எளிமையை உணர்த்திய ஏழைப் பங்காளன்!

எளிமையை உணர்த்திய ஏழைப் பங்காளன்!
Updated on
2 min read

காலத்தில் 2025 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்ததைப் போல் நாம் கற்பனை செய்துகொள்வோம். அன்றைய ரோமானியப் பேரரசின் கீழ் இருந்த ஒரு பகுதி யூதேயா. அதில் பெத்லகேம் என்கிற ஊரின் வயல்வெளியில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

எங்கும் போர்த்தியிருக்கும் பனியும் வானில் மின்னும் நட்சத்திரங்களும் நம்மை வரவேற்கின்றன. அதோ… ஆடுகளை நம்பி வாழும் எளிய, சாமானிய மக்களாகிய மேய்ப்பர்கள் பலர் எங்கோ வேகவேகமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரை நிறுத்தி, “எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்கிறோம். “நாங்கள் குளிரில் நடுங்கியபடி மந்தையைக் காத்துக்கொண்டிருந்தோம். அப்போது பிரகாசமான ஒளி எங்கள் முன்பாகச் சூழ்ந்தது.

நாங்கள் பயந்து நடுங்கிக் கூர்ந்து கவனித்தபோது அந்தப் பிரகாசமான ஒளியின் நடுவே ஒரு தேவதூதர் நின்றுகொண்டிருந்தார். அவர் எங்களைப் பார்த்து ‘பயப்படாதிருங்கள்! நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்ல வந்திருக்கிறேன்.

இன்று, பெத்லகேமில் கடவுளின் மகனாகிய கிறிஸ்து பிறந்திருக்கிறார். அவர் மக்களை மீட்பார்! அவரைத் துணிகளில் சுற்றி தீவனத் தொட்டியில் படுக்க வைத்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்’ என்று சொன்னார்.

பல காலமாக வேதமும் தீர்க்கதரிசிகளும் கூறிவந்த இறைமகன் பிறந்திருக்கும் இடத்தைக்கண்டுபிடித்து அவரைத் தரிசிக்க ஓடிக்கொண்டிருக்கிறோம்” என்று அவர் கூறிவிட்டுச் செல்ல, நாம் அவரைப் பின் தொடர்கிறோம். இதோ.. மேய்ப்பர்கள் கூட்டம் கடைசியில் ஒரு வீட்டின் மாட்டுத் தொழுவத்தில் குழந்தை இயேசுவைக் கண்டுபிடித்து விட்டார்கள்.

எதற்காக இந்த இடம்? - அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. ஒரு தீவனத் தொட்டியில் வைக்கோலைப் போட்டு அதன்மேல் விரிக்கப்பட்டிருந்த துணியில் குழந்தை இயேசு கிடத்தப்பட்டிருக்கிறார். தெய்வீகப் புன்னகை முகத்தில் ஒளிர்கிறது. கடவுள் நினைத்திருந்தால் தங்கத் தொட்டிலில் பிறந்திருக்கலாம்.

ஆனால், ஏன் மாட்டுத் தொழுவத்தில் சிரித்துக்கொண்டிருக்கிறார்? இந்தத் தேசத்தை ஆளும் அரசனுக்கும் இங்கே வாழும் அதிகாரிகளுக்கும் அறிஞர்களுக்கும் தனது மனித அவதாரத்தை அறிவிக்காமல் ஏன் எளிய மக்களாகிய மேய்ப்பர்களுக்கு அறிவித்திருக்கிறார்? தொழுவம் என்பது வீட்டு விலங்கு களுக்கு உணவிட்டுப் பராமரிக்கப்படுகிற ஒதுக்குப்புறமான இடம்.

தெய்வக் குழந்தை பிறப்பதற்கு ஏற்ற இடமா இது! அவர் நினைத்திருந் தால், தற்போது இந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருக்கும் சீசர் அகஸ்டஸ் போல ஆடம்பர அரண்மனையில் பிறந்திருக்கலாம். ஆனால், ஏன் கடவுள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்? கடவுள் பூமிக்கு வந்தது அதிகார பலத்தைக் காட்ட அல்ல; மனித குலத்துக்குத் தனது கருணையின் எல்லையைக் காட்ட. அதிகாரத்தில் இருப்பவர்களின் அகந்தையை அகற்ற. பிறப்பால் உயர்வு, தாழ்வு காணும் உள்ளத்தின் அழுக்கினைக் கழுவத்தான் தொழுவத்தில் பிறந்தார் மனிதத்தின் தோழர்.

அரசனும் கடவுளும்: ஒவ்வொருவரும் தங்கள் பெயரைப் பதிவு செய்வதற்காக தங்களுடைய பிறந்த ஊருக்கு வரவேண்டும் என்று ரோம சாம்ராஜ்ஜியத்தின் பேரரசன் சீசர் அகஸ்டஸ் ஒரு சட்டத்தை அமல்படுத்தினான். இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய ஜோசப் பிறந்த ஊர் பெத்லகேம்.

எனவே, பெயரைப் பதிவு செய்ய அவரும் நிறைமாத கர்ப்பவதியான மரியாளும் இங்கே வந்திருந்தபோது அவர்களுக்குக் கிடைத்தது இந்தத் தொழுவம்தான். அதை அந்த பெற்றோர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

அரசனோ, தான் ஆடம்பரமாக வாழவும் மக்களிடம் மேலும் வரி வசூலிக்கவும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் செய்ய உத்தரவிடுகிறான். தனது ஆட்சியின் கீழ் எத்தனை கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்கிற அதிகாரத்தைக் காட்ட விழைகிறான்.

ஆனால், அந்த அரசனின் ராஜ்ஜியத்தின் ஒரு மூலையில் அவன் அறிந்தும்கூட இருக்க முடியாத ஒரு சிற்றூரில் கழுதைகளுக்கான உணவுத் தொட்டியில் தூங்கி, கடவுளுடைய குமாரன் கண்விழிக்கும் காட்சியைப் பார்க்கிறவர்களின் உள்ளம் பனியாகக் கரைந்தோடிவிடும்.

அன்பு செலுத்துவோம்: அந்தச் சமயத்தில் கீழ்த்திசை தேசங்களைச் சேர்ந்த மூன்று ஞானிகள் தொழுவத்தை வந்து அடைகிறார்கள். வெவ்வேறு தேசங்களில் இருந்து டிரெஸ், ரேயெஸ், மேகோஸ் ஆகிய மூன்றுபேர் எப்படி இங்கே வந்தார்கள்! மேகோஸிடம் கேட்டால், “எங்களுக்கு வழிகாட்டிய

படி கிழக்கு வானில் நகர்ந்துவந்த வால் நட்சத்திரம், இறைமகன் பிறந்திருக்கும் இந்தத் தொழுவத்துக்கு மேலாக வந்து நகராமல் நின்றுவிட்டது.

இது எங்கள் தேடலுக்குக் கிடைத்த பரிசு” என்று கூறிவிட்டு பொன்னையும் வெள்ளைப் போளத்தையும் தெய்வக் குழந்தையின் முன்னால் காணிக்கையாக வைத்து வணங்கிவிட்டு நிறைவோடு தங்கள் ஒட்டங்களில் ஏறி திரும்பிச் செல்கிறார்கள்.

அன்பின் வடிவம் அரவணைப்பும் ஆறுதலும் பாதுகாப்புத் தருதலும் மட்டுமல்ல; மிக முக்கியமாக இல்லாதவர்க்கு ஈதலும்தான். அதனால், இந்த கிறிஸ்துமஸ் நாளில் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் அனைவர் மீதும் அன்பைப் பொழிவோம்!

எளிமையை உணர்த்திய ஏழைப் பங்காளன்!
டிச.25-ல் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவது ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in