Last Updated : 30 Mar, 2018 10:15 AM

 

Published : 30 Mar 2018 10:15 AM
Last Updated : 30 Mar 2018 10:15 AM

இவன் வேற மாதிரி!

கல்லூரிப் படிப்பை முடித்தால், நல்ல வேலைக்குச் சென்று, கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் யாருடைய எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கும். ஆனால், இதிலிருந்து மாறுபட்டு நிற்கிறார் 23 வயதான அப்துல் ரஹ்மான். சிறு வயதில் தான் கற்ற சிலம்பக் கலையைப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுத்து வருகிறார் இந்த இளைஞர்.

அப்துல் ரஹ்மானின் சொந்த ஊர் நாகர்கோவில். தற்போது சென்னையில் தங்கி பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்துவருகிறார். ‘மார்ஷியல் தமிழா’ என்ற பெயரில் சாகச நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறார். பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் கற்று தரும் எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டதும், “சிறுவயதில் என்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் சிலர் சிலம்பம் சுழற்றுவதைப் பார்த்திருக்கிறேன். அப்போதிருந்தே எனக்கு சிலம்பம் மீது ஈர்ப்பு இருந்தது. அவர்கள் சிலம்பம் சுழற்றுவதைப் பார்த்தே நானும் சுழற்ற ஆரம்பிச்சேன்.

அப்படியே பழகி சிலம்பம் சுழற்றக் கற்றுக்கொண்டேன். நானே சுயமாகத்தான் சிலம்பம் கற்றுக்கொண்டேன். சிறு வயதில் கற்ற சிலம்பத்தை பள்ளி மாணவர்களுக்குச் சொல்லித்தர விரும்பினேன். இந்தக் கால சிறுவர்களுக்கு சிலம்பத்தைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாது என்பதால் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன்” என்கிறார் அப்துல் ரஹ்மான்.

தானாகவே சிலம்பம் கற்றுகொண்ட அப்துல் ரஹ்மான், இன்று சிலம்பத்தில் தேர்ந்தவராகியிருக்கிறார். தேசிய அளவிலும் மாநில அளவிலும் சிலம்பக் கலையில் சிறந்து விளங்குவதற்காக விருதுகளையும் பெற்றிருக்கிறார். தற்போது சென்னை வில்லிவாகத்தில் உள்ள தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக் கலையைக் கற்றுக்கொடுத்துவருகிறார்.

abdul rahman (1)right

“ஏழைச் சிறுவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் சிலம்பம் கற்றுக்கொடுக்கிறேன். சென்னையின் வேறு சில இடங்களிலும் என்னோட ஜூனியர்ஸ் இதேபோல கற்றுக்கொடுத்துவருகிறார்கள். அரக்கோணத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சிலம்பம் வகுப்புகளையும் எடுத்துவருகிறேன். இது எல்லாமே பள்ளி மாணவர்களிடம் சிலம்பம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் செய்கிறேன். தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பம் தலைமுறை தாண்டி தழைத்திருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

அதற்காகத்தான் இதைச் செய்கிறேன். சிலம்பக் கலையை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டுசேர்க்க நிறைய முயற்சிகளையும் எடுத்துவருகிறேன்” என்கிறார் அப்துல் ரஹ்மான். சிலம்பக் கலையைக் கற்றுக்கொடுக்கும் நேரம் போக, மீதி நேரத்தில் சொந்தமாக வைத்திருக்கும் தனது ஸ்டுடியோ வேலைகளைக் கவனிக்கிறார்.

சிலம்பத்தோடு அப்துல் ரஹ்மான் நின்று விடவில்லை. தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து சென்னையில் பொதுஇடங்களிலும் அரசு பள்ளிகளிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதிலும் ஆர்வம் காட்டிவருகிறார் இந்த இளைஞர். “பாரம்பரியக் கலைகளை என்னைப் போன்ற இளைஞர்கள் இனியாவது கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். அப்போதுதான் தமிழின் வளத்தையும் தமிழரின் பெருமையும் காலங்களைக் கடந்து அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல முடியும்” என்கிறார் அப்துல் ரஹ்மான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x