

‘மாயாஜால சினிமா’ என்கிற திரைப்பட வகை, சலனப் படக் காலத்திலேயே கையாளப்பட்டுவிட்டது. தமிழ் சினிமாவுக்குச் சமூகக் கதைகளைக் கொண்டு வந்த முதல் முன்னோடியான ராஜா சாண்டோ இயக்கிய ‘பேயும் பெண்ணும்’ (1930) படத்தை, தமிழ் சலன சினிமாவின் முதல் மாயாஜாலப் படம் எனலாம். ‘பெண்ணைக் கண்டால் பேயும் இரங்கும்’ என்கிற ஒற்றை வரிக் கதையைக் கொண்டு அவர் உருவாக்கிய படம். தற்கொலை செய்துகொள்ளப் பாழுங்கிணற்றில் குதிக்கும் ஓர் அபலைப் பெண்ணைக் காப்பாற்றுகிறது அந்தக் கிணற்றில் வசித்து வந்த பேய். அதன்பின் அந்தப் பேய் தரும் செல்வத்துடன் நாயகி வீடு திரும்புவது கதை. வசனங்கள் விவரணை அட்டைகளாகக் காட்டப்பட்ட படம்.
சினிமா பேசத் தொடங்கியபின், சில நடிகர்கள் தமிழிலும் சிலர் தெலுங்கிலும் பேசிய ‘காளிதாஸ்’ (1931) படத்தில், காளியிடம் வரம் பெறும் காட்சியில் சில தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததை அந்தப் படத்தைக் காணும் வாய்ப்பைப் பெற்ற மூத்த சினிமா வரலாற்றாசிரியர்கள் சிலர் பதிவு செய்துள்ளனர். இதன்பின்னர் பக்தியையும் மாயாஜாலத்தையும் கலந்து கொடுத்த படங்கள், அடுத்த 30 ஆண்டுகளில் இடைவிடாமல் வந்து கொண்டேயிருந்தன. அந்த வரிசையில் நேரடித் தமிழ்ப் படங்கள் - தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப் பட்டுத் தமிழுக்கு வந்த படங்கள் என இரண்டு வழிகளில் மாயாஜால மசாலாக்கள் குவிந்தன.
அவற்றில் பெரும்பாலான படங் கள் குப்பையாக இருந்தாலும் மாயாஜால சினிமா என்பது ‘பாக்ஸ் ஆபிஸ்’ வசூலில் ‘மினிமம் கேரண்டி’ என்கிற அந்தஸ்தில், சமூகப் படங்களுக்கும் பொழுதுபோக்குப் படங்களுக்கும் இப்போதுவரை சரியான போட்டியாக விளங்கி வருகின்றன. எடுத்துக் காட்டாக நயன்தாரா நடித்து வெளிவந்த, அடுத்து வெளிவரவிருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ பட வரிசையைக் குறிப்பிடலாம். தவிர, பக்தி கலந்த மாயாஜாலப் படங் களின் தாக்கமும் வரவேற்பும் வெள்ளித் திரையிலிருந்து சின்னத் திரைக்கும் பரவி, இன்றுவரை அங்கேயும் அந்தப் போக்கு நீடித்திருக்கிறது.