

‘பெண்’ படத்தில் ராஜுவின் நண்பன் ரகுவாக... | படங்கள்: உதவி ஞானம் |
கேமராவுக்கு முன்னால் வலிந்து நடிக்கத் தொடங்கினால், அது 'நாடகம்' ஆகிவிடும். மாறாக, காட்சியின் சூழலில் கதாபாத்திரம் எப்படி இருக்குமோ, அப்படி இயல்பாக இருப்பதே சிறந்த திரை நடிப்பு. திரை நடிப்பு என்பதே நடிப்பைக் கட்டுப்படுத்துவதுதான்.
‘டோண்ட் ஆக்ட், ஜஸ்ட் பிகேவ்’ (Don't act, just behave) என்பதே திரை நடிப்பின் ‘கோல்டன் ரூல்.’ ஏனென்றால் நாடக மேடையில் 25 மீட்டர் நீளம்வரை கொண்ட பெட்டி வடிவ அரங்கில், கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் ரசிகருக்கும் நடிகரின் உணர்ச்சி தெரிய வேண்டும்.
அதனால் நாடக நடிகர் தனது உணர்ச்சியைத் தீவிரமான உடல்மொழி, உரத்த குரல் ஆகியவற்றின் வழியாகக் கடத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால், திரையின் ஒளியில் தோன்றும் நடிகரின் விழித்திரை அசைவைக்கூட கேமரா துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டிவிடும்.
‘குளோஸ் அப்’ என்கிற மாயாஜாலக் கோணம், நடிகரின் உணர்ச்சியைத் திரையில் பெரிதுபடுத்திக் காட்டும். கதை நிகழும் நிலப்பரப்பை விரித்துக் காட்டி, திரையரங்கில் இருப்பதையே மறக்க வைத்துவிடும்.
நடிகனும் நிலப்பரப்பும் இணையும் திரைமொழியின் இந்த இரு பெரும் அம்சங்களில் ஒளிப்பதிவு கொண்டிருக்கும் முக்கியத்துவம் குறித்த ஆழ்ந்த புரிதலைக் கொண்டிருந்தார் எஸ்.பாலசந்தர். அதனால்தான், தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களுக்கான நடிப்பை அவர் கட்டுப்படுத்தி, திரைவெளிக்கான நடிப்பைக் கொடுப்பதில் நேர்த்தியான முன்மாதிரியாகத் தன்னைக் காட்சிக்கு வைப்பதில் வெற்றிகண்டார்.
‘கைதி’யின் நிதானம்
தன்னுடைய படங்களில் கதா பாத்திரம் ஏற்ற நடிகர்களின் நடிப்பையும் தேவைக்கேற்ப கட்டுப்படுத் தினார். கதை நிகழும் களமும் நிலமும் கதாபாத்திரங்களுக்கு இணையானவை என்கிற அவரின் புரிதலைப் போலவே, கதை கூறும் இசை, வெளித்தெரியாத கலை இயக்கம் உள்ளிட்ட பல கலைகளை நுணுக்க மாக ஒருங்கிணைத்து, படத்தின் மைய உணர்வை ஒளிரவைப்பதே ஓர் இயக்குநரின் ஆளுமை என்பதிலும் தலைசிறந்து விளங்கினார்.
இந்த ஆளுமையின் காரணமாகவே அவர் இயக்கி, நடித்து, இசையமைத்து, படத்தொகுப்பு செய்த எல்லாப் படங்களிலும் எல்லா அம்சங்களிலும் உச்சம் தொட்டு நின்றார். ஒரு சிறந்த இயக்குநராகத் தன்னை நிறுவிய பின்னர் பிற இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் நடிக்கவும் இயக்கவும் அழைத்தபோது, நாயகன் (கைதி, 1951), வில்லன் (டாக்டர் சாவித்திரி-1955, அவனா இவன்? - 1962) எதிர்மறை நகைச்சுவை வேடம் (கோடீஸ்வரன், 1955), இரண்டாம் கதாநாயகன் (பெண், 1954), முதிர்ச்சி யான குணச்சித்திரம் (பொம்மை-1964, நடு இரவில்-1970) என எதை ஏற்றாலும், அது புதுமை, சமூக மாற்றத்தைத் தூண்டும் கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியைக் கடைப்பிடித்திருக்கிறார்.
ஒரு திரைப் படத்துக்குத் தேவையான பல திறமைகள் எஸ்.பியிடம் ஒருங்கே குவிந்திருப்பதைக் கண்ட தயாரிப் பாளர் சோமு, அவரைத் தனது ஜுபிடர் பிக்சர்ஸ் உலகத்துக்குள் விரும்பி அழைத்தபோது ‘கைதி’ (1951) உருவானது. அந்தப் படத்தின் திரைக் கதை, இசை, இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றதுடன் நாயக னாகவும் நடித்தார்.
விஜயன் (எஸ்.பாலசந்தர்) ஓர் ஏழைப் பட்டதாரி இளைஞன். வேலை தேடித் தோற்று, ரேஸ் கோர்ஸில் அதிர்ஷ்டத்தைத் தேடும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். அங்கே அவனுக் குக் குதிரைப் பந்தயத்தில் வெல்லும் சூட்சுமத்தைச் சொல்லிக் கொடுக்கிறார் கருணாகரன் (எம்.ஆர்.சந்தானம்).