Published : 12 Feb 2016 11:51 AM
Last Updated : 12 Feb 2016 11:51 AM

கோலிவுட் கிச்சடி: எல்லாமே நயன்தாரா

கடந்த ஆண்டில் மிளிர்ந்த நட்சத்திரங்களில் நயன்தாரா முதலிடத்தில் இருந்தார். 2016-ம் ஆண்டும் ‘தனி ஒருத்தி’யாக அவரது சந்தை நிலவரம் ஏறுமுகமாகவே இருக்கிறது. இயக்குநர் சற்குணம், நயன்தாராவைக் கதையின் நாயகியாக நடிக்கவைத்து ஒரு படத்தைத் தயாரிக்கிறார். சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கும் இப்படத்தை சற்குணத்துடன் இணைந்து நேமிசந்த் ஜபக், ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கிறார்கள். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் ஹீரோ, ஹிரோயின் எல்லாமே நயன்தாராதான். நகைச்சுவை கலந்த திகிலூட்டும் க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்துக்கு இசை விவேக் மெர்வின்.

இரண்டு நாயகர்கள்!

நம்பிக்கையூட்டும் இளம் நாயகர்கள் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறார்கள். ‘வழக்கு எண்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘சோன் பப்டி’ படங்களைத் தொடர்ந்து ஸ்ரீ நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘வில் அம்பு’. இவருடன் இந்தப் படத்தில் இணைந்திருக்கும் இன்னொரு வளரும் நாயகன் ‘சிந்து சமவெளி’, ‘பொறியாளன்’ படங்களின் மூலம் கவனம் பெற்ற ஹரிஷ் கல்யாண். ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண் இருவரும் ஒரு காட்சியில்கூட சந்தித்துக்கொள்ள மாட்டார்களாம். “உண்மைக்கு வெகு அருகில் சென்று ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். சென்னையில் மட்டுமில்ல, கோவையிலும் சேரிகள் இருக்கின்றன. மொத்தப் படத்தையும் கோவையில்தான் உருவாக்கினோம்” என்கிறார் படத்தை இயக்கியிருக்கும் ரமேஷ் சுப்ரமணியம். இந்தப் படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே , சமஸ்க்ரிதி, சாந்தினி என ஒன்றுக்கு மூன்று கதாநாயகிகள்.



நலனுடன் கைகோர்க்கும் புயல்!

‘எலி’ திரைப்படத்தின் தோல்வியால் இருந்த இடம் தெரியாமல் நடிகர் சங்கத் தேர்தல் சமயத்தில் தலைகாட்டிய வடிவேலு தற்போது மீண்டும் நாயகனாகக் களமிறங்கிவிட்டார். இம்முறை உத்தரவாதமான வெற்றிக்கு ஏற்ற கதை வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்தவருக்கு இயக்குநர் நலன் குமரசாமியின் கதை பிடித்துப்போய்விட, உடனே படத்தை ஆரம்பிக்கலாம், படத்தை நானே தயாரிக்கிறேன் என்று பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். தற்போது வடிவேலுக்குக் கதாநாயகி தேடுவதில் களம் இறங்கியிருக்கிறதாம் நலன் குமரசாமியின் டீம்.



வசந்த பாலனுக்குக் கிடைத்த ஹீரோ!

வசந்தபாலன், ‘காவியத் தலைவன்’ படத்துக்குப் பிறகு தனது அடுத்த கதையைத் தேர்வு செய்துவிட்டார் என்ற செய்தியை முந்தி வழங்கியது இந்து டாக்கீஸ். அடையாறு, கூவம் ஆற்றுக்கரைகளை ஒட்டி வாழ்ந்து வந்த குடிசைப் பகுதி மக்களை மாற்று இடங்களில் அரசு குடியமர்த்துவதுதான் கதைக்களம். இதற்குப் பொருத்தமான நாயகனாகப் பிரபல நடிகரைத் தேடிக்கொண்டிருந்த வசந்த பாலன் அருள்நிதிக்குக் கதையைக் கூற, அவர் அசந்துபோய் ஓகே சொல்லியிருக்கிறாராம்.



அவருக்குப் பதிலாக ரகுல் ப்ரீத் சிங்

தமன்னா, சமந்தா, ஸ்ருதி ஹாசன் ஆகிய முன்னணிக் கதாநாயகிகள் ஒரு புதிய கதாநாயகியைக் கண்டு உஷாராகிறார்களாம் தெலுங்கு தேசத்தில். அவர், ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ போன்ற தமிழ்ப் படங்களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங். இதுவரை கவர்ச்சிப் பக்கம் போகாமல் இருந்த இவர், அந்தக் கொள்கையைத் தளர்த்திக்கொண்டதை அடுத்து, தெலுங்கில் முதல் வரிசைக் நாயகியாகியிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 தெலுங்குப் படங்களில் முன்னணி ஹீரோக்களோடு ஜோடி சேர்ந்திருக்கிறார். தற்போது ‘தனி ஒருவன்’ தெலுங்கு மறுஆக்கத்தில் ஜெயம் ரவி இடத்தில் ராம் சரண் தேஜா நடிக்க, நயன்தாரா இடத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.



வன நடை நாயகன்!

சைக்கிளிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டும் ஆர்யாவின் வெளியே தெரியா இன்னொரு முகம் காட்டுக்குள் நண்பர்களுடன் வன நடை செல்வது. இதை மோப்பம் பிடித்துக் கதை செய்த ‘மஞ்சப்பை’ படப்புகழ் இயக்குநர் ராகவன் ஆர்யாவின் கால்ஷீட்டை வாங்கி அசத்தியிருக்கிறார். காட்டுக்குள் நடக்கும் த்ரில்லர் கதையான இதில் ஆர்யா, ‘வனநடை வழிகாட்டி’யாக நடிக்க இருக்கிறாராம். படத்துக்கு இசை இளையராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x