Last Updated : 08 Sep, 2017 09:24 AM

 

Published : 08 Sep 2017 09:24 AM
Last Updated : 08 Sep 2017 09:24 AM

இயக்குநரின் மூளையை விலைக்கு வாங்கினேன்: விஷால் பேட்டி

“க

டந்த எட்டு மாதங்களில் தங்கையின் திருமணத்தின்போது கிடைத்த நான்கு நாட்கள் மட்டுமே எனக்கான விடுமுறை நாட்கள். நண்பர்களோடு நேரம் செலவழிப்பதே இல்லை. நான் எனக்கான நேரத்தை இழந்துவிட்டதை உணர்கிறேன்''. பரபரப்பான பணிகளுக்கிடையிலும் மென்சோகம் கலந்த புன்னகையுடன் பேசுகிறார் விஷால். ஜி.எஸ்.டி வரிப் பிரச்சினை, கேளிக்கை வரிப் பிரச்சினை, நடிகர் சங்கக் கட்டிடப் பிரச்சினை எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே 'துப்பறிவாளன்' படத்தை முடித்திருக்கும் அவரிடம் பேசியதிலிருந்து...

‘துப்பறிவாளன்' விஷாலுக்கு எந்த மாதிரியான படமாக இருக்கும்?

இப்படம் ‘ஷெர்லாக் ஹோம்ஸ்' மாதிரி ஒரு துப்பறிவாளனுடைய கதை. தமிழில் ஜெய்சங்கர் சார், தெலுங்கில் கிருஷ்ணா சார் போன்றவர்கள் இதே மாதிரியான படங்களில் நடித்திருக்கிறார்கள். அடுத்தடுத்து என்ன காட்சி வரும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு மிஷ்கின் சார் திரைக்கதை அமைத்திருந்தார்.முதல் முறையாகப் பாடல்களே இல்லாத படத்தில் நடித்திருக்கிறேன். எனக்கு ஒரு ஸ்டைலான படமாக இருக்கும்.

ஒரு வழக்கை முடிப்பதற்காகக் கிளம்புவேன். ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ படத்தில் கூடவே ஒரு மருத்துவர் கதாபாத்திரம் இருக்கும். அப்படித்தான் இதில் பிரசன்னா என்னுடனே வருவார். வினய், பாக்யராஜ் சார், ஆண்ட்ரியா, தீரஜ் உள்ளிட்ட ஐந்து வில்லன்கள் இருப்பார்கள்.

மிஷ்கினின் நாயகனாக மாறுவது கடினமாக இருந்ததா?

கணியன் பூங்குன்றன் என்ற கதாபாத்திரத்துக்குள் போவதற்குச் சில நாட்கள் பிடித்தது. வழக்கமாக நான் நிறைய பேசுவேன். ஆனால், இதில் பக்கவாட்டில் யாராவது நின்று பேசினால் அவரைப் பார்த்துக் கூடப் பேசாத மாதிரி நடித்திருக்கிறேன்.

விஷால் என்பவன் இப்படத்துக்கு எப்படியிருக்க வேண்டும் என்று முழுமையாகத் தீர்மானித்தது மிஷ்கின் சார்தான். இது ஒரு முழுமையான மிஷ்கின் படமாக இருக்கும். 'துப்பறிவாளன்' வெளியானவுடன் வேறொரு பாணியில் கதை சொல்லக்கூடிய படங்கள் வரும் என எதிர்பார்க்கிறேன். அதனால் மட்டுமே இப்படத்தை ஒப்புக் கொண்டேன்.

பாலா சார் என்னை எப்படித் திட்டினாரோ, அதே போன்று மிஷ்கின் நிறையத் திட்டுவார். இனிமேல் அவருடைய படத்தில் நான்தான் நாயகன். அவருடைய மூளையை விலைக்கு வாங்கிவிட்டேன்.

அப்படியென்றால் அதிரடி வசனம், கமர்ஷியல் காரம் கலந்த படங்களில் நடிக்க மாட்டீர்களா?

குழந்தையைத் தூக்கி முத்தம் கொடுப்பது, பாடல் காட்சிகளில் பாட்டிகளோடு நடந்து போவது போன்ற காட்சிகளைக் கொண்டு இனிமேல் ஏமாற்ற முடியாது. கேமராவைப் பார்த்து 'நான் வரேன்டா' என்று பேசும்போது பின்னால் பூகம்பம் மாதிரி கிராபிக்ஸ் செய்தால் காமெடியாகிவிடும்.

‘துப்பறிவாளன்', ‘இரும்புத்திரை' ஆகிய படங்கள் வெளியாக ஏன் இவ்வளவு தாமதம்?

கோடிகளை அடுத்த ஆண்டு கூடச் சம்பாதித்துக் கொள்வேன். திரையுலகைக் காப்பாற்றுதல் என்பதை இப்போதுதான் செய்ய முடியும். உடனே திரையுலகத்துக்கு ஏதாவது நல்லது செய்துவிட வேண்டும் என்றவுடன், படப்பிடிப்பை நிறுத்திவிட்டுக் களத்தில் இறங்கினேன். 'துப்பறிவாளன்' மற்றும் 'இரும்புத்திரை' படங்கள் தள்ளிப் போனதால் எனக்குப் பெரிய இழப்புதான்.

நடிகர் சங்கம் - தயாரிப்பாளர் சங்கம் என இவ்வளவு உழைக்கிறீர்களே.. அடுத்து அரசியலா?

கண்டிப்பாக அரசியலுக்கு வருவதற்காக அல்ல. நடிகர் சங்கத்தில் ஜெயிப்பேன் எனத் தெரியாது. கேள்வி கேட்டேன், பதிலளிக்கவில்லை. தேர்தலில் நின்றோம், ஜெயித்தோம். ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றினோம். கட்டிடப் பணிகளும் அடுத்தாண்டு முடிந்துவிட்டால், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய மன திருப்தி வந்துவிடும். தயாரிப்பாளர் சங்கமும் அப்படியேதான். அனைவருமே தமிழ் சினிமா ரொம்ப ரிஸ்க்கானது என்று நினைக்கிறார்கள். அது கண்டிப்பாக வரும் வருடத்தில் மாறும்.

கமல் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தருவீர்களா?

கமல் சாரை ஆதரிப்பதை விட, மாற்றம் வந்தால் ஆதரிப்பேன். கமல் சாரைப் பொறுத்தவரை அவருடைய கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிக்கிறார். அவர் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்போது ஆதரிப்பதைப் பற்றிச் சொல்கிறேன்.

தமிழக அரசிடம் இரட்டை வரி விதிப்பு குறித்துப் பேச்சுவார்த்தை நடந்ததே?

கேள்விக்குறியாக நிற்கிறது. திரையரங்குகளில் நிறைய படங்களின் வசூலை நிறுத்தி வைக்கிறார்கள். ஜி.எஸ்.டியால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக எந்தவொரு பதிலுமே இல்லை. 2 சதவீத வரி விதித்தால் கூடத் தமிழ் சினிமா தாங்காது. அப்படியும் வரி விதித்தால், தமிழ்நாட்டில் திருட்டு விசிடி தலைதூக்கியது என்றால் அதற்கு அவர்கள்தான் பொறுப்பு. முதலில் இங்கு திருட்டு விசிடியை ஒழித்துக் கட்டவேண்டும். தமிழ்நாட்டில் திருட்டு விசிடிக்கான போலீஸ் என்பது மிகவும் குறைவு. அதை முதலில் அதிகரிக்க வேண்டும்.

படம் நஷ்டமடையும்போது நடிகர்களின் சம்பளம்தான் காரணம் என ஒரு தரப்பும், தயாரிப்பாளர்கள்தான் அள்ளிக் கொடுக்கிறார்கள் என ஒரு தரப்பும் சொல்கிறது. உங்களுடைய கருத்து என்ன?

கோடிகளில் வட்டிக்கு வாங்கிப் படம் செய்கிறோம், நமக்கு வருமானம் வருகிறதா என்று சிந்திக்க வேண்டும். சூதாட்டம் மாதிரிக் கோடிகளைக் கொட்டிவிட்டு, வியாபாரம் முடிந்ததும் படம் சரியாகப் போகவில்லை என்றவுடன் நடிகர்களைக் குறை சொன்னால் எந்த வகையில் நியாயம்? நடிகர்களும் படத்தின் நஷ்டத்துக்கு ஒரு காரணம்தான். நடிகர்களை நம்பித்தான் கோடிகளைக் கொடுக்கிறார்கள். ஆனால், தயாரிப்பாளர்தான் ராஜா, மந்திரி எல்லாம்.

இதை சரிசெய்ய தமிழக அரசிடம் அனைத்துத் திரையரங்குகளையும் கணினி மயமாக்குங்கள் எனக் கேட்டு வருகிறோம். அப்படிச் செய்துவிட்டால் படத்தின் வருமானம் என்ன என்பது தெரிந்துவிடும்.

ஒரு நடிகரின் படம் குறித்து உண்மையான வசூல் என்னவென்று தெரிந்தால், அவர்களாகத் தானாக சுதாரித்துக் கொள்வார்கள். தயாரிப்பாளரும் இவ்வளவுதான் வியாபாரமே, இவருக்கு ஏன் இவ்வளவு சம்பளம் எனச் சுதாரிப்பார். நடிகர்களும் இதற்குத் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x