நல்வழியாளர் பாதுகாப்புச் சட்டம் தெரியுமா?

நல்வழியாளர் பாதுகாப்புச் சட்டம் தெரியுமா?
Updated on
2 min read

இந்தியாவில் சாலை விபத்துகளின் போது காவல்துறையின் விசாரணை மற்றும் நீதிமன்ற அலைச்சலுக்குப் பயந்து, பொதுமக்கள் விபத்தில் சிக்கியோருக்கு உதவ முன்வராமல் ஒதுங்கிச் செல்வதே பெரிய பிரச்சினையாக இருந்தது.

விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரமான ‘கோல்டன் ஹவர்' எனப்படும் உயிர் காக்கும் நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்தால் 80 சதவீத உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பதால், பொதுமக்களின் பயத்தைப் போக்கி அவர்களை உதவச் செய்வதே இச்சட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

சட்டத்தின் பின்னணி

பொதுநல வழக்கு ஒன்றில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. சாலை விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களுக்கு உதவி செய்பவர்கள், நல்வழியாளர்கள் (Good Samaritan) என அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் சந்திக்கும் சட்ட ரீதியான விளைவுகள் மற்றும் காவல் நிலைய அலைச்சல்களைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வழிகாட்டுதல்களை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, நல்வழியாளர் பாதுகாப்புச் சட்டம் (Good Samaritan Law) அமலுக்கு வந்தது. மேலும் 2020ஆம் ஆண்டில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

இதன்படி, நல்வழியாளர்கள் மீது எவ்வித சிவில் அல்லது கிரிமினல் நடவடிக்கைகளும் பாயாமல் தடுக்க சட்டப் பாதுகாப்பு உருவாக்கப்பட்டது. மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தும் முறைகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

அருணின் உதாரணம்

இச்சட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அருண் என்பவரின் உதாரணம் மூலம் அறியலாம். சாலையில் கார் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய ஒருவரை அருண் மீட்டு ஆட்டோ மூலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கிறார்.

அங்குள்ள ஊழியர்கள் அவரது பெயர், முகவரி மற்றும் சிகிச்சைக் கட்டணத்தைக் கேட்கும் போது, 2020-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய விதிகளின்படி, நல்வழியாளரான அருண் தனது தனிப்பட்ட விவரங்களைத் தரவேண்டிய கட்டாயமில்லை என்ற தனியுரிமை அவருக்குக் கேடயமாக நிற்கிறது.

இதனால் அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட முடிகிறது, மருத்துவர்களும் பணத்தைக் கோராமல் சிகிச்சையைத் தொடங்குகின்றனர்.

விலக்குகளும் விதிகளும்

விபத்து குறித்து காவல்துறையினர் அருணிடம் விசாரணை நடத்த விரும்பினாலும், அவரை நேரில் காவல் நிலையத்திற்கு வரும்படி வற்புறுத்த முடியாது. அவர் சாட்சியம் அளிக்கச் சம்மதித்தால் மட்டுமே, அவரது இருப்பிடத்திற்கே வந்து ஒரே ஒருமுறை விசாரணை நடத்த வேண்டும்; நீதிமன்ற வாக்குமூலத்தையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் பதிவு செய்யலாம்.

ஒருவேளை விபத்துக்குள்ளான நபர் உயிரிழந்தால் கூட, காப்பாற்ற முயன்ற அருண் மீது எந்த வழக்கும் தொடர முடியாது. மேலும், மருத்துவச் செலவுப் பொறுப்பையும் அவர் ஏற்க வேண்டியதில்லை.

இவற்றுடன், நல்வழியாளர்களின் இந்த உரிமைகள் குறித்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தங்கள் வளாகங்களில் பொது மக்கள் கண்ணில் படும் இடங்களிலும், இணையதளங்களிலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட உள்ளூர் மொழிகளில் விழிப்புணர்வு சாசனமாகப் பதிப்பித்து வைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நல்வழியாளர் பாதுகாப்புச் சட்டம் தெரியுமா?
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in