சுவையில் நீங்கள் இங்கர்சாலைக் காணலாம். இப்போது வேண்டுமானால் ‘சே என்ன வாழ்வு இது’ என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அதன் பின்பு சே குவாரா கனவு கண்ட தேசம் போல் இந்த நாடு மாறிவிடும்!” என்பதை எகிப்து வரலாற்றில் தான் படித்திருப்பதாகக் கூறினார்.

அப்போது கொஞ்சம் உணர்ச்சி வேகத்தில் கையில் பிடித்திருந்த துண்டை அழுத்தி மேலும் கீழும் இழுக்க அது இரண்டு துண்டாகக் கிழிந்துவிட்டது. பேசி முடித்ததும் குலுங்கிக் குலுங்கி அழுதார் மைக்கோமாமி. ஏன் என்பது அவருக்கும் அவரைப் புரிந்து வைத்திருப்பவர்களுக்கும் தெரிந்திருந்தது.

சட்டென்று டி.வி. சேனலை யாரோ மாற்றினார்கள். அதில் நாட்டின் பிரதமர் தட்டேந்திய மேடி மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்தார்.

“ஆப் கா மேடி சர்க்கார்… காசில்லா கண்ட்ரி ஆகயா… மாசுள்ள ஸ்ட்ரீட் மே ஜாயேகா… பூராமே இனி டிஜிட்டல் மே. கக்கூஸ் மே கார்டு… கான்வெண்டில் மே கார்டு…” என்று பேசியவர் திடீரென்று உணர்ச்சிவசப்பட்டார்.

என் சிறு வயதில் நான் ஏழ்மையை அனுபவித்திருக்கிறேன் என்றார். இதைச் சொல்லும்போது, பிரதமரின் குரல் தழுதழுத்தது. கண்களை நன்கு பிழிந்து கண்ணீரைத் தாரைதாரையாக வரவழைத்தார். அதைப் பார்த்த வெள்ளைக்குப் பாவமாக இருந்தது, பசியே பறந்துவிட்டது. மக்களின் நலனுக்காகவே பாடுபடும் பிரதமரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ‘நாசிக் மாதாகீ கொய்!’ என்று தன்னையறியாமல் அலறினான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x