

‘சட்டம் ஒரு இருட்டறை; அதில் வழக்கறிஞரின் வாதம்தான் விளக்கு’, ‘சாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் சமதர்மத்துக்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று பொருள்’, ‘கத்தியைத் தீட்டினாயே ஒழியப் புத்தியைத் தீட்டவில்லை நீ’, ‘கண்டனத்தை (விமர்சனம்) தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால், கையிலெடுத்த கடமையை நிறைவேற்ற முடியாது’, ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’, ‘விதியை நம்பி, மதியை (பகுத்தறிவு) பறிகொடுத்து வாழ்வதைப்போல் கேடு என்ன இருக்க முடியும்?’ - அண்ணாவின் திரைப்பட வசனத் தெறிப்புகள் இவை.
திராவிட அரசியல் இயக்கம், தனது லட்சியமாக வரித்துக்கொண்டிருந்த சமூக சமத்துவம், சாதி எதிர்ப்பு, கல்வி, மொழி உரிமைகள் உள்ளிட்ட கொள்கைகள், அதேபோல் பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகள், கண்மூடித்தனமான பக்திக்கு எதிரான சமூக விழிப்புணர்வு ஆகியவற்றைத் தாங்கி, ‘வசனமே ஆயுதம்’ என்கிற புரிதலோடு அவர் எழுதிய திரைப்பட வசனங்கள் மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.