Published : 28 Oct 2016 10:21 AM
Last Updated : 28 Oct 2016 10:21 AM

கோலிவுட் கிச்சடி: பாலிவுட் கனவு

“இந்தத் தீபாவளி எனக்கு ஸ்பெஷல்” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மா.கா.பா. ஆனந்துக்கு ஜோடியாக அவர் நடித்திருக்கும் ‘கடலை’ நாளை வெளியாகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடித்த நான்கு தமிழ்ப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. அவற்றில் விஜய் சேதுபதியுடன் நடித்து நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருக்கும் சீனு ராமசாமியின் ‘இடம் பொருள் ஏவல்’ படமும் அடக்கம். இந்தப் படத்தை நவம்பர் இறுதியில் வெளியிட விஜய் சேதுபதியே முயற்சிகளை எடுத்துவருகிறாராம்.

இந்த நேரத்தில் மலையாளக் கரையோரத்திலிருந்து வந்த அழைப்பைத் தட்டாத ஐஸ்வர்யா ராஜேஷ், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோருடன் தலா ஒரு படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையில் ‘காக்கா முட்டை’ படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பைப் பார்த்து வியந்த பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால், தனது ‘டாடி’ இந்திப் படத்தில் நாயகியாக்கினார். இதன் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடந்துவருகின்றன. “எனது தாய்மொழியான தெலுங்கில் வாய்ப்பு அமையவில்லையே என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் பாலிவுட்டிலேயே வாய்ப்பு கிடைத்துவிட்டது. இது வெளியான பிறகு இந்தியா அறிந்த நடிகையாகிவிடுவேன். அதன் பிறகு டோலிவுட்டும் எனக்குக் கிடைத்துவிடும்” என்று தனது நம்பிக்கையோடு சொல்கிறார்.

திருவண்ணாமலைக் காதல்

‘திட்டக்குடி’ படத்தை இயக்கிய சுந்தரன் மீண்டும் மண்வாசனைக் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ‘ரங்கராட்டினம்’ என்னும் இந்தப் படத்தின் நாயகன் மகேந்திரன். நாயகி ஷில்பா. இவர்களுடன் 'நான் கடவுள்' ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ராயன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள்.

“ராட்டினம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் சந்தோஷப்படுத்தும் ஒரு விளையாட்டு. ரங்கராட்டினம் இன்னும் அதிகப்படியான சந்தோஷத்தைக் கொடுக்கும். அப்படித்தான் இந்தப் படமும். திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மையான காதல் கதையைப் படமாக்கியிருக்கிறேன். இதில் அந்த வட்டாரத்தின் மண்வாசனையும் காதலின் மகத்துவமும் இருக்கும்” என்று உறுதிகூறுகிறார் இயக்குநர்.

விஜயின் தேர்வு

ஒரு படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே தனது அடுத்த இரண்டு படங்களை முடிவு செய்துவிடுவதில் கில்லாடி நாயகன் விஜய். சமீபத்தில் ‘றெக்க’ படத்தின் இயக்குநர் ரத்தினசிவாவை அழைத்த விஜய் “படம் பார்த்தேன்... செம மாஸ்... எனக்கு கதை இருந்தா சொல்லுங்க” எனக் கேட்க, இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி. எதற்கும் இருக்கட்டும் என்று எப்போதோ விஜய்க்காகச் செய்துவைத்திருந்த கதையை கடகடவென்று அரை மணி நேரத்தில் சொல்லி முடித்தாராம். அசந்துபோன விஜய்,

“இந்தப் படத்தை கண்டிப்பா நாம பண்றோம்...” என்று சொல்லியிருக்கிறார். ‘றெக்க’ படத்தை விமர்சகர்கள் வறுத்து எடுத்திருந்தால் என்ன? முன்னணி நாயகனின் அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்பதால் ‘றெக்க’ கட்டிப் பறக்கிறது

இயக்குநரின் உற்சாகம்.

‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு மறுஆக்கத்தில், மலையாளத்தில் நடித்த அதே கதாபாத்திரத்தில் நடித்தார் மடோனா. அவரது முதல் தெலுங்கு முயற்சி கைகொடுக்காத நிலையில் தன் கவனம் முழுவதையும் கோடம்பாக்கத்தை நோக்கித் திருப்பியிருக்கிறார். விஜய் சேதுபதியுடன் அவர் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘கவண்’. இந்தப் படத்தில் மடோனா நடிக்க வேண்டிய பகுதிகளும் பாடல் காட்சிகளும் முடிந்துவிட்டன. இதையறிந்த தனுஷ், உடனடியாக தனது ‘பவர் பாண்டி' படத்துக்கு அழைக்க, ஓகே சொல்லிவிட்டார். இதற்கிடையில் சுமேஷ் லால் இயக்கிவரும் இந்திய ஆங்கிலத் தயாரிப்பான ‘ஹ்யூமன்ஸ் ஆஃப் சம் ஒன்’ படத்திலும் நடித்துவரும் மடோனா, தனது ‘எவர் ஆஃப்டர்’ என்ற இசைக் குழுவுடன் இசைப் பயணமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறந்துவிடுகிறார்.

வரிசையா கிளம்பிட்டாங்க!

விஜய் ஆண்டனி, ஜி.வி. பிரகாஷ், ஹிப் ஹாப் ஆதி என்று இசையமைப்பாளர்கள் நாயகர்களாக வெற்றிபெறும் சீசன் இது. இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார் சித்தார்த் விபின். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்துக்கு இசையமைத்துக்கொண்டே அந்தப் படத்தில் நடித்தவர், அடுத்தடுத்து நகைச்சுவை குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் கலக்கிவந்தார். தற்போது, நகுல் நடிக்கும் ‘பிரம்மா.காம்' படத்தில் இரண்டாவது நாயகன் ஆகிவிட்டார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடி, சந்தானத்தின் ஆஸ்தான கதாநாயகியான ஆஷ்னா ஜவேரி. அடுத்து ஹீரோவா எதிர்பார்க்கலாமா?

சம்மதித்த ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி திரையுலகில் நுழைந்து 45 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடைசியாக ‘புலி’ படத்தில் அவரை ஒரு சூனியக்காரிபோல சித்தரித்துவிட்டதாக, அவரது ரசிகர்கள் குமுறிக்கொண்டிருந்தார்கள். இன்னும்கூட ஃபேஷன் பரேடுகளில் கேட் வாக் செய்துவரும் ஸ்ரீதேவி, தனது மூத்த மகள் ஜான்வியின் சினிமா அறிமுகம் பற்றிய செய்திகளுக்கு அவசியமில்லாமல் செய்துவிட்டாராம். தமிழ், தெலுங்குப் படவுலகில் பல முன்னணி இயக்குநர்கள் ஜான்வியை அறிமுகப்படுத்துகிறோம் என்று கேட்டும் மறுத்த தேவி, ஜான்வியை அறிமுகப்படுத்தும்படி பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகருக்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். கரண் ஜோகர் இயக்கத்தில் வருண் தவன் ஜோடியாக ஜான்வி அறிமுகமாகவிருக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

நடித்துக் கொண்டே இயக்குவேன்

‘றெக்க' படத்தில் மாலா அக்கா கதாபாத்திரத்தில் ஒரு தேவதைபோல் வந்து அசத்தியிருந்தார் சிஜா ரோஸ். ஏற்கெனவே தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் ‘றெக்க’ அவருக்கு மீண்டும் வாய்ப்புகளைக் கொண்டுவந்திருக்கிறது. அவற்றில் ஒன்று படம் இயக்கும் வாய்ப்பு! சிஜா பிரபல மலையாள இயக்குநர் ராஜேஷ் பிள்ளையிடம் உதவி இயக்குநராகப் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். தற்போது ஒரு மலையாளப் படத்தை நடித்து இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். இதற்காகப் படங்களில் நடித்துக்கொண்டே திரைக்கதை எழுதும் வேலையிலும் மும்முரமாக இருக்கிறாராம் சிஜா ரோஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x