

படம் உதவி: ஞானம்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியின் தலைமையில் தஞ்சையில் தொடங்கப்பட்டது ‘கிருஷ்ணன் நாடக சபா’. அதில்தான் ஆர்.எம்.வீரப்பன் நிர்வாகியாகப் பொறுப்பேற்றார். கே.ஆர்.ராமசாமிக்காக அண்ணா எழுதிய நாடகங்களில் ஒன்று ‘ஓர் இரவு’.
தஞ்சையில் அரங்கேறி, அங்கேயே 250 நாள்கள் இடைவிடாது நடந்து சாதனை படைத்தது. இக்காலகட்டத்தில்தான் அண்ணா வுக்கும் பெரியாருக்கும் கருத்து யுத்தம் தொடங்கி, அது மௌன யுத்தமாக மாறியிருந்தது.
அதனால், திராவிடக் கழக மாநாடுகள், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை அண்ணா தவிர்த்து வந்தார். ‘ஓர் இரவு’ நாடகத்துக்கு நாளுக்கு நாள் கூட்டம் பெருகிக் கொண்டிருந்த தொடக்க நாள்களில் தஞ்சைக்கு வந்து தங்கத் தொடங்கினார் அண்ணா.
அப்போது நிர்வாகியாகப் பொறுப்பேற்றிருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு, அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. ‘ஓர் இரவு’ நாடகத்துக்கு ஒவ்வொரு நாளும் தலைமையேற்க ஒரு அறிஞரை அழைத்துப் பிரபலப் படுத்தி வந்தார் ஆர்.எம்.வி.
நாடக விளம்பரத்தில் ‘அறிஞர்’ அண்ணா‘
ஓர் இரவு’ 25ஆம் நாளை எட்டிய போது நாடகத்துக்குத் தலைமை யேற்கப் புரட்சிக் கவி பாரதிதாசனை அழைத்து வந்திருந்தார் ஆர்.எம்.வி. பாரதிதாசன் தலைமையேற்றுப் பேசியபோது: “இந்த நாடகத்தை எனது தலைவர் ‘அறிஞர்’ அண்ணா துரை எழுதியிருக்கிறார்.
கரும்பை நுனியிலிருந்து கடித்துச் சாப்பிடும் போது எப்படிப் போகப் போக ருசி கூடிக்கொண்டு போகுமோ அப்படி இந்த நாடகம் இருக்கிறது” என்று பாராட்டினார். அன்று, முதன் முதலில் ‘அறிஞர் அண்ணாதுரை’ என்று பாரதிதாசன் குறிப்பிட, அந்த ‘அறிஞர்’ என்கிற சொல்லை அப்படியே பிடித்துக் கொண்டார் ஆர்.எம்.வீ. அடுத்த நாள் முதல் ‘ஓர் இரவு’ நாடக விளம்பர கைப்பிரசுங்களில் ‘கதை - வசனம் அறிஞர் சி.என். அண்ணாதுரை’ என்று அச்சிட்டு விநியோகிக்க வைத்தார்.
அண்ணாவின் முன்னொட்டாக ‘அறிஞர்’ என்கிற பொருத்தமான பட்டம் பின்னாளில் நிலைத்து நின்றதற்குத் தொடக்கப் புள்ளியாக பாரதிதாசனும் அதைப் பிரபலப்படுத்திய ஆர்.எம்.வி.யுமே காரணமாக அமைந்தார்கள்.
பின்னாளில் கிருஷ்ணன் நாடக சபாவிலிருந்து விலகியிருந்த ஆர்.எம்.வியை காஞ்சிபுரத்துக்கு அழைத்துத் தன் அருகில் வைத்துக்கொண்டார் அண்ணா. ‘திராவிட நாடு’ பத்திரிகை அலுவலகத்தில் சுமார் ஒரு வருடம் அவரோடு உடன் பயணித்தார். அப்போது காஞ்சிபுரத்துக்கு அண்ணாவைச் சந்திக்க வரும் பல தலைவர் களோடு பழகும் வாய்ப்பைப் பெற்றார்.