Last Updated : 08 Aug, 2014 12:00 AM

 

Published : 08 Aug 2014 12:00 AM
Last Updated : 08 Aug 2014 12:00 AM

ஷார்ட் பிளஸ் ஸ்வீட் நாடகங்கள்

இது ஃபாஸ்ட் ஃபுட் யுகம். எல்லாமே சீக்கிரம் நடந்து முடிய வேண்டும். கிரிக்கெட் மாட்ச் டி-20 ஆனது; இரண்டு மணி நேர மேடை நாடகங்களும் 10 நிமிடங்களில் நடத்தப்படுகின்றன. ‘ஷார்ட் பிளஸ் ஸ்வீட்’ என அழைக்கப்படும் இத்தகைய நாடகங்களின் தாய் வீடு ஆஸ்திரேலியா. ஏழு நாடுகளில் 30 நகரங்களில் இத்தகைய பத்து நிமிட ட்ராமா ஃபெஸ்டிவல்கள் நடத்தப்படுகின்றன.

சென்னையில் நான்காவது ஆண்டாக ட்ராமா ஃபெஸ்டிவலை பிரக்ருதி ஃபவுண்டேஷன் அமைப்பு, சென்னையில் இருக்கும் ஆஸ்திரேலியத் தூதரகம், புளூ லோடஸ் அறக்கட்டளையுடன் இணைந்து அலையன்ஸ் பிரான்கைஸ் அரங்கத்தில் கடந்த வாரம் நடத்தியது.

இதில் 50 நாடகங்கள் இடம்பெற்றன. இளைய தலைமுறையின் ஸ்கிரிப்ட் அமைக்கும் நேர்த்தி, மேடை நிர்வாகம், உடல் மொழி, இயக்கம், இசை போன்ற பல திறமைகள் அவர்களின் படைப்புகளில் பளிச்சிட்டன. ஆங்கிலம், தமிழ், இரண்டு மொழிகளிலும்கூட சிலர் நாடகங்களை நடத்தினர். கற்பனை வளத்துடன் வெளிப்பட்ட நகைச்சுவை, மனித நேயம், உறவுகளின் மேன்மை, அறிவியல், திகில் போன்ற பலவித உணர்வுகளையும் 10 நிமிட நாடகங்கள் ரசிகர்களுக்குத் தந்தன.

நாடகங்கள்

காலச் சக்கரத்தில் ஏறி வருங்காலத்தை நோக்கிப் பயணப்படுகிறார் ஒரு விஞ்ஞானி. அங்கே மனிதர்கள் எல்லாம் மொபைல் டிவைஸ்களின் அடிமைகளாக இருப்பதை நகைச்சுவையுடன் சித்திரித்தது The Zombie Apocalypse என்னும் நாடகம்.

இரண்டு பெண்கள். இரண்டு நோக்கங்கள். ஓர் அரசியல்வாதி என மூன்று கதாபாத்திரங்களின் வழியாகக் கதை சொன்னது ஒரு நாடகம்.

கடற்கரையில் இருக்கும் கண்ணகி சிலை உயிர்பெற்றால் என்னென்ன பேசும் என்பதைச் சொன்னது ‘கண்ணகி’ என்னும் நாடகம்.

இப்படி ஒவ்வொரு நாடகமும் வித்தியாசமான கருவைக் கொண்டிருந்தது. பல கட்டங்களில் நடந்த தேர்வுக்குப் பின், 13 நாடகங்கள் கடந்த வாரம் சனி, ஞாயிறன்று அலையன்ஸ் பிரான்கைஸ் அரங்கத்தில் அரங்கேறின.

டைப்பிஸ்ட் வித் டெஸ்டினி

A Typist with destiny என்னும் நாடகம் சிறந்த நாடகமாகத் தேர்வாகி, மித்ரன் தேவநேசன் ரோலிங் டிராபியை வென்றது. டைப்பிஸ்ட் வித் டெஸ்டினி ஆங்கிலத் தலைப்பில் அமைந்த தமிழ் நாடகம். இதன் இயக்குநர் ராஜீவ் ராஜாராம்.

நகைச்சுவை, உள்ளடக்கம், மேடையை முழுவதுமாகப் பயன்படுத்தியவிதம், நடிப்பு போன்ற அனைத்து அம்சங்களும் நிறைந்திருப்பதால் இந்நாடகத்தைப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்ததாக நடுவர்கள் பாராட்டினர்.

டெல்லியில் 1947 ஆகஸ்ட் 14 இரவு அரசுப் பணியிலிருக்கும் இரண்டு டைப்பிஸ்டுகளுக்கு ஒரு முக்கியமான ஆவணம் டைப் செய்வதற்காகக் கொடுக்கப்படுகிறது. அவர்கள் காபி சாப்பிட்டுக்கொண்டே பல கதைகளையும் பேசுகின்றனர். இறுதியில் காபியையும் அந்த ஆவணத்தில் கொட்டிவிடுகின்றனர். எழுத்துகள் அழிந்துவிடுகின்றன. அவர்களாக ஒருமுடிவுக்கு வந்து, விட்டுப்போன வார்த்தைகளைப் போட்டு டைப் அடித்து முடித்துவிடுகின்றனர். மறுநாள் பதவியேற்கப் போகிறவரின் செயலர் அதை வாங்கிப் போகிறார். இதுதான் `டைப்பிஸ்ட் வித் டெஸ்டினி'யின் கதை!

வரலாற்றை ஒட்டிய ஒரு சம்பவத்தை நகைச்சுவையோடு சொல்லும் கலை, ராஜீவ் ராஜாராமிற்கு நன்றாகவே கைவந்திருக்கிறது. இவர் 2012-ல் நடந்த இதே நாடக விழாவில் சிறந்த கதை, வசனத்துக்கான விருதைப் பெற்றிருக்கிறார்.

கற்பூரம்

இரண்டாவது பரிசைக் ‘கற்பூரம்’ நாடகம் பெற்றது. சரஸ்வதியின் தம்பி முருகேசன் பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்து 44 ஆண்டுகளுக்குப் பின் தன்னுடைய அக்காவைச்

சந்திக்கிறார். இருவரின் இளவயது ஞாபகங்கள் விரிகின்றன. உணர்ச்சிமயமான நடிப்பை கிருஷ்ண கணபதியும் பூஜாவும் வாரி வழங்கியிருந்தனர். பிரிந்தவர் சந்தித்தால் பேச்சற்றுப் போகும் என்பதுதான் இந்நாடகத்தின் ஒன்-லைன். அதோடு மொழியின் அவசியத்தையும் நாடகம் மையப்படுத்தியது.

“இளம் தலைமுறையினரை நாடகக் கலையின் மீது ஆர்வம் கொள்ள வைப்பதுதான் எங்களின் நோக்கம். ஒவ்வோர் ஆண்டும் போட்டிக்கான நாடகங்களின் எண்ணிக்கையும் தரமும் அதிகரித்துக்கொண்டே இருப்பது சந்தோஷத்தை அளிக்கிறது” என்றார் பிரக்ருதி ஃபவுண்டேஷனின் மீரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x