ஒருவர் வாங்கிய கடனுக்காக குடும்பத்தினர், வாரிசுகள் பொறுப்பு ஆவார்களா? | சட்டமும் வழிகாட்டுதலும்

ஒருவர் வாங்கிய கடனுக்காக குடும்பத்தினர், வாரிசுகள் பொறுப்பு ஆவார்களா? | சட்டமும் வழிகாட்டுதலும்
Updated on
2 min read

சாலை விபத்துக்களின்போது இழப்பீடு பெற எவ்வளவு காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்?

சாலை விபத்துகளுக்கான இழப்பீடு Motor Vehicles Act, 1988 இன் கீழ் கோரப்படும். முன்னர் இந்த சட்டத்தின் பிரிவு 166(3) படி இழப்பீடு கோர 6 மாத காலவரையறை இருந்தது. ஆனால் தற்போது அந்த வரம்பு நீக்கப்பட்டுள்ளது. அதனால், தாமதமாக இருந்தாலும் சரியான காரணம் இருந்தால் இழப்பீடு கோருவதற்கு சட்டம் அதை அனுமதிக்கிறது.

இருப்பினும் நடைமுறையில், சம்பவம் நடந்ததும் விரைவாக மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான இழப்பீட்டு தீர்ப்பாயத்தி்ல் எப்ஐஆர், மருத்துவ ஆவணங்கள், மருத்துவ செலவுகள் போன்ற அனைத்து ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்வது நல்லது.

பொதுவாக இழப்பீடு கோர 6 மாதம் முதல் ஓராண்டுக்குள் மனு கொடுத்தால் அது வலுவானதாக கருதப்படும். எனவே, பாதிக்கப்பட்டவர் அல்லது அவரின் குடும்பத்தினர் உரிய சட்ட ஆலோசனை பெற்று இழப்பீடு கோர விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருவர் தவறுதலாகச் சிறைக்குச் சென்றால் அல்லது பொய்யான வழக்கில் சிக்க வைக்கப்பட்டால், அவர் இழப்பீடு கோர முடியுமா?

ஒருவர் தவறாக கைது செய்யப்பட்டாலோ அல்லது பொய்யான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டாலோ, அவர் இழப்பீடு கோருவதற்கு முழு உரிமை உள்ளது. தவறான கைது என்பது அடிப்படை மனித உரிமை மீறலாகக் கருதப்படுகிறது.

இத்தகைய வழக்குகளில், நீதிமன்றம் இழப்பீடு வழங்குவதோடு, தவறு செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடும். இது இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் 21இன் கீழ் அடிப்படை உரிமை மீறலாகும். இதற்காக அரசியலமைப்பு சட்டத்தின் அதிகாரம் 32இன் பிரகாரம் உச்ச நீதிமன்றத்திலும், அதிகாரம் 226 பிரகாரம் உயர் நீதிமன்றத்திலும் ரிட் மனு தாக்கல் செய்து உரிய இழப்பீடு கோரலாம்.

மேலும், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 250 அல்லது பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 227இன் படி தவறான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இழப்பீடு பெறலாம்.

இதற்கு கூடுதலாக, malicious prosecution என்ற அடிப்படையில் சிவில் வழக்கையும் தொடரலாம். மேலும் மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். இவ்வாறான வழக்குகளில், இழப்பீடு கோரும் போது தவறான கைது நடந்தது, என்று நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் உரிய இழப்பீட்டை வழங்கும்.

ஒருவர் வாங்கிய கடனுக்காக அவருடைய குடும்பத்தினர் அல்லது வாரிசுகள் சட்டப்படி பொறுப்பாவார்களா?

ஒருவர் வாங்கிய கடனுக்காக அவருடைய குடும்பத்தினர் அல்லது வாரிசுகள் தானாகவே சட்டப்படி பொறுப்பாவார்கள் என்ற புரிதல் பொதுமக்களிடையே அதிகமாக உள்ளது. ஆனால், சட்டத்தின் நிலைப்பாடு அதைவிட நுணுக்கமானதாகும்.

பொதுவாக, ஒருவர் வாங்கிய கடன் என்பது அவருடைய தனிப்பட்ட பொறுப்பாகும். அவர் உயிருடன் இருக்கும் வரை, அந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியது அவருடைய கடமையாகும். ஆனால் அவர் இறந்த பிறகு, அந்தக் கடன் அவருடைய வாரிசுகளுக்கு நேரடியாக மாற்றப்படாது.

வாரிசுகள் தங்களது தனிப்பட்ட சொத்துக்களை பயன்படுத்தி அந்தக் கடனை அடைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எனினும், மறைந்த நபரின் சொத்துகளை (estate) வாரிசுகள் பெற்றிருந்தால், அந்தச் சொத்துகளின் மதிப்பிற்குள் மட்டுமே கடனைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு.

இதுவே “estate liability” என்ற சட்டக் கோட்பாடு ஆகும். மேலும், வாரிசுகள் கடனுக்கு உத்தரவாதம் (guarantor) அளித்திருந்தால் அல்லது அவர்கள் கூட்டாக கடன் வாங்கியிருந்தால், அப்போது அவர்கள் தனிப்பட்ட முறையிலும் பொறுப்புக்குட்படுவார்கள்.

ஆகவே, வாரிசுகள் அனைத்து சூழ்நிலைகளிலும் கடனைச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை; அவர்கள் பெற்ற சொத்துகளின் வரம்புக்குள் மட்டுமே பொறுப்பு ஏற்படும் என்பது முக்கியமான சட்ட நிலைப்பாடாகும்.

வாடகைதாரர் ஒருவரை வீட்டைக் காலி செய்யச் சொல்லும்போது வீட்டு உரிமையாளர் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் யாவை?

ஒரு வாடகைதாரரை வீட்டை காலி செய்யச் சொல்லும்போது, வீட்டு உரிமையாளர் அவரை நேரடியாகவோ அல்லது வலுக்கட்டாயமாகவோ வெளியேற்ற முடியாது என்பது சட்டத்தின் தெளிவான நிலைப்பாடாகும். இது சட்டத்தால் பாதுகாக்கப்படும் உரிமையாகும்.

முதலில், வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் உரிய சட்ட நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும். பொதுவாக, Transfer of Property Act, 1882-இன் பிரிவு 106 படி, குறைந்தது 15 நாட்கள் முன் நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் (ஒப்பந்தத்தின் தன்மைக்கு ஏற்ப கால அவகாசம் மாறுபடலாம்).

அதன்பிறகும் வாடகைதாரர் வீட்டை காலி செய்ய மறுத்தால், உரிமையாளர் நீதிமன்றத்தில் eviction suit தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். மேலும், தமிழ்நாட்டில், தமிழ்நாடு நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சட்டம், 2017 (TNRRRLT Act) அமலில் உள்ளது.

இச்சட்டத்தின் கீழ், landlord மற்றும் tenant ஆகியோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் படி ரெண்ட் அதாரட்டி முன் மனு தாக்கல் செய்து eviction பெறலாம்.

குறிப்பாக, வாடகைதாரர் வாடகை செலுத்தாமல் இருப்பது, ஒப்பந்த விதிமுறைகளை மீறுவது, அல்லது landlord-க்கு சொந்த பயன்பாட்டிற்காக வீடு தேவையாக இருப்பது போன்ற காரணங்களின் அடிப்படையில் வெளியேற்றம் கோரலாம்.

மேலும், tenancy agreement பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சமாகும். ஆகவே, வாடகைதாரரை வெளியேற்றும் போது சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.

- ஆ.தாமோதரன், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்; தொடர்புக்கு: prosecutoradamodaran@gmail.com

ஒருவர் வாங்கிய கடனுக்காக குடும்பத்தினர், வாரிசுகள் பொறுப்பு ஆவார்களா? | சட்டமும் வழிகாட்டுதலும்
அடிதடி வழக்கில் ‘சமரசம்’ ஏற்பட்டால்...? | சட்டமும் வழிகாட்டுதலும்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in