

அரசியல், சினிமா இரண்டிலும் சிறந்து விளங்கிய ஒருவர், ‘அருளாளர்’ என்று ஆன்மிக உணர்வுடன் அழைக்கப்பட்டார் என்றால் அவர் ஆர்.எம்.வீரப்பன் மட்டும்தான். நாடக உலகில் 12 வயதில் காலூன்றி, அங்கிருந்து திராவிட இயக்கத்தில் பெரியாரின் பெருந்தொண்டராகி, பின்னர் அண்ணாவின் அன்புத் தம்பியாகி, அவரது பரிந்துரையுடன் எம்.ஜி.ஆருக்கு ஒரு நிர்வாகியாக, அவரிடம் ஒரு தொழிலாளியாக வந்துசேர்ந்தவர்.
பின்னாளில் எம்.ஜி.ஆரை வைத்துப் படமெடுத்து அவருக்கே ஊதியம் கொடுக்கும் முதலாளியாக மாறியவர்! சினிமா - அரசியல் இரண்டிலும் எம்.ஜி.ஆர். எதிர்கொண்ட பல முக்கியமான திருப்புமுனை தருணங்களில் மிகச்சரியான ஆலோசனைகளை அவருக்கு வழங்கியவர்.
அதன் மூலம், எம்.ஜி.ஆர். என்கிற உச்ச நட்சத்தி ரத்தின் பொதுவாழ்க்கையில் பல விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவதைத் தடுத்தவர். எம்.ஜி.ஆர். உயி ரோடு இருந்தவரை மட்டுமல்ல; அவர் மறைந்த பிறகும், தனது வாழ்நாளின் கடைசி மூச்சுவரையிலும் எம்.ஜி. ஆரின் புகழ் பரப்பும் அவருடைய அருந்தொண்டராக விளங்கியவர். அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர். எப்படி ‘இதயக்கனி’யாகக் கிடைத்தாரோ.. அப்படி எம்.ஜி. ஆருக்குக் கிடைத்த ‘இதயக்கனி’தான் ஆர்.எம்.வி.
வீட்டை விட்டு ஓட்டம்
புதுக்கோட்டை நகரத்திலிருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் இருக்கிறது வல்லத்திராகோட்டை என்கிற விவசாயக் கிராமம். அந்த ஊரில் வாழ்ந்த ராமசாமி - தெய்வானை தம்பதியின் ஏழாவது குழந்தையாக 1926 செப்டம்பர் 9 அன்று பிறந்தவர் ஆர்.எம்.வி. இவர்தான் கடைக்குட்டி.
இரண்டு வயதிலேயே தந்தையை இழந்த வீரப்பனை அவருடைய மூத்த அக்காள் ரத்தினம், தான் வாக்கப் பட்டுப்போன நாச்சியர்புரத்துக்கு அழைத்துப்போய், தொடக்கப் பள்ளியில் சேர்த்தார்.
6ஆம் வகுப்பு வரை படிப்பில் சிறந்து விளங்கிய வீரப்பன், 12 வயதில் கல்வியில் நாட்டம் செல்லாமல் காரைக்குடி அய்யாசாமிப் பிள்ளை என்பவரிடம் ‘வள்ளித் திருமணம்’ நாடகத்தைக் கற்றார். 1939இல் வீரப்பன் வேடனாக நடித்த ‘வள்ளித் திருமணம்’ நாடகம் நாச்சியர்புரத்தில் ஊர்மக்கள் முன்னிலையில் அரங்கேறியது.
அதன்பின்னர், வீரப்பனுக்குக் கலையார்வம் சிறகு களைக் கொடுத்துவிட்டது. வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் காரைக் குடியில் முகாமிட்டிருந்த டி.கே.எஸ். சகோதரர்களின் பால ஷண்முகானந்த சபா நாடகக் குழுவில், டி.கே.சண்முகம் முன்னிலையில் தன் திறமையைக் காட்டிச் சேர்ந்துகொண்டார்.
அக்கா குடும்பத்தினரோ வீரப்பனை ஊரெங்கும் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருந்தார்கள். நாடக சபாவிலிருந்து வீட்டுக்கு ஆள் வந்தது. வீட்டார் சம்மதத் துடன் உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றோடு மாதம் 7 ரூபாய் ஊதியம் என்கிற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்க, 12 வயதில் வீரப்பனின் கலை வாழ்க்கை தொடங்கியது.
குழுவில் வந்துசேரும் சிறார்களின் விடுபட்ட பள்ளிக் கல்வியைப் பயிற்று விக்க டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகக்குழுவில் சில ஆசிரியர்களை மாதச்சம்பளத்துக்குப் பணியில் அமர்த்தி யிருந்தனர். தவிர, நாடகக் குழுவுக்குப் பத்திரிகைகளும் பருவ இதழ்களும் வந்து குவியும்.