Published : 13 Apr 2018 11:08 AM
Last Updated : 13 Apr 2018 11:08 AM

கிரிக்கெட் கிருத்திகா!

 

“கி

ரிக்கெட்டைப் பற்றி இளைஞர்கள்தான் பக்கம் பக்கமாக ஆர்வமாக பேசுவார்கள், எழுதுவார்களா? பெண்களால் முடியாதா” என்ற கேள்விதான் சென்னையைச் சேர்ந்த கிருத்திகாவை கிரிக்கெட்டுக்காக இணையதளம் தொடங்க வைத்திருக்கிறது. கிரிக்கெட் தவிர டென்னிஸ் விளையாட்டைப் பார்த்து அதைப் பற்றி எழுதுவதையும் வேலையாகக் கொண்டுள்ளார் இவர்.

சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் என்றால் கிருத்திகாவுக்கு உயிர். கிரிக்கெட்டைப் பார்ப்பது மட்டுமல்ல, அன்றைய தின ஆட்டத்தையும் புள்ளிவிவரங்களையும் தன் டைரியில் குறித்துக்கொள்வதையும் பழக்கமாக வைத்திருந்தார். இன்ஜினீயரிங் முடித்து வேலைக்குப் போன பிறகும் கிரிக்கெட் மீதான ஆர்வம் இவருக்குக் குறையவில்லை. கிரிக்கெட் மீதான அந்த ஆர்வம்தான் ஒரு கட்டத்தில் அவரை அதுபற்றி எழுதவும் தூண்டியிருக்கிறது.

“சிறு வயதில் நான் செய்தித்தாள் படிக்கும்போது பெண்கள் பங்கேற்கும் கிரிக்கெட் பற்றிய செய்திகளைத் தேடுவேன். ஆனால், அந்தச் செய்திகள் கிடைக்காது. இது எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. என்னைப் போல மற்றவர்களும் வருந்தக் கூடாது என்பதற்காகவே முதலில் பெண்கள் கிரிக்கெட் தொடர்பான விஷயங்களை எழுத வலைப்பூ தொடங்கினேன். பிறகு கிரிக்கெட் செய்திகளைப் பற்றியும் எழுத ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய இன்ஜினீயரிங் வேலையை ராஜினாமா செய்துவிட்டு கிரிக்கெட்டைப் பற்றி முழு நேரமாக எழுதும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்குக் கிடைத்த அனுபவம் தனியாக இணையதளம் தொடங்க உதவியது” என்கிறார் கிருத்திகா.

தற்போது இவருடைய தோழி விஷாலியுடன் சேர்ந்து இணைய தளத்தை நடத்திவருகிறார் கிருத்திகா. அதேநேரம் கிரிக்கெட் பற்றிய செய்திகள், விவரங்களை ஃபேஸ்புக், வலைப்பூவிலும் தொடர்ந்து எழுத கிருத்திகா தவறுவதில்லை. இவரது இணையதளத்துக்குக் கணிசமான பார்வையாளர்களும் கிடைத்திருக்கிறார்கள். அதனால், கிருத்திகாவும் விஷாலியும் முன்பைவிட கிரிக்கெட் செய்திகளை அதிகம் எழுதிவருகிறார்கள்.

“நானும் என் தோழியும் கிரிக்கெட் பற்றி எழுதுவதைக் கேள்விப்படுவோர் ஆச்சரியமாகவே எங்களைப் பார்க்கிறார்கள். அப்படிப் பார்ப்பது எனக்குச் சுத்தமாகப் பிடிப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை ஆண், பெண் பேதம் தாண்டி விளையாட்டை விளையாட்டாகவே பார்க்கிறேன். விளையாட்டில் ஆண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பெண்கள் அணியினருக்கும் கொடுக்க வேண்டும். பெண் விளையாட்டு என்றாலே பல்லாங்குழியும் பார்பி பொம்மையும் போதும் என்றே நினைக்கிறார்கள். அந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இளைஞர்கள்கூட எழுத முன்வராத கிரிக்கெட்டைப் பற்றி எழுதிவருகிறேன்” என்று அழுத்தமாகக் கூறுகிறார் கிருத்திகா.

வாய்ப்பு கிடைத்தால், கிருத்திகாவின் www.penbugs.com இணையதளத்தைப் பாருங்களேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x